யார் இந்த அபிஜித் பேனர்ஜி..? மோடி அரசு மீது இவர் வைத்த விமர்சனங்கள் என்ன..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Recommended Video

Abhijit Banerjee Wins Nobel Prize For Economics | Oneindia Tamil

அக்டோபர் 14, 2019, திங்கள் அன்று அறிவிக்கப்பட்ட பொருளாதாரத்துக்கான நோபல் பரிசை 3 பேர் பெற்றுக் கொண்டார்கள். அபிஜித் பேனர்ஜி (Abhijit Banerjee), எஸ்தர் டஃப்ளோ (Esther Duflo), மைக்கேல் க்ரிமெர் (Michael Kremer) தான் அந்த மூன்று பொருளாதார மேதைகள்.

இந்த மூன்று பேரில், 58 வயதான அபிஜித் பேனர்ஜி, நம் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு இந்தியர் பொருளாதாரத்தில் நோபல் பரிசு வாங்கி இருக்கிறார் என்பது சந்தோஷம் தான்.

யார் இவர்? இவரை ஏன் நாம் கொண்டாட வேண்டும்..? இவர் மோடி அரசு மீது வைத்திருக்கும் விமர்சனங்கள் என்ன..? வாருங்கள் ஒவ்வொன்றாக பார்ப்போம்.

இந்திய பொருளாதாரத்துக்கு எச்சரிக்கை மணி..! நோபல் பரிசு வெற்றியாளர் அபிஜித் பேனர்ஜி கருத்து!இந்திய பொருளாதாரத்துக்கு எச்சரிக்கை மணி..! நோபல் பரிசு வெற்றியாளர் அபிஜித் பேனர்ஜி கருத்து!

நோபல் சாதனை

நோபல் சாதனை

இந்தியாவில் இருந்து ஒருவருக்கு நோபல் பரிசு கிடைக்கிறது என்பதே மிக மகிழ்ச்சியான விஷயம். அதிலும் பொருளாதாரத்தில் அமர்த்தியா சென்னுக்குப் பிறகு, இரண்டாவது நபராக நோபல் பரிசு வாங்குவது இரட்டிப்பு மகிழ்ச்சி தானே. அதோடு, உலக அளவில் கணவன் மனைவியாக நோபல் பரிசு வாங்கும் 6-வது ஜோடி இவர்கள் என்பது நம் மகிழ்ச்சியை, இன்னொரு தளத்துக்கு எடுத்துச் சென்று கொண்டிருக்கிறது. யார் இந்த நோபல் சாதனையாளரர் என்பதற்கு விடை தேடத் தொடங்குவோம்.

பயோ

பயோ

அபிஜித் பேனர்ஜி, நிர்மலா பேனர்ஜி மற்றும் தீபக் பேனர்ஜி என்கிற பொருளாதார பேராசிரியர்களுக்கு மகனாகப் பிறக்கிறார். பள்ளி படிப்புக்குப் பின், கொல்கத்தா பிரசிடென்சி கல்லூரியில் இளங்கலை பொருளாதாரம், டெல்லியின் புகழ் பெற்ற ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முதுகலை பொருளாதாரம் என படித்து முடிக்கிறார். முது கலைப் பொருளாதாரம் படிக்கும் போது, 10 நாள் சிறை வாசம் எல்லாம் சென்று வெளியே வந்திருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்..!

ஏன் சிறை

ஏன் சிறை

இவர் டெல்லியில் இருக்கும் திகார் சிறையில் 10 நாள் இருந்தார் என்பதும் இப்போது ஹாட் செய்தியாக இணையத்தில் உலவிக் கொண்டு இருக்கிறது. நம் அபிஜித் முகர்ஜி, டெல்லி ஜவலர்ஹால் நேரு பல்கலைக்கழகத்தில் எம் ஏ பொருளாதாரத்தை 1983-ம் ஆண்டு வாக்கில் படித்துக் கொண்டு இருந்தார். அப்போது, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின், மாணவர் சங்கத் தலைவரை கல்லூரியை விட்டு நீக்கியதற்கு எதிராக, ஜே என் யூவின் துணை வேந்தர் ஸ்ரீவஸ்தவாவை எதிர்த்து ஆர்பாட்டம் செய்தார்கள் மாணவர்கள். அதில் நம் அபிஜித்தும் பங்கு எடுத்து இருக்கிறார்.

