இஸ்லாமாபாத், பாகிஸ்தான்: முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான், தெஹ்ரிக் இ இன்சாப் என்கிற பெயரில் அரசியல் கட்சியை 1996-ல் தொடங்கி இப்போது ஆட்சியையே பிடித்துவிட்டார்.
ஆனால் இப்போது வரை பாகிஸ்தானின் பொருளாதார பிரச்னைகளையும், தீவிரவாதம் சார்ந்த பிரச்னைகளையும் தீர்க்க முடியாமல் திண்டாடிக் கொண்டு இருக்கிறார்.
சமீபத்தில் கூட, மொஹரம் பண்டிகை காலங்களில், பாகிஸ்தானில் ஒரு லிட்டர் பாலின் விலை சுமாராக 120 முதல் 140 ரூபாய் வரை விற்க்கப்பட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். இதற்கு மேல் மோசமான பொருளாதார சூழலை வெளிப்படுத்த முடியுமா என்ன..? சரி கடன் பிரச்னைக்கு வருவோம்.
ஒரு வருடத்தில்
இம்ரான் கான் பாகிஸ்தானுக்கு பிரதமராக பொறுப்பு ஏற்று சுமாராக ஒரு வருடம் தான் முடிந்து இருக்கிறது. அந்த ஒரு வருடத்துக்குள் விண்ணைத் தொடும் அளவுக்கு கடனை வாங்கிக் குவித்து இருக்கிறார்களாம். இம்ரான் கான் அரசு ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பின் மட்டும் மொத்தம் 7,509 பில்லியன் பாகிஸ்தானிய ரூபாயை கடனாக வாங்கி இருப்பதாக பாகிஸ்தானிய ஊடகங்களில் இருந்து செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன.
வரலாற்று உச்சம்
இது பாகிஸ்தான் வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப் பெரிய கடன் தொகை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆகஸ்ட் 2018 முதல் இந்த ஆகஸ்ட் 2019 வரையான ஒரு வருட காலத்தில் மட்டும் பாகிஸ்தான் அரசு, வெளிநாடுகளில் இருந்து கடனாக சுமார் 2,804 பில்லியன் பாகிஸ்தானிய ரூபாயை பெற்று இருக்கிறது. இந்த வெளிநாட்டுக் கடன் போக மற்ற கடன்கள் எல்லாம் சேர்த்து சுமாராக 4,705 பில்லியன் பாகிஸ்தானிய ரூபாய் கடன் வாங்கி இருக்கிறார்கள்.
ஸ்டேட் பேங்க் ஆஃப் பாகிஸ்தான்
ஆக மொத்தம் 7,509 பில்லியன் டாலர் கடனை கடந்த ஒரு வருடத்தில் மட்டும் வாங்கி இருக்கிறது இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் அரசு. அதோடு ஸ்டேட் பேங்க் ஆஃப் பாகிஸ்தானின் கணக்குப் படி, பாகிஸ்தான் நாட்டின் கடன் சுமார் 31.786 ட்ரில்லியன் பாகிஸ்தானிய ரூபாய் அளவுக்கு அதிகரித்து இருப்பதாகச் சொல்கிறது. அதுவும் கடந்த ஜூன் 2019 வரையான கணக்கு தானாம்.
மொத்த கடன்
ஏற்கனவே பாகிஸ்தானிய அரசு, அடுத்த ஐந்து ஆண்டுகளில், தங்கள் (பாகிஸ்தான் நாட்டின்) கடன் அளவு, 31.78 ட்ரில்லியன் பாகிஸ்தானிய ரூபாயில் இருந்து, சுமாராக 13.7 ட்ரில்லியன் பாகிஸ்தானிய ரூபாய் அதிகரிக்கலாம் எனச் சொல்லி இருக்கிறார்களாம். அதாவது, தற்போது இருக்கும் கடனை விட சுமார் 47 சதவிகிதம் கடன், மேலும் அதிகரிக்க இருக்கிறது. ஆக பாகிஸ்தான் அரசின் கணிப்புகள் படி 5 ஆண்டுகள் முடிவில் பாகிஸ்தானின் மொத்த கடன் சுமாராக 45 ட்ரில்லியன் பாகிஸ்தானிய ரூபாய் அளவைத் தொடலாம்.
நிதி அமைச்சர்
கடந்த ஏப்ரல் 2019-ல் தான் "பாகிஸ்தான் நாட்டின் அடிப்படை கடன்களின் அளவு நம்மை பயமுறுத்தும் அளவுக்கு அதிகரித்து இருக்கிறது. சொல்லப் போனால் பாகிஸ்தான் கிட்ட தட்ட திவால் ஆகும் நிலையில் இருக்கிறது" எனச் சொல்லி இருந்தார் பாகிஸ்தானின் நிதி அமைச்சர் ஆஸாத் உமர். இப்படி ஒரு நாட்டின் நிதி அமைச்சரே தன் நாடு திவால் ஆகும் நிலையில் இருக்கிறது எனச் கதறுவதைக் கேட்கும் போதே, இங்கு நம் இந்தியாவில் இருக்கும் நிலைமை தான் நினைவுக்கு வருகிறது.
பிரதமர்
பல சிக்கலான மத வாத சட்டங்கள், பழைமைவாதம், போதாக் குறைக்கு தீவிரவாத சிக்கல், மோசமான நிலையில் தவிக்கும் பொருளாதாரம் கொண்ட ஒரு நாட்டின் பிரதமராக, இம்ரான் கான் தன்னால் முடிந்ததைச் செய்து நாட்டைக் காப்பாற்ற முயற்சித்துக் கொண்டு இருக்கிறார். பல உலக நாட்டுத் தலைவர்களைச் சந்தித்து பாகிஸ்தான் பொருளாதாரத்தைச் சரி செய்ய கடன் கேட்டுக் கொண்டே தான் இருக்கிறார் இம்ரான் கான். அதில் சீனாவும், சவுதி அரேபியாவும் உதவிக் கரம் நீட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.