சென்னை: பொதுவாகவே ஆட்டோமொபைல் துறையில் வாகன விற்பனை மந்தம் என்று கூறப்பட்டு வரும் நிலையில், நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் வர்த்தக வாகன விற்பனையானது 23 சதவிகிதம் சரிந்துள்ளது.
இதனால் நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் 27 சதவிகிதம் உற்பத்தியும் குறைந்துள்ளது என்றும் சியாம் தெரிவித்துள்ளது.
அதிலும் குறிப்பாக கடந்த சில மாதங்களாக தொடர்ந்து தேவை என்பது குறைந்த வண்ணமே உள்ளது. இந்த நிலையில் விற்பனையும் வெகுவாக மழுங்கியுள்ளது என்றும் சியாம் கூறியுள்ளது. .
உற்பத்தி குறைவு
இந்த மந்த நிலை நீடித்து வரும் இந்த நிலையில் உற்பத்தியும் வெகுவாக குறைந்துள்ளது. குறிப்பாக வர்த்தக வாகன உற்பத்தியானது கடந்த செப்டமபர் மாதத்தில் 4,09,153 ஆக குறைந்துள்ளது. இதே முந்தைய ஆண்டு இதே காலத்தில் 5,59,514 வாகனங்களாக உற்பத்தி செய்யப்பட்டிருந்தது என ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் சங்கமான சியாம் தெரிவித்துள்ளது. இது தவிர மற்ற வாகனங்களின் உற்பத்தியும் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் சியாம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு விற்பனை
ஒரு புறம் உள்நாட்டு விற்பனையும் சரிந்துள்ள நிலையில், கடந்த காலாண்டில் விற்பனையும் 3,75,480 வாகனங்களாக குறைந்துள்ளது. இது முன்னர் 4,87,319 வாகனங்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதே ஏற்றுமதியும் 41.58 சதவிகிதம் குறைந்துள்ளது. குறிப்பாக நடப்பு நிதியாண்டில் இதுவரை 30,564 வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகவும், இது முந்தைய ஆண்டில் 52,319 வாகனங்களாக ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தது என்றும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதிகப்படியான தள்ளுபடி இருக்கலாம்
ரிலையன்ஸ் செக்யூரிட்டீஸ் மற்றும் ரிசர்ச் ஆட்டோவின் துணைத் தலைவர் மிதுல் ஷா கூறுகையில், வர்த்தக வாகன விற்பனையாளர்கள் ஸ்டாக் அதிகமாக இருந்த போதிலும், பலவீனமான தேவையின் காரணமாக விற்பனை மிக நலிவடைந்து காணப்படுகிறது. அதிலும் குறிப்பாக அதிகப்படியான ஸ்டாக் காரணமாக நடப்பு நிதியாண்டின் இறுதியில் அதிகப்படியான தள்ளுபடிக்கு இது வழி வகுக்கும் என்றும், மேலும் அடுத்தாண்டு தொடக்கத்தில் வரவிருக்கும் பிஎஸ் 6 விதிகள் வரவிருப்பதால், மக்கள் வாகனங்கள் வாங்கும் எண்ணத்தை தள்ளி வைக்கிறார்கள் என்றும்,இதனால் தான் இந்த மந்த நிலை என்றும் கூறப்படுகிறது.
3-வது காலாண்டிலும் உற்பத்தியை குறைக்க வாய்ப்பு
பெரும்பாலான உற்பத்தி நிறுவனங்கள் விற்பனை குறைவின் காரணமாக, உற்பத்தியை குறைத்தாலும், இன்னும் பலரிடம் தேவைக்கு அதிகமாகவே வாகனங்கள் இருப்பு இருப்பதாகவே கருதப்படுகிறது. அதுவும் இயல்பான நிலையை விட தற்போது அதிகம் உள்ளது என்றும் கூறப்படுகிறது. இந்த இருப்பானது ஆண்டின் பிற்பகுதியில் இருக்கலாம் என்றும், ஏற்கனவே இதை சரி செய்ய நிறுவனங்கள் வேலையில்லா நாட்கள், விடுமுறை என உற்பத்தியை குறைத்த நிலையில் மூன்றாவது காலாண்டிலும் வர்த்தக வாகன உற்பத்தி மற்றும் இரு சக்கர வாகன உற்பத்தியானது வெகுவாக குறைக்கப்பட வாய்ப்புள்ளது என்றும் ஷா கூறியுள்ளார்.