சிறை 10 நாள்

சிறை 10 நாள்

இந்த ஆர்பாட்டத்தைக் கலைக்க வழக்கம் போல, மாணவர்களை காவல் துறை கைது செய்து டெல்லி திகார் சிறையில் 10 நாட்கள் வரை அடைக்கப்பட்டாராம். அப்போது போராடியவர்கள் மீது, கொலை முயற்சி போன்ற குற்றங்களும் சுமத்தப்பட்டதாம். ஆனால் நல்ல வேளையாக அந்த பிரச்னையை கைவிட்டு விட்டார்கள் என அபிஜித் முகர்ஜியே பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்து இருக்கிறார். இது சந்தேகமே இல்லாமல், ஆளும் வர்க்கம் தன் அதிகாரத்தை காட்டியதாகவே இருந்தது, என 2016-ல் சொல்லி இருந்தார் அபிஜித்.

முனைவர் பட்டம்

முனைவர் பட்டம்

சரி மீண்டும் அபிஜித்தின் டைம் லைனுக்கு வருவோம். தன் முது கலை பொருளாதாரத்தை முடித்த அபிஜித் அடுத்து பொருளாதாரத்தில் முனைவர் பட்டத்தைப் பெற முயற்சிக்கத் தொடங்கினார். 1998-ம் ஆண்டு Essays in Information Economics என்கிற தலைப்பில் தீசிஸ் சமர்பித்து தன் முனைவர் பட்டத்தை ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் இருந்து பெற்று டாக்டர் அபிஜித் பேனர்ஜி ஆனார்.

பேராசிரியர் வேலை

பேராசிரியர் வேலை

அதன் பிறகு பேராசியர் பணியில் தொடங்கி இருக்கிறார். 1999-ம் ஆண்டு, நம் அபிஜித் பேனர்ஜியின் இரண்டாவது மனைவி மற்றும் சக நோபல் பரிசு வெற்றியாளரான எஸ்தர் டஃப்ளோ-வின் முனைவர் ஆராய்ச்சியில் இணை கண்காணிப்பாளராக எம் ஐ டி பல்கலைக்கழகத்தில் வேலை பார்த்து வந்தார்.
2004-ல் American Academy of Arts and Sciences என்கிற அமைப்பில் உறுப்பினராக (Fellow) தேர்ந்து எடுக்கப்பட்டார்.
2009-ல் சமூக அறிவியல் பிரிவில் இன்ஃபோசிஸ் பரிசைப் பெற்றார்.
2014-ல் உலக பொருளாதாரத்துக்காக Bernhard-Harms-Prize-ஐ வென்றார். இது Kiel என்கிற அமைப்பு வழங்கும் ஒரு பெரிய பரிசு.
2019-ல் பொருளாதாரத்துக்கான நோபல் என பல பரிசுகள் பட்டங்களை வாங்கிக் குவித்து இருக்கிறார்.

புத்தகம்

புத்தகம்


1. Volatility And Growth. Oxford: Oxford University Press. ISBN 9780199248612.
2. Understanding Poverty. Oxford; New York: Oxford University Press. ISBN 9780195305203.
3. Making Aid Work. Cambridge: MIT Press. ISBN 9780262026154.
4. Poor Economics: A Radical Rethinking of the Way to Fight Global Poverty. New York: PublicAffairs. ISBN 9781610390408.
5. A Short History of Poverty Measurements . Juggernaut Books என பல முக்கிய புத்தகங்களை எழுதி இருக்கிறார்.

