கடந்த செப்டம்பர் 2016-ல் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தொடங்கப்பட்டதில் இருந்து, ஏர்டெல் மற்றும் ஜியோவுக்கு இடையிலான சண்டை தொடங்கிவிட்டது.
பின்ன என்னங்க..? ஒரு டெலிகாம் கம்பெனியைத் தொடங்கி அடுத்த மூன்றே ஆண்டுகளில் இந்தியாவில் அதிக வாடிக்கையாளர் கொண்ட நிறுவனமாக ஜியோ உருவெடுத்தால், ஏர்டெல்லுக்கு கோபம் வரத் தானே செய்யும்..?
வரத் தான் செய்தது. ஆனால் ரிலையன்ஸ் நிறுவனத்திடம் காசு இருந்தது. அவர்கள் அடித்த் தூள் கிளப்புகிறார்கள் என ஏர்டெல் அமைதியாக இருந்தது. ஆனால் இப்போது ஏர்டெல் சட்ட வழிமுறைகளில் ஜியோ மீது குற்றம் சாட்டி ருத்ர தாண்டவம் ஆடிக் கொண்டு இருக்கிறது. வாருங்கள் அந்த சுவையான விவாதங்களைப் பார்ப்போம்.
என்ன பிரச்னை
முதலில் ஏர்டெல் ஜியோ நிறுவனங்களுக்கு இடையிலான விவாதங்களைப் பார்ப்பதற்கு முன், இவர்களுக்கு மத்தியிலான பிரச்னையைப் பார்த்துவிடுவோம். இனி ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், தன் வாடிக்கையாளர்களிடம் இருந்து ஒரு நிமிடத்துக்கு ஆறு பைசா வசூலிக்கப் போகிறார்கள் என்கிற செய்தியைப் படித்து இருப்பீர்கள். அதற்குக் காரணம் ஐ யூ சி கட்டணம். அதென்ன ஐ யூ சி கட்டணம்..?
ஐயூசி கட்டணம்
உதாரணமாக ஜியோ நெட்வொர்க்கில் இருந்து ஏர்டெல் நெட்வொர்க்குக்கு ஒருவர் கால் செய்கிறார் என்றால், இப்போது ஜியோ, ஏர்டெல் நிறுவனத்தில் அழைப்பை கனெக்ட் செய்து கொள்ள ஒரு நிமிடத்துக்கு 6 பைசா கட்டணம் செலுத்த வேண்டும். இதை ஆங்கிலத்தில் Interconnect Usage Charge என்பார்கள். இது எல்லா நெட்வொர்க்குக்கும் பொருந்தும். இந்த ஐயூசி கட்டணம் தான் இப்போது ஜியோவும் தன் வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலிக்கப் போகிறார்கள். இந்த வசூல் திட்டம் கடந்த வாரத்தில் இருந்தே நடைமுறைக்கு வந்துவிட்டது. ஏன் கடந்த 3 ஆண்டுகளில் இல்லாமல், இப்போது வந்து வசூல் செய்கிறார்கள்..?
ஏன் இப்போது வசூல்
ரிலையன்ஸ் ஜியோ கம்பெனி, கடந்த 3 ஆண்டுகளில் சுமார் 13,500 கோடி ரூபாயை, இந்த ஐயூசி கட்டணமாக பார்தி ஏர்டெல், வோடாஃபோன் ஐடியா போன்ற போட்டி நிறுவனங்களுக்குச் செலுத்தி இருக்கிறார்கள். தற்போது, இந்த இழப்பை சரி கட்டத் தான் இப்போது தன் வாடிக்கையாளர்களிடம் இருந்து ஒரு நிமிடத்துக்கு 6 பைசா என கட்டணம் வசூலிக்கத் தொடங்கி இருக்கிறார்கள். 3 வருடங்களுக்குப் பின் முதல் முறையாக ஜியோ வாடிக்கையாளர்கள் வாய்ஸ் காலுக்கு கட்டணம் செலுத்தப் போகிறார்கள். அனேகமாக செலுத்திக் கொண்டு இருப்பார்கள்.
ரிங் டைம் புகார்
இந்த செலவை கணக்கில் எடுத்துக் கொண்ட ஜியோ நிறுவனம், தன் ஜியோ வாடிக்கையாளர்கள், யாருக்கு கால் செய்தாலும் 20 - 25 நொடிகளுக்கு மட்டுமே ரிங் ஆகும் விதத்தில் ரிங்கிங் நேரத்தைக் குறைத்தார்கள். வழக்கமாக இந்தியாவில் ரிங்கிங் நேரம் 40 - 45 நொடிகளாக இருக்கிறதாம். இப்படி தன் நேரத்தை சுமார் பாதிக்கு பாதியாக குறைத்ததால், ஜியோ வாடிக்கையாளர், வேறு நெட்வொர்க் நபருக்கு அழைக்கும் போதும், விரைவில் அழைப்பு கட் ஆகி விடும். எனவே அந்த வேறு நெட்வொர்க் நபர் தான் மீண்டும் ஜியோ வாடிக்கையாளருக்கு அழைப்பார். எனவே ஜியோ வேறு நெட்வொர்க்குக்கு கட்டணம் செலுத்த வேண்டியது போய், மற்ற நெட்வொர்க்குகள், ஜியோவுக்கு ஐ யூ சி கட்டணம் செலுத்தும் நிலை வந்தது.
