டெல்லி : நலிந்து வரும் இந்தியா பொருளாதாரத்தை ஊக்கப்படுத்த பல்வேறு நிபுணர்களும் பல வித வழி முறைகளை கூறிவரும் நிலையில், பாஜகாவின் மூத்த தலைவரும், பொருளாதார நிபுணருமான சுப்ரமணியன் சுவாமி, இந்தியாவின் பொருளாதாரம் 10 சதவிகித வளர்ச்சியை அடைய சில வழிமுறைகளை கூறியுள்ளார்.
தான் எப்போதும் எதைக் கூறினாலும் அதிரடியாய் கூறுவதும், எதை பற்றி கூறினாலும் அதனை பற்றி தனது வெளிப்படையான கருத்தால், பின் பல சர்ச்சைக்குள்ளாவதும் வழக்கமான ஒரு விஷயமே.
இந்த நிலையில் இந்திய பொருளதாரம் மிக மந்தமாக இருந்து வரும் நிலையில், அதை சீரமைக்க அரசு என்னென்ன செய்யலாம் என சில ஆலோசனைகளை கூறியுள்ளார். அதை என்ன தான சொல்லியிருக்கிறார் என்று பார்ப்போமே.
வருமான வரியை நீக்க வேண்டும்
நலிந்த நிலையில் உள்ள பொருளாதாரத்தை மேம்படுத்த ஒவ்வொரு தனி மனிதருக்கும் அரசு சலுகைகளை அளிக்க வேண்டும், இதற்கு உதாரணமாக தனி மனித வருமான வரி ஒழிப்பு, வருமான வரியை குறைப்பதை விட அவற்றை நீக்க வேண்டும் என்றும், இதை ஈடுகட்ட மக்களின் வருமானத்தில் சிறு பகுதியை கட்டாயம் வங்கிகளில் சேமிப்பாக வைக்க வேண்டும் என நடமுறைப்படுத்த வேண்டும் எனவும், இவ்வாறு செய்வதன் மூலம் வங்கிகளில் சேமிப்பு அதிகரிக்கும் எனவும், இதன் மூலம் வங்கியின் முதலீடுகள் அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்றும் சுவாமி கூறியுள்ளார்.
சேமிப்பு குறைந்து வருகிறது
குறிப்பாக இந்தியாவின் மொத்த உற்பத்தி விகிதத்தை உயர்த்த முதலீடுகளை அதிகரிக்க வேண்டும். இந்த நிலையில் நாளுக்கு நாள் நலிந்து வரும் இந்திய பொருளாதாரம் ஒரு புறம் எனில், மறுபுறம் மக்களின் சேமிப்பும் குறைந்து வருகிறது. குறிப்பிட்டு சொல்லப் போனால் கடந்த 2014ல் இருந்தே சேமிப்பு என்பது மக்களிடையே குறையத் தொடங்கி விட்டது. இதனால் வங்கிகள் முதலீட்டிற்கான நிதி அளிக்கும் அளவுக்கு நிதி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நாட்டின் உற்பத்தியை அதிகரிக்க, தற்போதுள்ள 29 சதவிகித முதலீடுகள் எண்ணிக்கையில் இருந்து, 39 சதவிகிதமாக வங்கிகளில் அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சுவாமி கூறியுள்ளார்.
முதலீடுகளை அதிகரியுங்கள்
இவ்வாறு தனிப்பட்ட மக்களிடையே வரி விகிதங்களை குறைத்து, முதலீடுகளை அதிகரிப்பதால், இது ஜிடிபியில் இது முக்கிய பங்கு வகிக்கும் என்றும் கூறியுள்ளார். மேலும் தற்போது வருமானத்தில் அல்லாத சேமிப்புகள் தற்போது ஜிடிபியில் வெறும் 5 சதவிகிதம் மட்டுமே உள்ளன என்றும், ஆனால் இந்த சேமிப்பை உயர்த்த வங்கிகள், வங்கி வைப்பு தொகைக்கு வட்டியை 9 சதவிகிதத்திற்கும் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும், இதனால் சேமிப்புகள் அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளார்.
கடன் திரும்ப பெற முடியும் என்ற உறுதி வேண்டும்
மேலும் இவ்வாறு அளிக்கப்படும் கடன்களை திரும்ப பெற முடியும் என்ற உறுதியையும் வங்கிகள் பெற்றுக் கொள்ள வேண்டும். இது தவிர உற்பத்தி துறை மற்றும் சேவை துறை, ஏற்றுமதி துறை, வேலை வாய்ப்பினை அதிகரிக்க வேண்டும் என்றும், குறிப்பாக விவசாய உற்பத்தியினைப் பெருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். மேலும் இது வருமாவாயை அதிகரிப்பதோடு இந்திய பொருளாதாரத்தினை மேம்படுத்தவும் உதவும் என்றும் சுவாமி கூறியுள்ளார்.