தற்போது

தற்போது

நம் அபிஜித் பேனர்ஜி தற்போது, அமெரிக்காவில் இருக்கும் எம் ஐ டி பல்கலைக்கழகத்தில் (ஃபோர்ட் பவுண்டேஷன் இன்டர்நேஷனல்) பொருளாதார பேராசிரியராக பணியாற்றிக் கொண்டு இருக்கிறார். அபிஜித் பேனர்ஜியின் முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்தது. இரண்டாவது திருமணம் தான் எஸ்தர் டஃப்ளோ உடன் நடந்தது. தற்போது எஸ்தர் உடன் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார் நம் அபிஜித். தற்போது இந்த தம்பதியினருக்கு ஒரு குழந்தையும் இருக்கிறதாம். முற்போக்காக இரண்டாவது திருமணம் செய்து கொண்டதற்கு வாழ்த்துக்கள் சார்.

பணமதிப்பிழப்பு ஏன்

பணமதிப்பிழப்பு ஏன்

2017-ம் ஆண்டில் இந்திய அரசு கொண்டு வந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையை ஏன் கொண்டு வந்தார்கள், அதற்கான காரணத்தை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை என வெளிப்படையாக விமர்சித்தார். அதோடு பணமதிப்பிழப்பைத் தொடர்ந்து ஏன் 2,000 ரூபாய் நோட்டுக்களைக் கொண்டு வர வேண்டும்..? எனவும் அழுத்தமாக கேள்வி எழுப்பி பாஜக அரசின் நடவடிக்கைகளை விமர்சித்தார். இப்படி வெளிநாட்டிலேயே வாழ்ந்தாலும், இந்தியாவின் அரசியல் மற்றும் பொருளாதாரத்தை எப்போதும் கவனித்துக் கொண்டு இருப்பாராம்.

மோடி அரசில் பொருளாதாரம் மோசம்

மோடி அரசில் பொருளாதாரம் மோசம்

சில நாட்களுக்கு முன்பு, ப்ரவுன் பல்கலைக்கழகத்தில் பேசிய போது, இந்தியப் பொருளாதாரம் படுமோசமாக இருக்கிறது. காங்கிரஸ் ஆட்சியின் கடை காலங்களில், இந்தியப் பொருளாதாரம் இருந்த நிலையை விட, தற்போது இந்தியப் பொருளாதாரத்தின் நிலைமை மோசமாக இருக்கிறது என முகத்தில் அறைவது போலச் சொல்லி இந்தியாவில் ஆளும் பாஜகவுக்கு அதிர்ச்சி அலை கிளப்பினார். வழக்கம் போல பாஜக வாயைத் திறக்கவில்லை. பெரிதாக அபிஜித் முகர்ஜியின் கருத்துக்களை கண்டு கொள்ளவும் இல்லை. அவர் நோபல் பரிசை வெல்லும் வரை.

மோடி அரசின் மீது விமர்சனம்

மோடி அரசின் மீது விமர்சனம்

இந்தியப் பொருளாதாரம் தற்போது ஒரு பெரிய பிரச்னையில் சிக்கி இருக்கிறது. இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி பெரிய அளவில் மந்தமடைந்து இருக்கிறது. முதலீடுகள் வருவதும் குறைந்து இருக்கிறது. இதை எல்லாம் விட முக்கியமாக இந்தியாவில் இருந்து பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதில் வளர்ச்சி இல்லாமல் தேங்கிக் கிடக்கிறது என அடிக்கோடு போட்டுச் சொல்லி மோடி அரசுக்கு அழுத்தம் கொடுத்து இருக்கிறார்.

அமைப்புகளை கையாள்வது

அமைப்புகளை கையாள்வது

மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் அரசு, தங்களுக்குக் கீழ் வேலை பார்க்கும் அரசு அமைப்புகளின் சட்ட திட்டங்களை மாற்றுவது அல்லது தங்கள் அரசுக்கு சாதகமாக செயல்படும் அதிகாரிகள் அல்லது நபர்களை பதவியில் அமர்த்திக் கொண்டு இருப்பதையும் வெளிப்படையாக விமர்சித்து இருக்கிறார் பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்ற இந்தியர் நம் அபிஜித் பேனர்ஜி. அதற்கு மேலும் தன் கருத்தை வெளிப்படையாக தெரிவித்து இருக்கிறார்.

