மத்திய அரசு, தன் ஊழியர்களுக்கு, டிஏ என்கிற படிக் காசை (DA - Dearness Allowances) 5 சதவிகிதம் அதிகரித்து இருக்கிறார்களாம். இந்த செய்தி கிட்டதட்ட 2019-ம் ஆண்டு தீபாவளி பரிசு போல அரசு ஊழியர்கள் காதில் விழுந்து இருக்கிறது. தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு, சம்பளத்தில் படிக் காசு என்பதும் கொடுக்கப்பட்டு வருகிறது.
இந்த படிக் காசு 12 சதவிகிதமாக இருக்கிறது. ஆனால் இப்போது உயர்த்திய 5 சதவிகிதத்தையும் சேர்த்து இனி மத்திய அரசு ஊழியர்களுக்கு படிக் காசு என்கிற டியர்னெஸ் அலவன்ஸ் 17 சதவிகிதம் வழங்கப்படுமாம். இதை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரே சொல்லி இருக்கிறார். மத்திய அரசு ஊழியர்களுக்கு 5 சதவிகிதம் படிக் காசு என்கிற டியர்னெஸ் அலவன்ஸை உயர்த்த, கேபினெட் அமைச்சரவையும் ஒப்புதல் கொடுத்து இருக்கிறார்களாம். தற்போதைய தோராய கணக்குப் படி, இந்த 5 சதவிகித படிக் காசு (டியர்னெஸ் அலவன்ஸ்) உயர்வால் சுமார் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 65 லட்சம் ஓய்வு ஊதியதாரர்கள் நேரடியாக பலன் பெறுவார்களாம்.
இப்படியாக ஒரு பக்கம் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வருடா வருடம் அல்லது ஒரு குறிப்பிட்ட வருடங்களுக்கு ஒரு முறை என முறையாக சம்பள உயர்வுகளும் பதவி உயர்வுகளும் கிடைத்து விடுகின்றன. ஆனால் தனியாரில் வேலை பார்ப்பவர்களுக்கு தான் இப்படி எந்த ஒரு சமூக பாதுகாப்பு அல்லது வேலை பாதுகாப்பு திட்டங்களும் இருப்பது இல்லை. எப்போது தங்கள் வேலை பறி போகும், வேலை பறி போனால், அடுத்த மாதம் கட்ட வேண்டிய இ எம் ஐ-களை எல்லாம் எப்படி சமாளிப்பது என பயத்திலேயே உறைந்து போய்க் கிடக்க வேண்டி இருக்கிறது.
அரசுத் துறைகளைப் போல தனியாரிலும், ஓரளவுக்கு மனசாட்சி உடன், நல்ல சம்பள உயர்வுகள் மற்றும் பதவி உயர்வுகள் கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்..? அட போங்க பாஸ், இன்னக்கி இருக்குற வேலை நாளைக்கி இருக்குமான்னு தெரியல, இப்ப வந்து சம்பள உயர்வு, பதவி உயர்வு பத்தி எல்லாம் பேசிக்கிட்டு இருக்கீங்க என நீங்கள் கேட்கும் கேள்வி கணீரென்று கேட்கிறது. எதிர்காலம் இன்னும் எவ்வளவு பாதுகாப்பற்றதாக இருக்குமோ தெரியவில்லை..!