Recommended Video
டெல்லி: முகேஷ் அம்பானி தலைமையின் கீழ் சிங்கம் போல், வந்த மூன்றே வருடங்களில் இந்தியாவின் 30 சதவிகித டெலிகாம் சந்தையை வளைத்துப் போட்ட ரிலையன்ஸ் ஜியோ, இப்போது ஒரு சிக்கலில் மாட்டிக் கொண்டு இருக்கிறது.
இந்த சிக்கலால். இனி ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், தன் வாடிக்கையாளர்களிடம் இருந்து ஒரு நிமிடத்துக்கு ஆறு பைசா வசூலிக்கப் போகிறார்களாம்.
இந்த ஒரு நிமிடத்துக்கு ஆறு பைசா என்பது, யாருடன் பேசினால் உண்டு, யாருடன் பேசினால் கிடையாது, எதற்கு வசூலிக்கிறார்கள் போன்ற விவரங்களை விரிவாகப் பார்ப்போம்.
ஐயூசி கட்டணம்
உதாரணமாக ஜியோ நெட்வொர்க்கில் இருந்து ஏர்டெல் நெட்வொர்க்குக்கு ஒருவர் கால் செய்கிறார் என்றால், இப்போது ஜியோ, ஏர்டெல் நிறுவனத்தில் காலை கனெக்ட் செய்து கொள்ள ஒரு நிமிடத்துக்கு 6 பைசா கட்டணம் செலுத்த வேண்டும். இதை ஆங்கிலத்தில் Interconnect Usage Charge என்பார்கள். இது எல்லா நெட்வொர்க்குக்கும் பொருந்தும். இந்த ஐயூசி கட்டணம் தான் இப்போது ஜியோவும் தன் வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலிக்கப் போகிறார்கள். இந்த வசூல் திட்டம் இன்றில் இருந்தே நடைமுறைக்கு வருகிறது.
யாருடன் பேசினால்
ரிலையன்ஸ் ஜியோ வெளியிட்ட அறிக்கையில், இனி ஜியோ வாடிக்கையாளர்கள், வேறு நெட்வொர்க்குகளில் உள்ள எண்களுக்கு தொடர்பு கொள்ளும் போது, ஒரு நிமிடத்துக்கு 6 பைசா கட்டணம் வசூலிக்கப்படும் எனச் சொல்லி இருக்கிறார்கள். இப்படி ஒரு நெட்வொர்க்கில் இருந்து இன்னொரு நெட்வொர்க்குக்கு கால் செய்யும் போது, முறையாக ஐயூசி கட்டணங்களைச் செலுத்த வேண்டும் என்கிற விதி மாற்றப்படும் வரை இனி ஜியோ வாடிக்கையாளர்கள் இந்த 6 பைசா கட்டணத்தைச் செலுத்த வேண்டும் எனச் சொல்லி இருக்கிறார்கள்.
ஆனால் லாபம்
ஜியோவின் கடந்த 3 வருட வரலாற்றில் முதல் முறையாக வாய்ஸ் காலுக்கு, தன் வாடிக்கையாளர்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்க இருக்கிறது என்பதையும் கவனிக்க வேண்டி இருக்கிறது. ஆனால் முகேஷ் அம்பானி இந்த பிரச்னையை வேறு விதமாக டீல் செய்து இருக்கிறார். தற்போது ஒரு நிமிடத்துக்கு 6 பைசா என வசூலிக்கும் பணத்துக்கு இணையாக கூடுதல் டேட்டாவை, இலவசமாக வழங்க இருப்பதாகச் சொல்லி இருக்கிறது ரிலையன்ஸ் ஜியோ.
யாருக்கு கிடையாது
ஜியோ நெட்வொர்க்கில் இருக்கும் வாடிக்கையாளர், தங்கள் நெவொர்க்குக்கு உள்ளேயே ஜியோ ஃபோன், ஜியோ லேண்ட் லைன் போன்றவைகளைப் பயன்படுத்தினால் இந்த ஒரு நிமிடத்துக்கு 6 பைசா என்கிற கட்டணம் வசூலிக்கப்படாதாம். அதே போல ஆன்லைன் கால் வசதிகளான ஃபேஸ் டைம், வாட்ஸப் கால், கூகுள் டுவோ போன்றவைகளைப் பயன்படுத்தி பேசினாலும், இந்த ஐயூசி கட்டணம் வசூலிக்கப்படாது எனச் சொல்லி இருக்கிறார்கள்.
செலவு
ரிலையன்ஸ் ஜியோ கம்பெனி, கடந்த 3 ஆண்டுகளில் சுமார் 13,500 கோடி ரூபாயை, இந்த ஐயூசி கட்டணங்களாக பார்தி ஏர்டெல், வோடாஃபோன் ஐடியா போன்ற போட்டி நிறுவனங்களுக்கு கட்டணமாகச் செலுத்தி இருக்கிறார்கள். தற்போது, இந்த இழப்பை சரி கட்டத் தான் இப்போது தன் வாடிக்கையாளர்களிடம் இருந்து ஒரு நிமிடத்துக்கு 6 பைசா என கட்டணம் வசூலிக்க இருக்கிறார்களாம். 3 வருடங்களுக்குப் பின் முதல் முறையாக ஜியோ வாடிக்கையாளர்கள் வாய்ஸ் காலுக்கு கட்டணம் செலுத்தப் போகிறார்கள். அனேகமாக செலுத்திக் கொண்டு இருப்பார்கள்.
பணப் பிரச்னை போல
இது நாள் வரை ஆஃபர்களை அள்ளித் தெளித்துக் கொண்டு இருந்த ஜியோ முதல் முறையாக தன்னால், கட்டணங்களைச் செலுத்த முடியாமல், பாரத்தை தன் வாடிக்கையாளர்கள் தலையில் ஏற்றி இருக்கிறது. ஆக ரிலையன்ஸ் ஜியோ கூட போதுமான பணம் இல்லாமல் இயங்குகிறதோ..? இனி ஜியோ ஆஃபர்கள் எல்லாம் பழைய படி வராமல் போய்விடுமோ..? என்கிற அச்சம், இந்த செய்தியைப் படிக்கும் போது தானாகவே வந்து விடுகிறது. இனி ரிலையன்ஸ் ஜியோ என்ன செய்யும்..? பொறுத்து இருந்து பார்ப்போம்..!