டெல்லி : ஆன்லைன் சில்லறை வணிக நிறுவனங்களான அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்கள், கடந்த வாரம் மேற்கொண்ட பண்டிகைகால ஆன்லைன் சிறப்பு விற்பனையில் பல ஆயிரம் கோடிகளை சம்பாதித்துள்ளது.
இது குறித்து அந்த நிறுவனங்கள் கூறியுள்ள கருத்தில், செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 4 வரையிலான ஆறு நாட்களில் மொத்தம் மூன்று பில்லியன் டாலர், இந்திய மதிப்பில் சுமார் ரூ. 19,000 கோடிக்கு விற்பனை செய்துள்ளதாக கூறியுள்ளன.
நாட்டில் நிலவி வரும் பொருளாதார மந்த நிலையால் தான் தேவை குறைந்துள்ளது. இதனால் விற்பனை குறைந்துள்ளது. மேலும் மக்களின் கையில் பணப்புழக்கமும் குறைந்துள்ளது என்றும் பல நிபுணர்கள் தங்களது கருத்துகளை கூறி வரும் நிலையில், வெறும் ஆறு நாட்களில் 19,000 கோடி ரூபாய்க்கு விற்பனை என்றால் நம்ப முடிகிறதா?ஆனால் இது தான் உண்மை.
வாரி வழங்கும் தள்ளுபடி
இந்த ஆன்லைன் சில்லறை வர்த்தக நிறுவனங்கள் சாதாரணமாகவே சலுகை மற்றும் பலத்த தள்ளுபடிகளை வாரி வழங்கி வரும் நிலையில், தீபாவளி வரை பண்டிகை காலம் என்பதால் இந்த ஆன்லைன் நிறுவனங்கள் சிறப்பு சலுகைகளையும் தள்ளுபடிகளையும் வாரி வழங்கி வருகின்றன. இதனால் இந்த ஆன்லைன் ஜாம்வான்களுக்கு விற்பனையும் அதிரடியாக அதிகரித்து வருகிறது. சும்மாவே விற்பனை அதிகரிக்கும், இப்பொழுது சிறப்பு சலுகை வேறு, விற்பனை களை கட்டித்தானே இருக்கும்.
தள்ளுபடிகளுக்கு மயங்கும் கிராமப்புறங்கள்
அதிலும் இந்த நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கிராமப்புறங்களில் இருந்து தான் தற்போது அதிகப்படியான ஆர்டர்கள் வருவதாக கூறியுள்ளன. முன்னதாக நகர்புறங்களில் இருந்தே ஒரு புறம் விற்பனையை அதிகளவில் செய்து வந்த அமேசான் பிளிப்கார்ட், மக்களின் ஸ்மார்ட்போன் மோகத்தால் பட்டி தொட்டியெல்லாம் பரவ ஆரம்பித்துவிட்டனர். இதன் விளைவு தான் இந்த 19,000 கோடி. அதிலும் பெரு நகரங்களை விடுத்து டயர் 2, 3 மற்றும் 4 போன்ற நகரங்களில் விற்பனை அதிகரித்துள்ளதாகவும் இந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
விற்பனை அதிகரிக்கும்
வருடத்துக்கு வருடம் இந்த விழாக்கால விற்பனையில் விற்பனையானது 30% அதிகரிக்கும் என்றும் இந்த நிறுவனங்கள் கணித்துள்ள நிலையில், இந்த ஆண்டு 60 - 65% வரை விற்பனை அதிகரித்திருக்கலாம் என்றும், இந்த விற்பனை மதிப்பு 3.7 பில்லியன் டாலர் வரை இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இது தான் இப்படி எனில் இனி தீபாவளிக்கு முந்தையதாக ஆரம்பிக்க இருக்கும் "தீபாவளி தமாகாவில்" இன்னும் பல சலுகைகள் வழங்க விருப்பதாகவும், இதனால் விற்பனை இன்னும் அமோகமாக அதிகரிக்கும் என்றும் இந்த நிறுவங்கள் கூறியுள்ளன.
அமேசானை விஞ்சிய பிளிப்கார்ட்
ஒரு புறம் இது வரை அமேசான் தான் இந்த ஆன்லைன் விற்பனையில் முன்னணியில் இருந்த நிலையில், இந்த பண்டிகைகால அதிரடி விற்பனையில் அமேசானை விட பல மடங்கு பிளிப்கார்ட் விஞ்சியுள்ளது. குறிப்பாக பிளிப்கார்ட் 60 - 62% விற்பனை தனியாகவும், மைன்ட்ரா மற்றும் ஜபோங் உடன் சேர்க்கப்பட்டால் 63% தாண்டியுள்ளது என்றும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இதே அமேசானின் வளர்ச்சி 22%மாகவும் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
விற்பனை டாப்
அமேசான் மற்றும் பிளிப்கார்ட்டின் ஆன்லைன் விற்பனை சுமார் ஆறு பில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.39,000 கோடி) வரை செல்லக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ரெட்சீர் கூறியுள்ளது. இது குறித்து கூறியுள்ள ரெட்சீர் கன்சல்டிங்கின் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அனில் குமார், நாட்டில் நிலவி வரும் சவாலான பொருளாதார சூழ்நிலை இருந்தபோதிலும், பண்டிகை காலத்தின் முதல் சுற்றிலேயே 3 பில்லியன் டாலர் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது மக்கள் ஆன்லைன் ஷாப்பிங்கை நோக்கி படையெடுப்பதையே காட்டுகிறது எனக் கூறியுள்ளார்.
விளைவு என்ன?
ஆன்லைன் மோகத்தால் ஆன்லைன் சில்லறை விற்பனையை நோக்கி படையெடுக்கும் மக்கள், உள்ளூர் சில்லறை விற்பனை நிலையங்கள் பற்றியும் யோசிக்க வேண்டும். ஒரு புறம் விற்பனை மந்தம், பொருளாதார மந்தம், வேலையிழப்பு என அதிகரித்து வரும் நிலையில், இதுபோன்ற ஆன்லைன் சலுகையால் நாம் ஆன்லைன் சில்லறை வர்த்தகத்தை நாடும் போது, உள்ளுர் வியாபாரிகளின் கதி என்ன? என்று சற்று யோசிக்க வேண்டும்.