இந்தியாவில் வருமான வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை 84.5 மில்லியன் பேராக அதிகரித்து இருக்கிறார்களாம். இது 2017 - 18 நிதி ஆண்டுக்கான தரவுகள். 2017 - 18 நிதி ஆண்டில் சம்பாதித்த பணத்துக்கு 2018 - 19 நிதி ஆண்டில் தான் வருமான வரி செலுத்துவார்கள்.
எனவே அதற்கு முந்தைய 2016 - 17 நிதி ஆண்டுக்கான தரவுகளோடு இந்த எண்ணிக்கையை ஒப்பிட்டுப் பார்த்தால் சுமார் 13.8 சதவிகிதம் பேர் கூடுதலாக இந்த முறை தங்கள் வருமான வரிப் படிவங்களை முறையாகச் செலுத்தி இருக்கிறார்களாம்.
2016 - 17 நிதியாண்டில் சம்பாதித்த பணத்திற்கு 2017 - 18 நிதி ஆண்டில் வருமான வரி செலுத்தினார்கள். அப்போது 74.2 மில்லியன் பேர் வருமான வரிப் படிவங்களை முறையாக தாக்கல் செய்து இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசு கையில் இருக்கும் தரவுகளின்படி 2017 ஆம் ஆண்டு சரக்கு மற்றும் சேவை வரி, அமல்படுத்தப்பட்ட பின், வருமான வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை மற்றும் வருமான வரி வருவாய் அதிகரித்திருப்பதாக சொல்கிறார்கள்.
தொடர்ந்து ஜிஎஸ்டி வரி விகிதங்களை மாற்றி அமைப்பது மற்றும் வருமான வரிச் சட்டங்கள் வழியாக வருமான வரி படிவங்களை முறையாக செலுத்த பொருளின் எண்ணிக்கையை அதிகரிப்பது போன்றவைகளால் மத்திய அரசுக்கு வரும் நேரடி வரி வருவாய் அதிகரித்து இருப்பதாக சொல்கிறார்கள் அதிகாரிகள். அதோடு துறை சார் வல்லுனர்களும் நேரடி வரி வருவாய் அதிகரிப்பதற்கு மறைமுக வரி வசூலில் கொண்டு வந்த சீர்திருத்தங்களும் ஒரு முக்கிய காரணம் எனச் சொல்கிறார்கள்.
மத்திய அரசின் இந்த தரவுகளில் டிடிஎஸ் பிடித்தம் செய்யப்பட்டு முறையாக அரசுக்கு வருமான வரி படிவங்களை சமர்ப்பிக்காதவர்கள் மற்றும் முறையாக அரசுக்கு வருமான வரி படிவங்களை சமர்ப்பித்தவர்கள் என இரண்டு தரப்பினரையும், வரி செலுத்தியவர்கள் என கணக்கில் எடுத்துக் கொண்டு கணக்கிட்டு இருப்பதாகச் சொல்லி இருக்கிறார்களாம்.
கடந்த மூன்று நிதி ஆண்டுகளாக தொடர்ந்து நேரடி வருமான வரி மூலமாக அரசுக்கு வரும் வருவாய் இரட்டை இலக்கங்களில் வளர்ச்சி கண்டு வருகிறதாம். கடந்த 2017 - 18 நிதியாண்டில் நேரடி வரி வருவாய் வளர்ச்சி 18 சதவிகிதமாக இருந்தது. கடந்த 2018 - 19 நிதி ஆண்டில் இதே நேரடி வரி வருவாய் வளர்ச்சி வெறும் 13.5 சதவிகிதமாக சரிந்து இருக்கிறது. இதற்கு காரணமாக உலகப் பொருளாதார மந்தநிலை மற்றும் உள்நாட்டில் சேவை மற்றும் நுகர்வு குறைவு போன்றவைகளை சொல்கிறார்கள்.