சம்பளம் என்றால் என்ன நம் ரேஞ்சுக்கு மாதம் ஒரு 30,000 அல்லது 40,000 ரூபாயாக இருக்கும். துறை ரீதியாக, 10 - 15 ஆண்டுகள் நல்ல அனுபவம் கொண்டவராக இருந்தால், மாதம் சராசரியாக ஒரு லட்சம் ரூபாய் முதல் 3 லட்சம் ரூபாய் வரை வாங்கலாம். இது தான் மிடில் க்ளாஸ் மக்களான நம்முடைய மிகப் பெரிய சம்பள எதிர்பார்ப்பு.
ஆக, அதிகபட்சம் ஆண்டுக்கு 36,00,000 ரூபாயைத் தாண்ட வாய்ப்பே இல்லை. இப்படி ஆண்டுக்கு 36,00,000 ரூபாய் சம்பளத்தை நாம் ஈட்டுவதாக இருந்தால் ஐந்து முதல் ஏழு வருடங்களில் வீடு கார், வங்கியில் சுமாராக 50,00,000 ரூபாய்க்கு டெபாசிட் என வாழ்கையே செட்டில் ஆக்கிக் கொள்வோம்.
ஆனால் இங்கு ஒரு 9 பேரின் சம்பளம் ஆண்டுக்கு 100 கோடி ரூபாயாம். இதை நம் மத்திய வருமான வரித் துறையினரே சொல்லி இருக்கிறார்கள்.
குட்டி கணக்கு
இந்தியாவில் கடந்த 2017 - 18 நிதி ஆண்டின் கணக்குப் படி, இந்தியாவில் மொத்தம் 9 பேர் ஆண்டுக்கு 100 கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்கிக் கொண்டு இருக்கிறார்களாம். ஒட்டு மொத்தமாக இந்தியாவில் சுமார் 49,100 பேர் ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் சம்பளமாக வாங்கிக் கொண்டு இருக்கிறார்களாம். இந்த தரவுகளை எல்லாம் மத்திய வருமான வரித் துறை, தங்களிடம் சமர்பிக்கப்பட்ட வருமான வரிப் படிவங்களை அடிப்படையாக வைத்துச் சொல்கிறார்களாம்.
சம்பளம் சராசரி
இந்தியாவில் மொத்தம் 2.9 கோடி சம்பளதாரர்கள் முறையாக வருமான வரியைத் தாக்கல் செய்து இருக்கிறார்களாம். அதில் சுமாராக 81.5 லட்சம் பேரின் சராசரி ஆண்டு சம்பளம் 5.5 லட்சம் ரூபாய் முதல் 9.5 லட்சம் ரூபாய் வரை இருக்கிறதாம். சுமார் 22 லட்சம் பேர் ஆண்டு சம்பளமாக 10 - 15 லட்சம் ரூபாயைப் பெறுகிறார்களாம்.
15 -25 லட்சம் அதற்கு மேல்
அந்த 2.9 கோடி சம்பளதாரர்களில் 7 லட்சம் பேர் ஆண்டுக்கு 15 - 20 லட்சம் ரூபாயை சம்பளமாகப் பெறுகிறார்களாம். 3.8 லட்சம் பேர் மட்டும் ஆண்டு சம்பளமாக 20 - 25 லட்சம் ரூபாயை வாங்கிக் கொண்டு இருக்கிறார்களாம். இதுவே மிகப் பெரிய சம்பளம் தானே, இதற்கு மேலும் சம்பளம் வாங்குகிறார்களா எனக் கேட்டால், ஆம் வாங்குகிறார்கள் என்பது தான் பதிலாக இருக்கிறது.
25 - 100 லட்சம்
இவர்கள் தான் சம்பளம் வாங்கும் பணக்காரர்கள். இந்தியாவின் 2.9 கோடி சம்பளதாரர்களில் 25 - 50 லட்சம் ரூபாயை ஆண்டு சம்பளமாக வாங்குபவர்களின் எண்ணிக்கை 5 லட்சம். அதற்கு மேல் 50 லட்சம் ரூபாய் என்கிற இமயத்தைத் தாண்டி ஆனால் 1 கோடி ரூபாய் என்கிற எவரெஸ்ட் சிகர சம்பளத்துக்குள், 1.2 லட்சம் பேர் சம்பளம் வாங்கிக் கொண்டு இருக்கிறார்கள். அதாவது 1.2 லட்சம் பேர் 50 - 100 லட்சம் ரூபாய்க்குள் சம்பளம் வாங்கிக் கொண்டு இருக்கிறார்கள்.
ஒரு கோடி - 100 கோடி
இந்த எவரெஸ்ட் சிகர சம்பளமான 1 கோடி ரூபாய்க்கு மேல் 49,128 பேர், ஒரு ஆண்டு சம்பளமாக வாங்கிக் கொண்டு இருக்கிறார்கள். அதிலும் 9 பேர், அந்த ஒன்பது பேர் மட்டும் ஆண்டுக்கு 100 கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்கிக் கொண்டு இருக்கிறார்களாம். இப்போது வரை 500 கோடி ரூபாய்க்கு மேல் தான் சம்பளம் வாங்க ஆள் இல்லையாம். தனி மனிதர்களின் பிரைவசியை கருத்தில் கொண்டு வருமான வரித் துறை தனி நபர்களின் விவரங்களை வெளியிடவில்லையாம்.
கோடீஸ்வரர்கள்
இந்தியாவில் கடந்த 2017 - 18 நிதி ஆண்டில் சம்பாதித்த அல்லது சம்பளமாக வாங்கிய பணத்துக்கு 2018 - 19 நிதி ஆண்டில் தான் வருமான வரி செலுத்தி இருப்பார்கள். இப்படி அனைத்து தரப்பினரையும் (சம்பளம், பிசினஸ், கமிஷன் வியாபாரம் என எல்லா பிரிவையும் சேர்த்து) கணக்கில் எடுத்துக் கொண்டால், ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் சம்பாதிப்பவர்களை கணக்கெடுத்துப் பார்த்தால் மொத்தம் 97,689 பேர் வருகிறார்களாம். இது கடந்த 2016 - 17 நிதி ஆண்டில் இருந்த கோடீஸ்வரர்களின் எண்ணிக்கையை விட 20 சதவிகிதம் அதிகமாம். வல்லரசு இந்தியாவுக்கு வாழ்த்துக்கள்.