டெல்லி: மிக வேகமாக நுகரப்படும் பொருட்களை தயாரிக்கும் நிறுவனமான ஹிந்துஸ்தான் யுனிலீவர் லிமிடெட் நிறுவனம், மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.
சுமார்15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரியும் இந்த நிறுவனத்தில், மறைமுகமாக அதைவிட மும்மடங்கான பேர், சுமார் 52,000 பேர் மறைமுகமாகவும் பயன் பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் 21.18 சதவிகிதம் அதன் நிகரலாபம் அதிகரித்து, வரி மற்ற தேய்மானங்கள் கழிக்கப்பட்ட பின்னர் 1,848 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே கார்ப்பரேட் வரி விகித சலுகையை தவிர்த்து 1,832 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
விற்பனை அதிகரிப்பு
வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் அழகு சாதன பொருட்கள், பர்சனல் கேர் பொருட்கள் விற்பனை பெரிதும் உதவியது என்றும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இதே கடந்த ஆண்டு இதே காலாண்டில் இந்த நிறுவனம் 1,525 கோடி ரூபாய் நிகரலாபத்தை ஈட்டியதாக, பி.எஸ்.இக்கு அளித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதே நிகர விற்பனையானது கடந்த செப்டம்பர் காலாண்டில் 9,708 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாகவும், இது முந்தைய ஆண்டில் இதே காலாண்டில் 9,138 கோடி ரூபாயாக இருந்ததாகவும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
வருவாய் அதிகரிப்பு
இதே மொத்த வருவாயானது 5.16 சதவிகிதம் அதிகரித்து, 10,032 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாகவும், இது முன்பு 9,539 கோடி ரூபாயாக இருந்ததாகவும், இதற்கு வீட்டு உபயோகப் பொருட்களும், உணவு மற்றும் புத்துணர்ச்சி பொருட்களும் பெரும் பங்கு வகித்தது என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் வரி வட்டி தேய்மானம் இதற்கு முந்தைய லாபம் 21 சதவிகிதம் அதிகரித்து 2,443 கோடி ரூபாயாக உள்ளதாகவும், இது முந்தைய ஆண்டில் 2,019 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
துறை வாரியான விற்பனை
இதே கடந்த செப்டம்பர் காலாண்டில், துறை வாரியான அறிக்கையில் வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனையானது 3,371 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாகவும், இதே முந்தைய ஆண்டு 3,080 கோடி ரூபாயாகவும் இருந்ததாகவும், இதே அழகு மற்றும் பர்சனல் கேர் பொருட்கள் விற்பனையானது 4,543 கோடி ரூபாயாகவும், இது முந்தைய ஆண்டில் 4,316 கோடி ரூபாயாகவும், இதே உணவு மற்றும் புத்துணர்ச்சி பிரிவில் 1,847 கோடி ரூபாயாகவும், இது முந்தைய ஆண்டில் 1,704 கோடி ரூபாயாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இடைக்கால டிவிடெண்ட்
நல்ல லாபத்தில் உள்ள இந்த நிறுவனமானது கடந்த செப்டம்பர் காலாண்டில் பெற்ற லாபத்தினை அடுத்து, தனது பங்கு முதலீட்டாளர்களுக்கு 11 ரூபாய் இடைக்கால டிவிடெண்டாகவும், இதே முகமதிப்பு 1 ரூபாயும் அறிவித்துள்ளது. மேலும் இந்த டிவிடெண்ட் வரும் நவம்பர் 05, 2019 அன்று வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கப்படும் என்றும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.