சர்ச்சைகள்

சர்ச்சைகள்

இந்திய அரசு, இந்தியாவில் விளைவிக்கப்படும் விவசாயப் பொருட்களை ஏற்றுமதி செய்யக் கூடாது எனச் சொல்லி இருந்ததை விமர்சித்தார். இப்படி இந்தியாவில் விவசாயப் பொருட்களை ஏற்றுமதி செய்வதைத் தடுத்தால் இந்தியாவில் விலை வாசி கட்டுக்குள் இருக்கும் என அரசு சொன்னது. ஆனால் அதை கடுமையாக எதிர்த்தார் அபிஜித் பேனர்ஜி. அதே போல் இன்னொரு சர்ச்சையான விஷயம் என்ன தெரியுமா..? அபிஜித் பேனர்ஜி அரசு வேலைகளில் கோட்டாக்களை ஆதரிப்பதில்லை. அதாவது நம் அபிஜித் பேனர்ஜி, அரசு வேலைகளில் ரிசர்வேசனை ஆதரிப்பதில்லை.

விற்று விடுங்கள்

விற்று விடுங்கள்

எந்த இடத்திலும், அபிஜித் பேனர்ஜி, மோடியின் போக்கை ஆமோதிக்கவில்லையா..? என்று கேட்டால் அதற்கு ஒரு பதில் இருக்கிறது. அது பொதுத் துறை வங்கிகளை விற்பதில் தான். அபிஜித் முகர்ஜியைப் பொறுத்தவரை, மத்திய அரசு, அதிக சிரமப்பட்டு, பொதுத் துறை வங்கிகளில் முதலீடு செய்து அதை இன்னும் சிறப்பாக ஓட வைக்க முயற்சிப்பதற்கு பதிலாக, பொதுத் துறை வங்கிகளை விற்று விடலாம் எனவும் சொல்லி இருக்கிறார் என்பது கவனிக்க வேண்டி இருக்கிறது. ஏற்கனவே 3 வங்கியை ஒரு வங்கி உடன் இணைப்பது 3 வங்கியை இழுத்து மூடுவதற்குத் தானே சமம்.

108 வல்லுநர்கள்

108 வல்லுநர்கள்

மோடி அரசு, இந்தியாவில் வேலை இல்லா திண்டாட்டம் மற்றும் வேலை வாய்ப்பு குறித்த தகவல்களை தேர்தல் காலங்களில் மறைத்த போது, அதை உலகம் முழுவதிலும் இருந்து 108 பொருளாதார வல்லுநர்கள் கடுமையாக கண்டித்தார்கள். அந்த 108 பேரில் நம் அபிஜித் பேனர்ஜியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசு வெளியிடும் தரவுகள் மீது நம்பிக்கையை வரும் படி சரியாக தரவுகளை வெளியிட வேண்டும் எனச் சொன்னார்கள் அந்த 108 பொருளாதார வல்லுநர்கள்.

நியாய் திட்டம்

நியாய் திட்டம்

சமீபத்தில் இந்தியாவின் பாராளுமன்ற மக்களவை தேர்தல் காலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், இந்தியாவின் ஏழை குடும்பங்களுக்கு மாதம் 6,000 ரூபாய் கொடுக்கப்படும் என்கிற நியாய் திட்டத்தில் இவருக்கும் ஒரு முக்கிய பங்கு உண்டு. எனவே தான் நம் பிரதமர் நரேந்திர மோடி கூட, கொஞ்சம் கால தாமதமாகத் தான், நம் அபிஜித் பேனர்ஜி நோபல் பரிசு வென்றதற்கு வாழ்த்து சொன்னார் என இப்போதே நெட்டிசன்கள் ட்ரோல் செய்யத் தொடங்கி இருக்கிறார்கள்.

