டெல்லி: சமீபத்தில் தான் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மீது ஏர்டெல் நிறுவனம், இந்தியாவின் டெலிகாம் துறையை நெறிமுறைப்படுத்தும் டிராய் (TRAI - Telecom Regulatory Authority of India) அமைப்பிடம் புகார் கொடுத்தார்கள்.
ஜியோ நிறுவனம் தன் வாடிக்கையாளர்களுக்கான ரிங்கிங் நேரத்தை 25 நொடிகளாக குறைத்துவிட்டார்கள் என்பது தான் குற்றச்சாட்டு. இதனால் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், ஏர்டெல் நிறுவனத்துக்கும் மற்ற நிறுவனங்களுக்கும் செலுத்த வேண்டிய ஐ யூ சி கட்டணங்களைச் செலுத்தாமல் இருக்க, இப்படி ரிங்கிங் நேரத்தைக் குறைத்து இருப்பதாகச் சொன்னார்கள்.
ஆனால் இப்போது, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், நேரடியாக தன் சக போட்டியாளர்களான பார்தி ஏர்டெல், வொடாஃபோன் ஐடியா, பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பி எஸ் என் எல்) என மூன்று நிறுவனங்கள் மீதும் புகார் அளித்து இருக்கிறார்கள்.
என்ன புகார்
பார்தி ஏர்டெல், வொடாஃபோன் ஐடியா, பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பி எஸ் என் எல்) ஆகிய மூன்று இந்திய டெலிகாம் நிறுவனங்கள், தங்கள் நிறுவனத்தின் பல மொபைல் நம்பர்களை வாடிக்கையாளர் சேவை மைய எண்களாகக் கொடுத்து இருக்கிறார்கள். ஆனால் இந்த எண்களுக்கு செய்யப்படும் அழைப்புகள் எல்லாம், நேரடியாக பேசப்படாமல் தங்கள் கால் சென்டர்களுக்கு திருப்பி விடப்படுகின்றன. எனவே பார்தி ஏர்டெல், வொடாஃபோன் ஐடியா, பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பி எஸ் என் எல்) நிறுவனங்கள் கொடுத்திருக்கும் வாடிக்கையாளர்கள் எண்கள் எல்லாம் ஒரு வெர்ச்சுவல் எண்களாகத் தான் இருக்கின்றன.
ஜியோவுக்கு என்ன
இப்படி பார்தி ஏர்டெல், வொடாஃபோன் ஐடியா, பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பி எஸ் என் எல்) நிறுவனங்கள் கொடுத்திருக்கும் எண்களுக்கு, ஜியோ வாடிக்கையாளர்கள் கால் செய்தால் கூட, மற்ற நெட்வொர்க்குகளுக்கு, ஜியோவிடம் இருந்து கால் வருகிறது என்கிற கணக்கில், ஜியோ நிறுவனம், ஒரு நிமிடத்துக்கு 6 பைசா ஐ யூ சி கட்டணம் செலுத்த வேண்டி இருப்பதாகச் சொல்லி இருக்கிறார்கள். எனவே ஜியோவிடம் இருந்து, ஐ யூசி கட்டணங்களைப் பறிக்க வேண்டும் என்கிற நோக்கிலேயே பார்தி ஏர்டெல், வொடாஃபோன் ஐடியா, பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பி எஸ் என் எல்) நிறுவனங்கள் இப்படிச் செய்து இருப்பதாக டிராயிடம் புகார் கொடுத்து இருக்கிறது ஜியோ நிறுவனம். அதென்ன ஐயூசி கட்டணம்
ஐயூசி கட்டணம்
உதாரணமாக ஜியோ நெட்வொர்க்கில் இருந்து ஏர்டெல் நெட்வொர்க்குக்கு ஒருவர் கால் செய்கிறார் என்றால், இப்போது ஜியோ, ஏர்டெல் நிறுவனத்தில் அழைப்பை கனெக்ட் செய்து கொள்ள ஒரு நிமிடத்துக்கு 6 பைசா கட்டணம் செலுத்த வேண்டும். இதை ஆங்கிலத்தில் Interconnect Usage Charge என்பார்கள். இது எல்லா நெட்வொர்க்குக்கும் பொருந்தும். இந்த ஐயூசி கட்டணம் தான் இப்போது ஜியோவும் தன் வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலிக்கப் போகிறார்கள். இந்த வசூல் திட்டம் கடந்த வாரத்தில் இருந்தே நடைமுறைக்கு வந்துவிட்டது. ஏன் கடந்த 3 ஆண்டுகளில் இல்லாமல், இப்போது வந்து வசூல் செய்கிறார்கள்..?
