உத்திரப் பிரதேசத்தை பாரதிய ஜனதா கட்சி தான் ஆட்சி செய்து வருகிறது. பாரதிய ஜனதா கட்சியின் சார்பில், முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் ஆட்சி செய்து வருகிறார்.
இவர் ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததில் இருந்து, பல அதிரடி நடவடிக்கைகளை அவிழ்த்து விட்டுக் கொண்டு தான் இருக்கிறார். இப்போது புதிதாக, சொத்துக்களை எல்லாம் ஆதார் உடன் இணைக்கப் போகிறார்களாம்.
இது என்ன திட்டம்..? திட்டத்தின் பெயர் என்ன..? ஏன் இந்த திட்டத்தைக் கொண்டு வருகிறார்கள்..? இதில் என்ன மாதிரியான சொத்துக்களை எல்லாம் இருக்கலாம், எதை எல்லாம் இணைக்கப் போகிறார்கள் என விரிவாகப் பார்ப்போம்.
திட்டம்
இந்த திட்டத்தின் பெயர் Urban Properties Ownership Record (UPOR) Scheme. இந்த திட்டத்தின் மூலம், உத்திரப் பிரதேசத்தில் இருக்கும் நகர் புற சொத்துக்களை எல்லாம் ஆதார் அட்டை உடன் இணைக்கப் போகிறார்களாம். இவர்கள் சொத்துக்கள் எனக் குறிப்பிடுவது என்ன என்பதைப் பற்றி இன்னும் தெளிவாக விளக்கவில்லை. ஆனால் நிலங்கள் மற்றும் வீடுகள் போன்ற ரியல் எஸ்டேட் சார்ந்த சொத்துக்களைத் தான் சொல்கிறார்களோ எனத் தோன்றுகிறது. எந்த எந்த சொத்துக்களை எல்லாம் இதில் சேர்க்கப் போகிறார்கள் என உத்திரப் பிரதேச அரசு தான் விளக்க வேண்டும்.
பினாமி
இந்த Urban Properties Ownership Record (UPOR) திட்டம் மூலம், பினாமி பெயரில் சொத்துக்களை பதுக்கி வைத்துக் கொள்பவர்கள் விவரம் தெரிய வரும். அதோடு, பல சொத்துக்களை பதுக்கி வைத்திருப்பவர்களிடம் இருந்து, முறையாக நகராட்சி அலுவலகங்களுக்கு நிறைய வரி வருவாய் கிடைக்கும் என ஒரு மூத்த அதிகாரி சொல்லி இருக்கிறார். இந்த திட்டத்தை கே வி ராஜு என்கிற, யோகி ஆதித்யநாத்தின் நிதி ஆலோசகரின் அறிவுரைப் படி கொண்டு வரப்பட்டு இருக்கிறதாம்.
நிலை
தற்போதைக்கு, நகராட்சி அலுவலகத்திம், தங்கள் நகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், யார் எவ்வளவு சொத்து வைத்திருக்கிறார்கள் அல்லது ஒரு குறிப்பிட்ட சொத்து யாருக்கு சொந்தமானதாக இருக்கிறது போன்ற அடிப்படை விவரங்கள் மற்றும் தரவுகளே இல்லையாம். இதனால் பல சமயங்களில் சட்ட ரீதியிலான சிக்கல்களைச் சந்திக்க வேண்டி இருக்கிறதாம். எனவே இந்த Urban Properties Ownership Record (UPOR) திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் நகராட்சி அலுவலகங்களுக்கு போதுமான தரவுகள் கிடைக்கும் எனச் சொல்கிறார்கள் அதிகாரிகள்.
சோதனை
முதலில் இந்த Urban Properties Ownership Record (UPOR) திட்டம், லக்னெள, கான்பூர், ஆக்ரா, காசியாபாத், வாரனாசி, மீரட், ப்ரக்யராஜ் (அலஹாபாத்) ஆகிய நகரங்களில் தொடங்க இருக்கிறார்களாம். இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த சர்வே ஆஃப் இந்தியாவிடம் உதவி கேட்கப் போகிறார்களாம். அதோடு ஒரு ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப் பணி அதிகாரி தலைமையில் ஒரு உயர் மட்டக் குழு அமைக்கப்படும் எனவும் சொல்கிறார்கள் அதிகாரிகள். இந்த உயர்மட்ட கமிட்டியில் திட்டமிடல், நகரம் மற்றும் கிராம மேம்பாடு, நகராட்சி என பல அரசுத் துறை சார் அதிகாரிகள் இருப்பார்களாம்.