ஏர்டெல் புகார்
இந்த தில்லு முல்லைக் கண்டு பிடித்த ஏர்டெல் நிறுவனம், கடந்த செப்டம்பர் மாதத்திலேயே, நேரடியாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் தவறுகளைச் சுட்டிக் காட்டி, டிராய் (TRAI - Telecom Regulatory Authority of India) அமைப்பிடம் புகார் கொடுத்தது. இந்த பிரச்னை குறித்து நேற்று (அக்டோபர் 17, 2019, விழாயக்கிழமை) ஒரு திறந்த வெளி விவாதத்துக்கு ஏற்பாடு செய்தது டிராய் அமைப்பு. அதில் தான் ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ என இருவரும் சட்ட ரீதியாகவும், உலகத் தர ரீதியாகவும், தங்கள் தரப்பு நியாய வாதங்களை முன் வைத்து இருக்கிறார்கள். இதோ விவாதம் தொடங்கிவிட்டது...!
ஏர்டெல் வாதம்
ஏர்டெல்லைப் பொறுத்த வரை ரிங்கிங் நேரம் 45 நொடிகள் இருக்க வேண்டும் என தங்கள் தரப்பு வாதங்களை முன் வைத்திருக்கிறார்கள். அதோடு இந்தியாவில் இருக்கும் அனைத்து நெவொர்க்குகளுக்கும் ரிங்கிங் நேரம் ஒரே போலத் தான் இருக்க வேண்டும். வாடிக்கையாளர்கள் தங்களுக்கும் வரும் கால்களை அட்டண்ட் செய்ய போதுமான கால அவகாசத்தைக் கொடுக்க வேண்டும் என வாதிட்டு இருக்கிறார்கள். எனவே 45 நொடிகள் தான் சரியாக இருக்கும் என்றார்கள் ஏர்டெல் தரப்பினர்கள்.
சமநிலை தவறும்
இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு டெலிகாம் நிறுவனமும், தங்கள் இஷ்டப்படி ரிங்கிங் நேரத்தை வைத்திருந்தால், ஒரு நெட்வொர்க் வாடிக்கையாளர்களுக்கு வரும் அழைப்புகளை எடுத்துப் பேச போதுமான நேரம் இருக்கும். மற்றொரு நிறுவன வாடிக்கையாளர்களுக்கு போதுமான நேரம் இருக்காது. எனவே ஒரே நிறுவனம் தொடர்ந்து மற்றொரு நிறுவனத்துக்கு மேலே சொன்ன ஐ யூ சி கட்டணத்தைச் செலுத்த வேண்டி இருக்கும். ஒரே நிறுவனம் அதிக நஷ்டத்தைச் சுமக்க வேண்டி இருக்கும்.
உதாரணம்
உதாரணமாக, ஜியோ நிறுவனம் தன் ரிங்கிங் நேரத்தை 25 நொடியாக வைத்திருக்கிறது. ஏர்டெல் 45 நொடியாக வைத்திருக்கிறார்கள். ஜியோ வாடிக்கையாளர்கள், ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு அழைத்தால், ஏர்டெல் வாடிக்கையாளர் ஜியோ வாடிக்கையாளரின் 25 நொடி அழைப்பை எடுக்கும் வாய்ப்பு குறைவு தான். ஆனால் ஏர்டெல் வாடிக்கையாளர் ஜியோ வாடிக்கையாளருக்கு அழைத்தால் 45 நொடி அழைப்பை எடுப்பதற்கான வாய்ப்பு மிகவும் அதிகம். எனவே ஏர்டெல் தான் ஜியோவுக்கு ஐ யூ சி கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும். இந்த விளக்கத்தைக் கேட்ட பின், ஏர்டெல்லின் வாதம் சரியாகத் தானே படுகிறது..? இப்போது ஜியோவின் வாதத்தைப் பாருங்களேன்..!
ஜியோ தரப்பு
ஜியோ தரப்பிலோ, ரிங்கிங் நேரம் 20 - 25 நொடிகள் தான் இருக்க வேண்டும் என்கிறார்கள். ஒவ்வொரு நொடி ரிங்கிங் நேரத்தைக் குறைப்பதால் இந்தியாவின் அலை வரிசைகளை இன்னும் சிறப்பாகவும் முழுமையாகவும் பயன்படுத்த முடியும். ரிலையன்ஸ் ஜியோ நெட்வொர்க்கில் சுமார் 94% கால்கள் 25 நொடிகளுக்குள்ளேயே பதிலளிக்கப்பட்டு இருப்பதையும் சுட்டிக் காட்டி இருக்கிறார்கள். அதோடு நெட்வொர்க்குகளின் ரிங் கிங் நேர விவகாரம், டிராயின் வரையறைக்குள் கொண்டு வரக் கூடாது எனவும் சொல்லி இருக்கிறார்கள்.
