சென்னை : ஆட்டோமொபைல் துறையில் நிலவி வரும் மந்த நிலையால் இது வரை வாகன உற்பத்தி நிறுவனங்கள் மட்டுமே, தங்களது உற்பத்தி ஆலைகளுக்கு விடுமுறை அளித்து வந்தது.
ஆனால் தற்போது இத்துறையை சார்ந்த உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்களிலும் எதிரொலிக்க ஆரம்பித்துள்ளது.
முக்கிய உதிரி பாகங்கள் உற்பத்தி நிறுவனமான பிரிகால் நிறுவனம், விற்பனை மந்தத்தின் எதிரொலியால் நாடு முழுவதும், பல்வேறு இடங்களில் உள்ள தனது தொழிற்சாலைகளில் வேலையில்லா நாட்களை அறிவித்துள்ளது.
ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் தயாரிப்பு நிறுவனமான பிரிகால், இது குறித்து வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் உற்பத்தியை விற்பனைக்கு ஏற்ப மாற்றுவதற்காக அக்டோபர் மாதத்துக்கான வேலையில்லா நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்துள்ளது.
இதில் தமிழகத்தின் கோவையில் உள்ள ஆலைகள் 1, 3 மற்றும் 4, இதே குருகிராமில் உள்ள 2 மற்றும் 9, புனேவில் உள்ள 5 ஆலையும், ஸ்ரீ நகரில் உள்ல 10வது ஆலையும், பந்த் நகரில் உள்ள 7 ஆலையும் உள்ளன என்றும் அறிவித்துள்ளது.
இதில் கோவையில் உள்ள முதல் ஆலைக்கு 1- 3 நாட்கள் வேலையில்லா நாட்களாகவும், இதே 3 மற்றும் 4 ஆலைகளில் 3 - 5 நாட்கள் வேலையில்லா நாட்களாகவும், குருகிராமில் உள்ள 2-வது ஆலைக்கு 1 நாள் விடுமுறையும், புனே ஆலைக்கு 1 - 3 நாட்கள் வேலையில்லா நாட்களாகவும், ஸ்ரீ நகரில் உள்ள ஆலைக்கு 1 - 3 நாட்கள் வேலையில்லா நாட்களாகவும், இது குருகிராமில் உள்ள 9-வது ஆலையும் மற்றும் பந்த் நகரில் உள்ள 7- வது ஆலையிலும் எந்த வித மாற்றமும் இல்லை என்றும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
முன்னதாக சென்னையைச் சேர்ந்த ஹிந்துஜா குழுமம் தனது அசோக் லேலண்ட் ஆலைகளுக்கு, பலவீனமான தேவை, விற்பனை காரணமாக பல நாட்கள் விடுமுறை அளித்தது.
இதே போல டிவிஎஸ் குழும நிறுவனம் சுந்தரம் கிளேட்டன் லிமிடெட், மாருதி சுசூகி லிமிடெட், ஹீரோ மோட்டோ கார்ப், தேவைக்கு ஏற்ப அவ்வப்போது உற்பத்தியை நிறுத்தி வைப்பதாகவும் கூறியுள்ளன.
இந்த நிலையில் பிரிகால் நிறுவனத்தின் பங்கு விலையில் பெரிதொரு மாற்றமும் இல்லாமல் 32 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது.