அக்டோபர் 22 அன்று பி எஸ் இ-யில் பேங்க் ஆப் மகாராஷ்டிராவின் பங்குகள் 18 சதவீதம் உயர்ந்தன. இது இந்த வங்கியின் வலுவான 2019 ஜூலை-செப்டம்பர் காலாண்டு முடிவுகளால் இந்த தீபாவளி ராக்கெட் பறந்து இருக்கிறது. இந்த நிறுவனத்தின் நிகர லாபம் 2018-ம் ஆண்டின் இதே காலாண்டில் வெறும் 27 கோடி ரூபாயாக இருந்தது. அதற்கு அடுத்த காலாண்டே (டிசம்பர் 2018)-ல், படு பயங்கர நஷ்டத்தைச் சந்தித்தது. 3,764 கோடி ரூபாய் நஷ்டம். அதற்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாகத் தேறி, அடுத்த காலாண்டிலேயே (மார்ச் 2019) 72 கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்டியது. அதற்கு அடுத்த காலாண்டில் (ஜூன் 2019)-ல் மீண்டும் 81 கோடி ரூபாயை நிகர லாபமாக சம்பாதித்தது.
இப்போது இந்த செப்டம்பர் 2019 காலாண்டில் 114.6 கோடி ரூபாயை நிகர லாபமாக சம்பாதித்து இருக்கிறது. ஆக கடந்த செப்டம்பர் 2018 காலாண்டில் ஈட்டிய 27 கோடி ரூபாய் நிகர லாபத்துடன் இந்த செப்டம்பர் 2019 காலாண்டில் ஈட்டிய 114 கோடி ரூபாயை ஒப்பிட்டால் நான்கு மடங்கு கூடுதலாக நிகர லாபம் ஈட்டி இருப்பதாகத் தெரிகிறது. இந்த வங்கியின் நிகர வாராக் கடன், கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் 10.61 சதவீதத்திலிருந்து, இந்த 2019 - 20 நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டில் 5.48 சதவீதமாக குறைந்துள்ளது. மொத்த வாராக் கடன் கடந்த 2019 - 20 நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டில் 16.86 சதவீதமாக குறைந்து இருக்கிறது. இதுவே கடந்த 2018 - 19 நிதி ஆண்டில் 18.64 சதவீதமாக இருந்தது கவனிக்க வேண்டி இருக்கிறது.
ஒரு அரசு பொதுத் துறை வங்கி இப்படி நான்கு மடங்கு அதிக லாபம் ஈட்டுவதைப் பார்க்கும் போது மகிழ்ச்சியாகத் தான் இருக்கிறது. இப்படி, அரசுத் துறை வங்கிகள் எல்லாமே கொஞ்சம் கறாராக வியாபாரம் பார்த்தால் நிச்சயம் எல்லா வங்கிகளும் லாபம் பார்த்துவிடும் என்றே தோன்றுகிறது. அரசு வங்கிகளும், அரசு வங்கி அதிகாரிகளும், நல்ல லாபத்தை ஈட்டும் நோக்கத்தில் இருக்கிறார்கள் என நம்புகிறோம்.