டெல்லி : கடந்த செப்டம்பர் மாதத்தில் நாட்டின் சில்லறைப் பணவீக்க விகிதம் 14 மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிகரித்து 3.99 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.
செப்டம்பரில் நாட்டின் பணவீக்கம் குறித்த புள்ளிவிவரங்களை குறித்த அறிக்கையை மத்திய அரசு வெளியிட்ட நிலையில், அதில் சில்லறை விலை பணவீக்கம் கடந்த செப்டம்பரில் 3.99 சதவிகிதமாக அதிகரித்துள்ளது என்றும், இது கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 3.21 சதவிகிதமாக இருந்தது என்றும் கூறப்படுகிறது.
கடந்த செப்டம்பர் மாதத்தில் உணவுப் பொருட்கள் விலை உயர்வே, இந்த பணவீக்க உயர்வுக்கு காரணமாக அமைந்தது எனவும் கூறப்படுகிறது.
இதே உணவுப் பொருட்கள் பணவீக்கமானது 5.11 சதவிகிதமாக அதிகரித்துள்ளது, இது முந்தைய மாதத்தில் வெறும் 2.99 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. உணவுப் பொருட்கள் பணவீக்கம் நாட்டின் பணவீக்க விகிதத்தைத் தீர்மானிக்கும் முக்கிய குறியீடு என்று கூறப்படும் நிலையில் இந்த விகிதமானது அதிகரித்துள்ளது, நிபுணர்கள் எச்சரித்ததை போலவே குறியீடுகளும் அமைந்துள்ளது.
மேலும் காய்கறிகளின் விலையில் பணவீக்கம் 15.4 சதவிகிதமாகவும், இது முன்னதாக 6.9 சதவிகிதமாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த ஏற்றத்திற்கு முக்கியமாக வெங்காய விலை காரணமாக அமைந்தது என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக வெங்காயத்தின் பணவீக்கம் 6.37 சதவிகிதத்திலிருந்து, 66.38%மாக அதிகரித்துள்ளது.
இதனிடையே, செப்டம்பர் மாத மொத்த விலை பணவீக்கம் 0.33%- மாகக் குறைந்திருக்கிறது என்றும், இது கடந்த 39 மாதங்களுக்கு பிறகு ஏற்பட்டுள்ள குறைந்த அளவு என்றும் கூறப்படுகிறது. இதே கடந்த ஆண்டு இதே காலத்தில் 1.08%-மாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் உணவுப் பொருட்களின் விலை உயர்வு 7.47% என்றும், உணவு அல்லாத பிற பொருட்களின் விலை உயர்வு 2.18 சதவிகிதம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பொருளாதார மந்தநிலை பற்றி பல்வேறு நிபுணர்களும் வல்லுனர்களும் எச்சரித்து வரும் இந்த நிலையில், அவர்கள் எச்சரிப்புக்கு ஏற்றவாறே ஒவ்வொரு குறியீடும் இந்திய பொருளாதாரம் நலிவடைந்து வருவதையே சுட்டி காட்டுகிறது.
மேலும் நடப்பு ஆண்டில் நிகழ்ந்து வரும் மழையால் ஒரு புறம் விவசாய உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது என்றும், இதே மறுபுறம் எரிபொருள் பணவீக்கமானது உலக அளவில் நிலவி வரும் தேவையை பொறுத்தும் அதிகரித்துள்ளது.