டெல்லி: ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த எரிக்ஸன் நிறுவனம், இன்று (அக்டோபர் 16, 2019, புதன்கிழமை) இந்தியாவின் டெலிகாம் நிறுவனமான ஏர்டெல் உடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இருக்கிறது. இந்த ஒப்பந்தத்தின் படி, எரிக்ஸன் நிறுவனம் தன்னுடைய 5ஜி க்ளவுட் பேக்கெட் கோர் சேவையை ஏர்டெல் நெட்வொர்க் வழியாக, இந்தியாவில் களம் இறக்கப் போகிறார்களாம்.
இந்த புதிய க்ளவுட் பேக்கெட் கோர் சேவையால், ஏர்டெல் இன்னும் சிறந்த நெட்வொர்க்கைக் கொடுக்க முடியுமாம். அதோடு வளர்ந்து வரும் அதிவேக டேட்டா தேவையையும் சரி கட்ட முடியும் எனவும் சொல்லி இருக்கிறது எரிக்ஸன் நிறுவனம்.
"இந்திய டெல்காம் சந்தை ஒரு மிகப் பெரிய டேட்டா பயன்பாட்டைப் பார்த்து வருகிறது. இந்த அதி வேக டேட்டா நுகர்வை சமாளிக்க, புதிய தொழில் நுட்பங்களில் முதலீடு செய்து வருகிறோம். இதனால் எங்கள் (ஏர்டெல்) வாடிக்கையாளர்கள் அதி வேக இணையத்தை நிம்மதியாக பயன்படுத்தலாம்" எனச் சொல்லி இருக்கிறார் ஏர்டெல் நிறுவனத்தின் முதன்மை தொழில்நுட்ப அதிகாரி ரந்தீப் செகான்.
மேலும் "எரிக்ஸன் நிறுவனம் எங்களின் முக்கிய கூட்டு நிறுவனம். இப்போது இவர்களுடன் கை கோர்த்து க்ளவுட் பேக்கெட் கோர் சேவையைப் ஏர்டெல் நெட்வொர்க்கில் பயன்படுத்துவதால், எங்கள் ஏர்டெல் நிறுவன நெட்வொர்க்கின் இணைய வேகம் மட்டும் இன்றி, க்ளவுட் சேவையைப் பயன்படுத்துவதற்கும் ஏர்டெல் தயாராகிவிடும்" எனச் சொல்லி இருக்கிறார் ரந்தீப்.
ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த எரிக்ஸன் நிறுவனத்தின் இந்த க்ளவுட் பேக்கெட் கோர் சேவையைப் பயன்படுத்துவதால் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் மொபைல் பிராட்பேண்டின் அப் டேக்குகள் அதிகமாக இருப்பது, network slicing and Internet of Things (IoT) போன்ற வேலைகளை இன்னும் எளிதாகச் செய்ய முடியுமாம்.