இந்தியாவில் நிலவி வரும் பொருளாதார மந்தம், மெதுவான வளர்ச்சியால் ஒரு புறம் அதிகளவிலான அன்னிய முதலீடுகள் வெளியேறி வரும் நிலையில், இந்தியா தான் முதலீட்டுக்கு சிறந்த இடம் என்றும் கூறியுள்ளார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
மத்திய நிதியமைசார் நிர்மலா சீதாராமன் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், வாஷிங்டனில் நடந்த சர்வதேச நிதியத்தின் (ஐ.எம்.எப்.) கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டு நிர்மலா சீதாராமன் பேசியுள்ளார்.
அதில் இந்தியா போன்ற அன்பான முதலாளித்துவ நாட்டை வேறு எங்கும் காண முடியாது. இந்த நிலையில் உலகில் இந்தியாவை விட முதலீடு செய்ய, வேறு சிறந்த நாட்டை காணவும் முடியாது. மேலும் முதலீட்டாளர்களுக்கு தேவையான சீர்திருத்த நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது என்றும் கூறியுள்ளார்.
இந்தியா வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரம்
இந்த உரையின் போது, தற்போது வேகமாக வளர்ந்து வருகிற பொருளாதார நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது. மேலும் இந்தியாவில் மிகச்சிறப்பான மனித வளமும், சீர்திருத்தங்கள் என்ற பெயரில் என்னவெல்லாம் தேவையோ, அதையெல்லாம் செய்து கொண்டிருக்கிற அரசாங்கமும் இருக்கிறது என்றும், இது எல்லாவற்றிற்கும் மேலாக ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சி உள்ளது என்றும் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
இந்தியாவில் ஏன் முதலீடு?
மேலும் இந்தியாவில் முதலீட்டாளர்கள் எதற்காக முதலீடு செய்ய வேண்டும்? என்ற கேள்விக்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன், இந்தியாவில் நீதிமன்ற நடைமுறைகள் சற்றே தாமதமாக இருந்தாலும்கூட, இந்தியா ஒரு வெளிப்படையான, திறந்த சமூகத்தை கொண்டிருக்கிறது என்றும் கூறியுள்ளார். மேலும் சட்டத்தின் ஆட்சி இந்தியாவில் வேலை செய்கிறது என்றும், இங்கு ஏராளமான சீர்திருத்தங்கள் செய்யப்படுகின்றன. மேலும் ஜனநாயகத்தின் மீது நேசமும், முதலாளித்துவத்தின் மீது மரியாதையும் வைத்திருக்கிற சூழல் இந்தியாவில் இருக்கிறது. இதனால் இந்தியாவை விட முதலீடு செய்வதற்கு சிறந்த இடம் ஏதும் இல்லை என்றும் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
பல எதிர்ப்பார்ப்புகளை அரசு புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது
மேலும் இன்சூரன்ஸ் துறையில் முதலீட்டு உச்சவரம்பை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிற அந்த துறையினரின் கேள்விகளுக்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன், இன்சூரன்ஸ் துறையில் முதலீட்டு உச்சவரம்பை நீக்குவது தவிர்த்து, இந்த துறையின் பல எதிர்பார்ப்புகளை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டியதிருக்கிறது. இதனால் உச்சவரம்பை நீக்க திறந்த மனதுடன் உள்ளது. இது தொடர்பான விவரங்களை நீங்கள் அனுப்பி வையுங்கள். ஆனால் அதே நேரத்தில் இப்போது அது தொடர்பான வாக்குறுதிகள் என்னால் எதையும் தர இயலாது என்றும் கூறியுள்ளார்.
தீவிர நடவடிக்கை
இந்திய பொருளாதாரம் மந்த நிலையில் இருப்பது பற்றி கேட்ட போது, அதற்கு நிர்மலா சீதாராமன் பாதிக்கப்பட்டுள்ள துறைகளில் உள்ள பிரச்சினைகளை சரிசெய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் அடுத்து வரவிருக்கும் பிப்ரவரியில் வரக்கூடிய பட்ஜெட்டுக்காக காத்திருக்காது, பிரச்சினைக்குரிய துறைகளில் தற்போது தலையிட்டு நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றும் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
நிதிப்பற்றாக்குறையை போக்க அரசு உறுதி
ஒரு புறம் அரசு பொருளாதாரத்தை மேம்படுத்தி வரும் நிலையில், இந்தியாவில் நிலவி வரும் பொருளாதார மந்த நிலையை போக்க அரசு உறுதி பூண்டுள்ளது என்றும், நிலவி வரும் பொருளாதார மந்த நிலையை போக்க குறிப்பிட்ட துறைகளில் உள்ள பிரச்சனைகளை களைய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும், மேலும் ஒட்டுமொத்த நுகர்வையும் அதிகரிக்க அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றும் கூறியுள்ளார்.
பணப்புழக்கம் அதிகரிக்க நடவடிக்கை
அதே போல மக்களின் கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் பணப்புழக்கம் கிராமங்களையும் சென்றடையும் படி, வங்கிகள், பிற நிதி நிறுவனங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இதற்காக அன்மையில் பொதுத்துறை வங்கிகள் லோன் மேளாக்களை நடத்தவும் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.