இப்போது வசூல்
ரிலையன்ஸ் ஜியோ கம்பெனி, கடந்த 3 ஆண்டுகளில் சுமார் 13,500 கோடி ரூபாயை, இந்த ஐயூசி கட்டணமாக பார்தி ஏர்டெல், வோடாஃபோன் ஐடியா போன்ற போட்டி நிறுவனங்களுக்குச் செலுத்தி இருக்கிறார்கள். தற்போது, இந்த இழப்பை சரி கட்டத் தான் இப்போது தன் வாடிக்கையாளர்களிடம் இருந்து ஒரு நிமிடத்துக்கு 6 பைசா என கட்டணம் வசூலிக்கத் தொடங்கி இருக்கிறார்கள். 3 வருடங்களுக்குப் பின் முதல் முறையாக ஜியோ வாடிக்கையாளர்கள் வாய்ஸ் காலுக்கு கட்டணம் செலுத்தப் போகிறார்கள். அனேகமாக செலுத்திக் கொண்டு இருப்பார்கள்.
புகார்
இந்த செலவை கணக்கில் எடுத்துக் கொண்ட ஜியோ நிறுவனம், தன் ஜியோ வாடிக்கையாளர்கள், யாருக்கு கால் செய்தாலும் 20 - 25 நொடிகளுக்கு மட்டுமே ரிங் ஆகும் விதத்தில் ரிங்கிங் நேரத்தைக் குறைத்தார்கள். வழக்கமாக இந்தியாவில் ரிங்கிங் நேரம் 40 - 45 நொடிகளாக இருக்கிறதாம். இப்படி தன் நேரத்தை சுமார் பாதிக்கு பாதியாக குறைத்ததால், ஜியோ வாடிக்கையாளர், வேறு நெட்வொர்க் நபருக்கு அழைக்கும் போதும், விரைவில் அழைப்பு கட் ஆகி விடும். எனவே அந்த வேறு நெட்வொர்க் நபர் தான் மீண்டும் ஜியோ வாடிக்கையாளருக்கு அழைப்பார். எனவே ஜியோ வேறு நெட்வொர்க்குக்கு கட்டணம் செலுத்த வேண்டியது போய், மற்ற நெட்வொர்க்குகள், ஜியோவுக்கு ஐ யூ சி கட்டணம் செலுத்தும் நிலை வந்தது.
ஏர்டெல் புகார்
இந்த தில்லு முல்லைக் கண்டு பிடித்த ஏர்டெல் நிறுவனம், கடந்த செப்டம்பர் மாதத்திலேயே, நேரடியாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் தவறுகளைச் சுட்டிக் காட்டி, டிராய் (TRAI - Telecom Regulatory Authority of India) அமைப்பிடம் புகார் கொடுத்தது. இந்த பிரச்னை குறித்து நேற்று (அக்டோபர் 17, 2019, வியாழக்கிழமை) ஒரு திறந்த வெளி விவாதத்துக்கு ஏற்பாடு செய்தது டிராய் அமைப்பு. அதில் தான் ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ என இருவரும் சட்ட ரீதியாகவும், உலகத் தர ரீதியாகவும், தங்கள் தரப்பு நியாய வாதங்களை முன் வைத்து இருக்கிறார்கள்.