புதிய விதிமுறைகள்
வரவிருக்கும் பிஎஸ் 6 விதிமுறைகளின் படி, புதிய விதிமுறைகள் கொண்டு வரப்படலாம் என்றும், குறிப்பாக தீ அடக்குமுறை, பள்ளி வாகனங்கள், ரிவர்ஸ் பார்க்கிங் மற்றும் எரிபொருள் திறனில் மாற்றம் இருக்கலாம் என்றும் சியாம் தெரிவித்துள்ளது. இந்த எதிர்பார்ப்பின் மத்தியிலேயே வாகனங்கள் விற்பனை வெகுவாக குறைந்துள்ளது என்றும், குறிப்பாக கனரகம் அல்லாத இலகுரக வாகனங்கள் விற்பனையானது 62% வீழ்ச்சி கண்டுள்ளது என்றும், இதே நேரத்தில் உற்பத்தியும் வெகுவாக குறைந்துள்ளது என்றும், நடப்பு ஆண்டில் வெறும் 12,304 வாகனங்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டுள்ளன என்றும், இது முன்னர் 44,057 ஆக இருந்தது என்றும் சியாம் அறிக்கையின் படி தெரிய வந்துள்ளது.
தேவையும் சரிவு
பொதுவாக அனைத்து வாகனங்களுக்கான தேவையும் சரிந்துள்ள நிலையில், இலகுரக வாகனங்களுக்கான தேவையானது, தனியார் நுகர்வுகள் மிக குறைந்துள்ள நிலையில் வெகுவாகவே குறைந்துள்ளது. இதே நிதி பிரச்சனை போன்ற காரணங்களாலும் இதன் தேவை சற்று குறைந்துள்ளது என்றும், குறிப்பாக பிஎஸ் 6 புதிய விதிகளின் படி, வரவிருக்கும் புதிய விதிமுறைகள் வாகனங்கள் உற்பத்தியில் பலத்த மாற்றத்தை கொண்டு வரலாம் என்றும் மக்கள் மத்தியில் கருத்து நிலவி வருகிறது. இதனால் பெரிய அளவிலான வாகனங்கள் வாங்குவதை மக்கள், இந்த விதிமுறைகள் அமலாக்கத்திற்கு பின்பு வாங்கிக் கொள்ளலாம் என்றும் தள்ளிப்போட்டு வருவதாலும் வந்த வினை என்றும் கூறப்படுகிறது.
மாற்றம் வேண்டும்
ஆக மொத்த கடந்த சில மாதங்களாகவே பல லட்சம் பேர் வேலையை இழந்துள்ள நிலையில், இனி வரும் மாதங்களிலாவது விற்பனை ஊக்குவிக்கப்பட வேண்டும், இதனால் தேவை அதிகரிக்கும், இதனால் பல லட்சம் பேரின் வேலை பாதுகாக்கப்படும் என்றும் இத்துறை வல்லுனர்கள் மத்தியில் கூறப்படுகிறது. நிலவி வரும் மந்த நிலையால் ஒரு புறம் நேரடியாக இத்துறையில் பல லட்சம் பாதிக்கப்பட்டாலும், மறைமுகமாகவும் இத்துறையில் பல லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள் என்றும், மேலும் ஆட்டொமொபைல் துறை சார்ந்த உதிரி பாகங்கள் நிறுவனங்களிலும் இந்த பிரச்சனை தற்போது தலையெடுக்க ஆரம்பித்துள்ளது. உதாரனத்திற்கு பிரபலமான உதிரி பாகங்கள் நிறுவனமான பிரிகால் வேலையில்லா நாட்களை கடந்த வாரத்தில் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.