டெல்லி : ரான்பாக்ஸி நிறுவனத்தின் முன்னாள் புரோமோட்டர் சிவிந்தர் சிங் மற்றும் அவரது சகோதரர் மல்விந்தர் சிங், ரெலிகேர் நிறுவனத்தின் முன்னாள் சிஎம்டி சுனில் கோத்வானி உள்ளிட்ட மூவருக்கும் எதிராக, ரெலிகேர் நிறுவனம் எஃப்.ஐ.ஆர் செய்துள்ளது.
இவர்கள் மூவரும் 10 ஆண்டுகளில் 115 தனியார் நிறுவனங்களுக்கு சுமார் 47,968 கோடி ரூபாய் கடன் கொடுத்ததாகவும் எஃப்.ஐ.ஆரில் கூறப்படுகிறது.
மேலும் இந்த கடன்கள் இந்த இடைப்பட்ட காலவெளியில் கொடுக்கப்பட்டு மீண்டும் மீண்டும் செலுத்தப்பட்டதாகவும், இந்த சுழற்சி எப்போது நிறுத்தப்பட்டதோ, அந்த கடைசி சுழற்சியில் 2,397 கோடி ரூபாய் அசலும், 415 கோடி ரூபாய் வட்டியும் மோசடி செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
ரெலிகேருக்கு நஷ்டம்
ரெலிகேர் நிறுவனத்துக்கு மேற்கூறிய மூவரால், ரெலிகேர் எண்டர்பிரைசஸ் மற்றும் அதன் துணை நிறுவனமான ரெலிகேர் ஃபின்வெஸ்ட் லிமிடெட் ஆகியவற்றிற்கு வரவேண்டிய கடன் தொகை வேறு நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டது என்றும், இதனால் ரெலிகேர் ஃபின்வெஸ்ட் லிமிடெட்டுக்கு, முதலீட்டில் சுமார் 2,397 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாகவும், 415 கோடி ரூபாய் வட்டியும் நஷ்டம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அதிகாரிகள் கைது
இந்த நிறுவனம் அளித்த புகாரின் பேரில் இந்த நிறுவனத்தின் முன்னாள் விளம்பரதாரர்கள் ஆன சிவிந்தர் சிங் மற்றும் மல்விந்தர் சிங் ஆகியோரும், ரெலிகேர் நிறுவனத்தின் முன்னாள் சி.எம்.டி சுனில் கோத்வானி, இது தவிர இந்த நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகளான கவி அரோரா மற்றும் அனில் சக்சேனா ஆகியோரும் கைது செய்யப்பட்டு 4 நாள்கள் விசாரணை செய்ய டெல்லி உயர் நீதி மன்றம் கடந்த சில தினங்களுக்கு முன்பே உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆர்.பி.ஐ ஏற்கனவே எச்சரிக்கை
ரெலிகேர் மற்றும் அதன் கார்ப்பரேட் கடன் புத்தகம் குறித்து கட்டுப்பாட்டாளரான ரிசர்வ் வங்கியால் ஏற்கனவே தொடர்ந்து எச்சரிக்கப்பட்டதாகவும் எஃப்.ஐ.ஆரில் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த நிறுவனத்தின் சி.எல்.பி போர்ட்போலியோ குறித்து அவ்வப்போது ஆர்.பி.ஐ எச்சரித்திருந்ததாலும், இந்த எச்சரிப்பு பற்றி, விளம்பரதாரர்கள் மத்தியில் கவனிக்கப்படவேயில்லை என்றும், மாறாக சிங் குடும்பமும், சுனில் கோத்வானியும் கடன் வழங்குவதை ஊக்குவித்ததாகவும் கூறப்படுகிறது.
ஆவணங்களில் மோசடி
நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் தொகை தனியார் நிறுவனங்களுக்கு மிக குறுகிய கால அறிவிப்பில் கடனாக வழங்கப்பட்டுள்ளது என்றும், பெரும்பாலும் இவ்வாறு வழங்கப்பட்ட கடன்கள் முறையான ஆவணங்கள் இல்லாமல் வழங்கப்பட்டதாகவும் ரெலிகேர் நிறுவனம் குற்றம் சாட்டியது. அதிலும் பல கடன்களில், கடன் கொடுக்கப்பட்ட பின்னரே போலியான ஆவணங்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்றும் எஃப்.ஐ.ஆரில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.