ஆச்சர்யம்
மேலும், ரிலையன்ஸ் ஜியொ நிறுவனத்தின் ரிங்கிங் நேரத்தை 25 நொடிகளாக குறைத்த பின், எல்லோரும் ஆச்சர்யப்படும் விதத்தில், ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்கள் அதிகம் அவுட் கோயிங் கால்களைச் செய்து இருக்கிறார்களாம். கடந்த ஜூன் 2019 நிலவரப் படி, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் மொத்த வாய்ஸ் காலில் 64 சதவிகிதம் அவுட் கோயிங் தான் போய் இருக்கிறதாம். ஆக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தன் ரிங்கிங் நேரத்தை குறைத்துக் கொண்டதால் லாபம் எதுவும் அடையவில்லை என்பது போலப் பேசி இருக்கிறார்கள். ஆனால் இதை ஜியோ தரப்பினர், வாயைத் திறந்து சொல்லவில்லை.
உலக தரம்
எல்லா பொருட்கள் மற்றும் சேவைகளில் உலக தரம் என்பது ஒரு நல்ல பெஞ்ச் மார்க் தானே. உலக டெலிகாம் சேவைகளில் 15 - 20 நொடிகள் தான் ரிங்கிங் நேரம் என ஜியோ ஒரே போடாக போட்டிருக்கிறது. ஆக ஜியோ, உலக தரத்தை விட 5 நொடிகள் கூடுதலாகத் தான் ரிங்கிங் நேரத்தை நிர்ணயித்து இருப்பது உலக தரத்தை விட அதிகமானது என்றும் விவாதத்தை முன் வைத்து இருக்கிறார்கள். இதை எல்லாம் விட உள்நாட்டில் டெலிகாம் நெட்வொர்க்குகளின் ரிங்கிங் நேரத்தை இதுவரை எந்த ஒரு அமைப்பும் கண்காணிக்கவில்லை. எனவே டெலிகாம் நிறுவனங்களுக்கு ரிங்கிங் நேரத்தை நிர்ணயிக்கும் உரிமை உண்டு எனவும் வாதிட்டு இருக்கிறார்கள் ஜியோ தரப்பினர்கள்.
வொடாஃபோன் ஐடியா தரப்பு
ஏர்டெல் மற்றும் ஜியோவுக்கு இடையிலான இந்த சண்டையில், இரண்டு தரப்பின் பக்கமும் சாயாமல், தன் கருத்தை அழுத்தமாக பதிவு செய்து இருக்கிறது வொடாஃபோன் ஐடியா. இவர்கள் ரிங்கிங் நேரத்தை 30 நொடிகள் நிர்ணயிக்குமாறு கேட்கிறார்கள். அதோடு ரிங்கிங் நேரத்தை மற்ற நிறுவனங்கள் தான் நிர்ணயிக்க வேண்டும் எனவும் சொல்லி இருக்கிறாதர்கள். உதாரணமாக ஏர்டெல் நிறுவன வாடிக்கையாளர், வொடாஃபோன் ஐடியா நிறுவன வாடிக்கையாளருக்கு அழைத்தால், ஏர்டெல்லின் அழைப்பு எவ்வளவு நேரத்தில் துண்டிக்கப்பட வேண்டும் என வொடாஃபோன் ஐடியா தான் தீர்மானிக்க வேண்டும் எனவும் சொல்லி இருக்கிறார்கள். இப்படியாக ஒவ்வொரு நிறுவனமும் தங்கள் தரப்பு வாதங்கள் அழுத்தமாக முன் வைத்து இருக்கிறார்கள்.
தீர்வு
இந்தியாவில் டெலிகாம் நெட்வொர்க்குகள் அனைத்துக்கும் ரிங்கிங் நேரம் ஒன்றாக இருக்க வேண்டுமா அல்லது ஒவ்வொரு நெட்வொர்க்கும் தங்கள் இஷ்டத்துக்கு வைத்துக் கொள்ளலாமா..? ரிங்கிங் நேரம் ஒரே மாதிரியாகத் தான் இருக்க வேண்டும் என்றால் எவ்வளவு நொடிகளை நிர்ணயிப்பார்கள்..? ஜியோவின் 25 நொடிகளா... வொடாஃபோன் ஐடியாவின் 30 நொடிகளா... ஏர்டெல்லின் 45 நொடிகளா..? இவை அனைத்தும் இன்னும் இரண்டு வாரங்களில் தீர்வு காணப் போகிறார்கள் டிராய் அமைப்பினர்கள். அதுவரை இதே எதிர்பார்ப்புடன் காத்திருப்போம். இன்னும் சுவாரஸ்யமான விவாதங்களைக் கேட்போம்.