பதில் புகார்
ஏர்டெல் நிறுவனம், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மீது கொடுத்த புகரை டிராய் அமைப்பினர் விசாரித்துக் கொண்டு இருக்கிறார்கள். நேற்று (அக்டோபர் 17, 2019 வியாழக்கிழமை) ஒரு திறந்த வெளி விவாதத்தையும் நடத்தி டெலிகாம் நிறுவன தரப்பு நியாயங்களையும் வாதங்களையும் கேட்டார்கள் டிராய் அமைப்பினர்கள். இதெல்லாம் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கும் போதே, இப்போது பார்தி ஏர்டெல், வொடாஃபோன் ஐடியா, பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பி எஸ் என் எல்) போன்ற நிறுவனங்கள், ஜியோவிடம் இருந்து முறையற்ற ரீதியில் பணம் பறித்துக் கொண்டு இருப்பதாகப் புகார் கொடுத்திருக்கிறது ஜியோ.
நிமிடத்துக்கு 52 பைசா காலி
அதோடு ஜியோ நிறுவன வாடிக்கையாளர்கள், டோல் ஃப்ரீ மற்றும் யுனிவர்சல் ஆக்ஸிஸ் எண்களுக்கு அழைக்கும் போது ஒரு நிமிடத்துக்கு 52 பைசா கட்டணம் கொடுக்க வேண்டுமாம். ஆனால் ஜியோ நிறுவனத்துக்கு அப்படி வர வேண்டிய வருவாய் வருவதில்லையாம். இப்படி பார்தி ஏர்டெல், வொடாஃபோன் ஐடியா, பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பி எஸ் என் எல்) போன்ற நிறுவனங்கள் ஜியோ நிறுவனத்திடம் இருந்து முறையற்ற ரீதியில் மோசடி செய்து ஐ யூ சி கட்டணங்களைப் பெறுவதுடன், தங்களுக்கு வர வேண்டிய கட்டணங்களும் வருவதில்லை என புகார் கொடுத்திருக்கிறது ஜியோ நிறுவனம்.
கோடிக் கணக்கில் நஷ்டம்
இப்படி ஜியோ நிறுவன வாடிக்கையாளர்கள், பார்தி ஏர்டெல், வொடாஃபோன் ஐடியா, பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பி எஸ் என் எல்) போன்ற நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை எண் மற்றும் டோல் ஃப்ரீ எண்களுக்கு கால் செய்து பேசிய நிமிடங்கள் எல்லாம் மில்லியன் கணக்கில் இருக்கும். இதற்கு எல்லாம் முறையாக ஒரு நிமிடத்துக்கு 52 பைசா எனக் கொடுத்தால் பல கோடி ரூபாய் ஜியோ நிறுவனத்துக்கு கொடுத்திருக்க வேண்டும் எனவும் சொல்லி இருக்கிறது ஜியோ. அதனால் தான் ஐ யூ சி கட்டணத்தை ரத்து செய்ய பரிசீலிக்குமாறு ட்ராய் அமைப்பிடம், ஜியோ கோரிக்கை வைத்துக் கொண்டு இருக்கிறார்களாம்.
ஐ யூ சி பிரச்னை
தற்போது ஒரு நிமிடத்துக்கு இந்தியா முழுக்க ஐ யூ சி கட்டணம் 6 பைசாவாக இருக்கிறது. சமீபத்தில் தான் டிராய் அமைப்பு, இந்த ஐ யூ சி கட்டணத்தை முழுமையாக வரும் ஜனவரி 2020-க்குள் நீக்குவதைப் பற்றி பரிசீலிப்பதாகச் சொன்னது. இப்போது அதே ஐ யூ சி பெயரைச் சொல்லி ஏர்டெல், ஜியோ குழாய் அடிச் சண்டையில் ஈடுபட்டிருக்கிறது. ஐ யூ சி கட்டணம் நிலைத்தால் ஏர்டெல், வொடாஃபோன் ஐடியா போன்ற நிறுவனங்களுக்கு ஜாலி. ஐ யூ சி கட்டணம் முழுமையாக ரத்து செய்யப்பட்டால் ஜியோவுக்கு ஜாலி. எப்படிப் பார்த்தாலும் காலியாகப் போவது நாம் தான் போல..!