நோபலுக்குப் பின்

நோபலுக்குப் பின்

இதுவரை சொன்னது எல்லாமே நோபல் பரிசு வாங்குவதற்கு முன், ஆனால் நோபல் பரிசு வாங்கிய பின், "என் பார்வையில், இந்தியப் பொருளாதாரம் மிகவும் மோசமாக இருக்கிறது. இந்தியாவின் நுகர்வு 2014 - 15 முதல் 2017 - 18 காலகட்டத்தில், இந்தியாவின் சராசரி நுகர்வு கொஞ்சம் சரிவைச் சந்தித்து இருக்கிறது. இது கடந்த பல தசாப்தங்களில் இல்லாத வரலாற்று சரிவு" எனச் சொல்லி நம் வயிற்றில் புளியைக் கரைத்து இருக்கிறார்.

தேவை

தேவை

அதோடு இந்தியாவில், அரசுக்கு சரிப்பட்டு வராத அல்லது அரசின் பெயரைக் கெடுக்கும் தரவுகள் அனைத்தும் தவறு என்கிற கண்ணோட்டத்தில் இருக்கிறது. இந்தியப் பொருளாதாரத்தில், பிரச்னைகள் இருப்பதை அரசும் பெரிய அளவில் கண்டு கொள்ளத் தொடங்கி இருக்கிறது. எனவே பொருளாதாரமும் மிக வேகமாக மந்தநிலைக்கு தள்ளப்பட்டு வருகிறது எனவும் சொல்லி நம் அரசுக்கு எச்சரிக்கை கொடுத்து இருக்கிறார்.

விமர்சனம் முக்கியம்

விமர்சனம் முக்கியம்

நம் பிஜித் பேனர்ஜியிடம் இருந்து மோடி அரசுக்கு ஒரு அறிவுரை என்று பார்த்தால், "மோடி அரசு, தன் மீது வரும் விமர்சனத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்" என்பது மட்டும் தான். சமீபத்தில் முன்னாள் ஆர்பிஐ ஆளுநர் ரகுராம் ராஜன் கூட, மத்திய அரசு தன் மீதான விமர்சனங்களை எதிர் கொள்ள வேண்டும் எனச் சொல்லி இருப்பது குறிப்பிடத்தக்கது. இதே வாசகத்தை நம் சுப்ரமணியன் சுவாமி கூட பாரதிய ஜனதா கட்சிக்குள்ளேயே இருந்து கொண்டு சொன்னார் என்பதும் இங்கு நினைவு படுத்திக் கொள்ள முடிகிறது. வழக்கம் பொருளாதார வல்லுநர்கள் தங்கள் விமர்சனத்தை தைரியமாக முன் வைக்கட்டும், நம் அரசு அதை எதிர் கொண்டு தவறுகளை திருத்திக் கொள்ளட்டும். நாடும், நாமும் நலமாய் இருப்போம்.

ஆகையால் கொண்டாடுவோம்

ஆகையால் கொண்டாடுவோம்

படித்தவர்கள், சமூகத்தைப் பற்றிய அக்கறை கொண்டவர்கள் சொல்வதைக் கேட்காத அரசு என்றும் நிலைத்து நின்றதாக சரித்திரம் இல்லை. அப்படிப்பட்ட படித்தவர்கள் ஏழைகளைப் பற்றியும், ஏழ்மையைப் பற்றியும் ஆராய்ச்சி செய்வது, படிப்பது எல்லாம் அபூர்வம் தான். அப்படிப்பட்ட அபூர்வமானவர்களில் ஒருவர் தான் நம் அபிஜித் பேனர்ஜி. உலகில் ஏழ்மையைப் போக்க தன் அறிவைப் பயன்படுத்தி, அதற்கு நோபல் பரிசும் வாங்கி இருக்கும் அபிஜித் பேனர்ஜியை, அவர் செய்த ஆராய்ச்சிக்காகவே தூக்கி வைத்துக் கொண்டாடலாமே..! அவர் நினைத்தது போல் உலகில் ஏழ்மை ஒழியட்டும், மனிதம் மலரட்டும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Who is abhijit banerjee what he criticized on modi bjp government

Who is abhijit banerjee? Why should we have to celebrate Abhijit Banerjee? What are the plans and activities abhijit banerjee criticized in modi led bjp government? What is abhijit banerjee advice to modi and his government?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X