டெல்லி: பொதுத்துறையை சேர்ந்த தொலைத் தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல் நிறுவனம், மிக சிக்கலான கடன் பிரச்சனையில் சிக்கியுள்ள நிலையில், அதன் ஊழியர்களுக்கு கூட சம்பளம் கொடுக்க முடியாத நிலையில் இருந்து வருகிறது.
இந்த நிலையில் அதன் ஊழியர் சங்கங்கள் ஒரு உண்ணாவிரதத்தை அச்சுறுத்தியுள்ள நிலையில், தீபாவளிக்கு முன்னதாக கடந்த செப்டம்பர் மாதத்தில் தனது 1.76 லட்சம் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதாக, பாரத சஞ்சார் நிகாம் லிமிடெட் நிறுவனம் (BSNL) வழங்குவதாக உறுதியளித்துள்ளது.
தீபாவளிக்கு முன்னர் ஊழியர்களுக்கு எங்கள் சொந்த வளங்களிலிருந்து சம்பளத்தை வழங்குவோம் என்றும், நாங்கள் ஒரு மாதத்திற்கு 1,600 கோடி ரூபாய் வருவாய் ஈட்டுகிறோம் என்று பிஎஸ்என்எல் தலைவர் பிகே புர்வார் கூறியுள்ளார்.
செலவினங்கள் அதிகம்
பிஎஸ்என்எல் மாத சம்பளம் 850 கோடி ரூபாய் எனவும், இதே நிறுவனம் வருவாய் மாதத்திற்கு சுமார் 1,600 கோடி ரூபாய் ஈட்டினாலும், வருவாயில் பெரும்பகுதி செயல்பாட்டு செலவுகள் மற்றும் சட்டரீதியான கொடுப்பனவுகளுக்கு தேவைப்படுவதால் ஊதியத்தை ஈடுகட்ட இந்த தொகை போதுமானதாக இல்லை என்றும் பிஎஸ்என்எல் வட்டாரத்தில் கூறப்படுகிறது. இதனால் மாத மாதம் ஊழியர்களுக்கு சரியான நேரத்தில் ஊதியம் வழங்க முடிவதில்லை என்றும் இந்த நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் மத்தியில் கூறப்படுகிறது.
பெரும் நஷ்டம்
அரசு பொதுத்துறை நிறுவனமான இது நிதி திரட்ட முயற்சித்து வருகிறது என்றும், எனினும் இன்னும் அரசு உத்தரவாதம் கிடைக்கவில்லை என்றும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் டெல்கோ நிறுவனம் 2019ம் நிதியாண்டில் 13,804 கோடி ரூபாய் நஷ்டத்தினை சந்தித்துள்ளது என்றும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளார். அதிலும் ஜியோவின் வருகைக்கு பின்னர் இந்த நிறுவனம் பெருத்த நஷ்டத்தினையே கண்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.
பி.எஸ்.என்.எல்லை சீரமைக்க திட்டம்
இந்த நிலையில் 4ஜி ஸ்பெக்ட்ரம் மற்றும் அதன் மிகப்பெரிய பணியாளர்களைக் குறைக்க ஒரு தன்னார்வ ஓய்வூதிய திட்டம் ஆகியவை இதன் நிதிப் பிரச்சனைகளை குறைக்கக் கூடும் என்றும், இவை அரசின் முன்னுரிமை திட்டத்தில் இருந்தாலும் இவற்றிற்கு குறிப்பிட்ட காலம் ஆகும் என்றும் புர்வார் கூறியுள்ளார். மேலும் பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல் நிறுவனத்தை புதுபிக்க, மத்திய நிதியமைச்சகமும், பி.எம்.ஓவும் 50,000 கோடி மறு மூலதனத்தை உட்செலுத்த ஆதரவாக உள்ளன என்றும் கூறப்படுகிறது.
நிலவி வரும் கடுமையான போட்டி
அரசுக்குச் சொந்தமான தொலைத்தொடர்புச் சேவை நிறுவனமான பிஎஸ்என்எல், கடந்த சில ஆண்டுகளாகவே கடுமையான நிதி நெருக்கடியாலும், வருவாய் இழப்பாலும் தவித்து வருகிறது. இந்திய நெட்வொர்க் சந்தையில் ரிலையன்ஸ் ஜியோ வந்தலிருந்தே மற்ற தொலைத் தொடர்பு நிறுவனங்கள் பின் தங்கின. அதிலும் அரசுக்கு சொந்தமான பி.எஸ்.என்.எல் தனியார் நிறுவனங்களை விட பின் தங்கியுள்ளதும், தனியார் நிறுவனங்கள் கூட 4ஜி சேவை வழங்கி வரும் நிலையில், இதுவரை அரசு நிறுவனங்களில் வழங்கபடாது இதற்கு முக்கிய காரணம் என்றும் கூறப்படுகிறது.