இது கருத்து மோதல் காலம் போல் இருக்கிறது. இப்போது முன்னாள் அதிகாரிகள் மற்றும் முன்னாள் ஆட்சியாளர்கள் மீது தொடர்ந்து புகார் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள், இன்றைய ஆளுm கட்சியினர்கள்.
அதன் தொடர்ச்சியாக தற்போது, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் முன்னாள் ஆர்பிஐ ஆளுநர் ரகுராம் ராஜன் ஆகியோர்கள் மீது நேரடியாக குற்றம் சாட்டி இருக்கிறார்.
எங்கே பேசினர், என்ன பேசினார்..? ஏன் பேசினார்..? இதற்கு முன் நடந்த சம்பவங்கள் என்ன என எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக ஆராய்வோம். முதலில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் இருந்து தொடங்குவோம்.
எங்கே பேசினார்
கொலம்பியா பல்கலைக்கழகத்தின், சர்வதேச மற்றும் பொது விவகாரத் துறைப் பள்ளியில், தீபக் & நீரா ராஜ் மையம் என்கிற அமைப்பு, இந்திய பொருளாதார கொள்கைகள் குறித்து ஒரு விரிவுரைக்கு ஏற்பாடு செய்து இருந்தார்கள். இந்த கூட்டத்தில் பேசும் போது தான் முன்னாள் இந்திய பிரதமர், பொருளாதார மேதை மன்மோகன் சிங் மற்றும் உலகின் முன்னணி பொருளாதார மேதைகளில் ஒருவரான ரகுராம் ராஜன் ஆகியோர்கள் மீது குற்றம் சாட்டி இருக்கிறார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
என்ன பேசினார்
"ரகுராம் ராஜன் ஆர்பிஐ ஆளுநராகவும், மன்மோகன் சிங் பிரதமராகவும் இருந்த காலகட்டம் தான், இந்திய அரசு பொதுத் துறை வங்கிகளின் மோசமான காலம்" எனச் சொல்லி இருக்கிறார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். இந்த ஒரு வரி தான் தற்போது ஆன்லைனில் பெரிய அளவில் விவாதத்துக்கு உட்பட்டு இருக்கிறது. பாஜக ஆட்சிக்கு வந்து சுமார் 6 ஆண்டுகள் முடியப் போகிறது. இப்போதும், அரசு வங்கிகளில் இருக்கும் சிக்கல்களுக்கு அவரையே குறை சொல்வது எந்த விதத்தில் சரி என்றும் கேள்விகள் கேட்கப்பட்டு வருகின்றன.
வேறு என்ன பேசினார்
இன்று, இந்தியாவில் இருக்கும் அரசு வங்கிகளுக்கு இன்னும் ஒரு வாய்ப்பு கொடுப்பதே தன் (நிதி அமைச்சரின்) முதல் கடமையாக இருக்கிறது எனவும் பேசி இருக்கிறார் நிதி அமைச்சர். அதோடு "நன்றாகப் படித்தவர் என்கிற முறையில் நான் ரகுராம் ராஜனை மதிக்கிறேன். இந்திய பொருளாதாரம் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருந்த போது தான் ரகுராம் ராஜன் மத்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக பொறுப்பேற்றுக் கொண்டார்" எனவும் சொல்லி இருக்கிறார்.
கடன் சிக்கல்
அதோடு, ரகுராம் ராஜன் காலத்தில் தான் இந்திய அரசுத் துறை வங்கிகள் பெரிய அரசியல்வாதிகளால் இயங்கிக் கொண்டு இருந்தது. கார்ப்பரேட் நிறுவனங்களுடன் நெருங்கிப் பழகும் அரசியல்வாதிகளிடம் இருந்து ஒரு கால் வந்தால் போதும், அரசு வங்கிகள் கடன்களை அள்ளிக் கொடுத்துவிடுவார்கள். அன்று அப்படி கடன்களை வாரி வழங்கியதால் தான், இன்று, பொதுத் துறை வங்கிகள், அரசிடம் இருந்து முதலீடுகளை எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்" என காட்டமாகச் சொல்லி இருக்கிறார்.
ரகுராம் ராஜன்
சில நாட்களுக்கு முன்பு தான், முன்னாள் ஆர்பிஐ ஆளுநர் ரகுராம் ராஜன், அமெரிக்காவின் ப்ரவுன் பல்கலைக்கழகத்தில், மோடி அரசு, இந்தியப் பொருளாதாரத்தை சிறப்பாக வளர்த்து எடுக்கவில்லை எனக் குற்றம் சாட்டினார். அதோடு மோடி அரசு எல்லா அதிகாரங்களையும் தன் கையில் எடுத்துக் கொண்டது எனவும் குறிப்பிட்டார். இந்த கருத்துக்குத் தான் இப்போது மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கொலம்பியா பல்கலைக்கழகத்துக்கே சென்று பதிலடி கொடுக்கும் விதத்தில், ரகுராம் ராஜன் மற்றும் மன்மோகன் சிங் மீது குற்றம் சாட்டி இருக்கிறார்.