உலகின் முன்னணி ரேட்டிங் நிறுவனங்களில் ஒன்றான மூடீஸ் இன்று (அக்டோபர் 10, 2019, வியாழன்) ஒரு பகிர் தகவலைச் சொல்லி இருக்கிறது.
இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சிக் குறியீடுகளில் முக்கியமான ஒன்றாக இருக்கும் ஜிடிபி, 2019 - 20 நிதி ஆண்டுக்கு 5.8 சதவிகிதமாக இருக்கலாம் எனக் கணித்து இருக்கிறது.
அதோடு அடுத்த சில ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதார ஜிடிபி வளர்ச்சி 8 சதவிகிதம் தொடுவதற்கான சாத்தியக் கூறுகள் மிக மிகக் குறைவு என்றும் சொல்லி இருக்கிறது.
குறைவு
இதில் என்ன பெரிய விஷயம் இருக்கிறது எனக் கேட்கிறீர்களா..? இதுவரை பல்வேறு ரேட்டிங் நிறுவனங்கள், வங்கிகள், பொருளாதார அமைப்புகள் வெளியிட்ட கணிப்புகளிலேயே மூடீஸ் நிறுவனத்தின் கணிப்பு தான் மிகக் குறைவு. சரி ஜிடிபி குறைந்தால் என்ன..? இந்தியா அடுத்த 2023 - 24 நிதி ஆண்டுக்குள் இந்தியாவின் பொருளாதாரம் 5 ட்ரில்லியன் டாலர் கொண்ட பொருளாதாரமாக வளர வேண்டும் என இலக்கு நிர்ணயித்தார்கள்.
5 ட்ரில்லியன்
இந்தியப் பொருளாதாரம், அடுத்த 2023 - 24-க்குள் 5 ட்ரில்லியன் டாலர் கொண்டதாக வளர வேண்டும் என்றால், சுமார் 8 சதவிகிதம் ஜிடிபி வளர்ச்சி வேண்டும் என நிதி அமைச்சக வட்டாரங்களே சொல்லிக் கொண்டு இருந்தார்கள். ஆனால் இப்போது 6.5 சதவிகித வளர்ச்சியே கேள்விக்கு உள்ளாகி இருக்கிறது. இப்போது மூடிஸ் 2019 - 20-க்கு வெறும் 5.8% வளரலாம் எனக் கணித்து இருக்கிறது. மூடிஸ் மட்டும் அல்ல மற்ற பல நிறுவனங்களும் தொடர்ந்து இந்தியாவின் ஜிடிபி கணிப்புகளைக் குறைத்துக் கொண்டே தான் இருக்கிறார்கள்.
ஆசிய வளர்ச்சி வங்கி
கடந்த மாதம் ஆசிய வளர்ச்சி வங்கி (Asian Development Bank), 2019 - 20 நிதி ஆண்டுக்கு இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 6.5 சதவிகிதம் வரை இருக்கலாம் எனக் கணித்து இருக்கிறது. அதற்கு முன் இதே காலத்தில் இந்தியா சுமாராக 7.0 சதவிகிதம் வரை வளரலாம் எனச் சொல்லி இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆக 0.5 சதவிகிதம் தன் கணிப்பை குறைத்துக் கொண்டது.
ஓ இ சி டி
ஆங்கிலத்தில் OECD - Organisation of Economic Co-operation and Development என்று அழைக்கப்படும் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சி அமைப்பின் கணிப்புகளும் கடந்த மாதம் வெளியானது. இவர்களும் 2019 - 20 நிதி ஆண்டுக்கு இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 5.9 சதவிகிதம் வரை இருக்கலாம் என தங்கள் கணிப்பை குறைத்துக் கொண்டார்கள். இதற்கு முன் இதே காலகட்டத்தில் இந்தியா 7.4 சதவிகிதம் வரை வளரலாம் எனச் சொல்லி இருந்தார்கள்.
எஸ் அண்ட் பி
ஸ்டாண்டார்ட் அண்ட் பூர் என்கிற மற்றொரு பெரிய ரேட்டிங் நிறுவனம் கூட, 2019 - 20 நிதி ஆண்டுக்கு இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 6.3 சதவிகிதம் வரை இருக்கலாம் என தங்கள் கணிப்பை குறைத்துக் கொண்டார்கள். இதற்கு முன் இதே காலகட்டத்தில் இந்திய ஜிடிபி 7.1 சதவிகிதம் வரை வளரலாம் எனச் சொல்லி இருந்தார்கள். ஆக இவர்கள் 0.8 சதவிகிதம் தங்கள் கணிப்பிலேயே குறைத்துக் கொண்டார்கள்.
ஆர்பிஐ
அவ்வளவு ஏன், நம் மத்திய ரிசர்வ் வங்கியே கூட, 2019 - 20 நிதி ஆண்டில் இந்தியாவின் ஜிடிபி 6.1 சதவிகிதமாக வளரலாம் என மேலே சொன்ன நிறுவனங்களை ஒத்து (ADB 6.5%, OECD 5.9%, S&P 6.3%) கணித்தது. ஆனால் இந்த கணிப்புகள் எல்லாவற்றையும் விட கொஞ்சம் குறைவாக, 2019 - 20 நிதி ஆண்டுக்கான இந்தியாவின் ஜிடிபி 5.8 சதவிகிதம் இருக்கலாம் என நெற்றியில் அடித்தாற் போலச் சொல்லி இருக்கிறது மூடீஸ்.
சவால்கள்
இந்தியாவின் பொருளாதாரம் தொடர்ந்து சில காலாண்டுகளாக பொருளாதார வளர்ச்சி குறைவு, இந்தியாவின் தேவை அதிகரிக்காதது, நிதிச் சிக்கல்கள் போன்றவைகளால் இந்தியப் பொருளாதாரம் கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, கடந்த ஜூன் 2019 காலாண்டு குறைந்து இருக்கிறது. அதோடு தனி நபர் நுகர்வுச் செலவுகள் கடந்த 18 காலாண்டுகளில் இல்லாத அளவுக்கு 3.1 சதவிகிதமாக சரிந்து இருக்கிறது என்பதையும் சுட்டிக் காட்டுகிறார்கள்.
சிக்கல் விரிவு
இந்தியப் பொருளாதாரத்தில் முதலில் முதலீடுகள் பற்றாக்குறையால் தொடங்கிய பொருளாதார மந்த நிலை, இப்போது நுகர்வுத் துறை வரை விரிவடைந்து இருக்கிறது. இந்தியாவின் நுகர்வுத் துறை சிக்கல்களுக்கு போதுமான வேலை வாய்ப்புகள் இல்லாதது மற்றும் இந்திய கிராம புற குடும்பங்களில் நிலவும் அழுத்தமும் காரணம் எனச் சொல்கிறது மூடீஸ். அதோடு வங்கி அல்லாத நிதி நிறுவனங்களில் ஏற்பட்டு இருக்கும் நிதிப் பற்றக்குறை இந்த சிக்கல்களை மேலும் அதிகரித்து இருப்பதாகவும் சொல்கிறது.
சுருக்கமாக, இந்தியப் பொருளாதாரம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக வளர்வது சிர்மம் தான் என்கிறது மூடீஸ் நிறுவனத்தின் இந்த ஜிடிபி கணிப்புகள்.