Recommended Video
சில நாட்களுக்கு முன், மேற்கு வங்கத்தை பூர்வீகமாகக் கொண்ட அபிஜித் பானர்ஜி, பொருளாதாரத் துறையில் நோபல் பரிசு பெற்றார். அந்த ஒற்றை நோபல் பரிசுக்கு ஒட்டு மொத்த இந்தியாவும் கொண்டாடியது.
அதோடு சின்ன சின்ன சண்டைகளும் வரத் தான் செய்தன. வங்காளியா குஜராத்தியா..? மீனா, தோக்ளாவா..? போன்ற மாநில பிரச்னைகள் எழுந்தன. அதோடு அபிஜித் பானர்ஜி பாஜகவை எதிர்ப்பவர் என்கிற ரீதியிலும் செய்திகள் வந்து கொண்டிருந்தன.
அபிஜித் பானர்ஜி பாரதிய ஜனதா கட்சியை விமர்சித்தவைகள், பாரதிய ஜனதா கட்சியின் பல நடவடிக்கைகளை விமர்சித்த கட்டுரைகள் என பல விஷயங்கள் ஒவ்வொன்றாக வெளியே வரத் தொடங்கின.
பேட்டி
சமீபத்தில் ஒரு அமெரிக்க டிவி சேனலுக்கு, அபிஜித் பானர்ஜி கொடுத்த பேட்டியில் கூட "இந்தியப் பொருளாதாரம் நிலையற்றதாக, உறுதி இல்லாமல் இருக்கிறது. கடந்த 5 - 6 ஆண்டுகளாக இந்தியாவால் கொஞ்சமாவது வளர்ச்சி காண முடிந்தது. ஆனால் இப்போது அந்த வளர்ச்சி கூட உறுதிப்படுத்த முடியாத நிலையில் இந்தியா தவித்துக் கொண்டு இருக்கிறது" எனச் சொல்லி இருந்தார்.
எதிர்காலம்
அதோடு "தற்போது இந்தியப் பொருளாதாரம் குறித்து வெளியாகி இருக்கும் தரவுகளைப் பார்க்கும் போது, இந்தியப் பொருளாதாரம் உறுதியற்ற நிலையில் இருக்கிறது. எப்போது இந்தியப் பொருளாதாரம் தன் பொருளாதார மந்த நிலை போன்ற சிக்கல்களில் இருந்து மீண்டு வரும் எனத் தெரியவில்லை" எனச் சொன்னார். இதை எல்லாம் இவர் பாஜகவுக்கு எதிரானவர் போன்ற பிம்பத்தை உருவாக்கியது. அதோடு மோடி வேறு தாமதமாக அபிஜித்துக்கு வாழ்த்து சொல்லியது பெரிய சர்ச்சையானது. இப்போது அதற்கு எல்லாம் முற்றுப் புள்ளி வைப்பது போல ஒரு சம்பவம் நடந்திருக்கிறது.
அபிஜித் தரப்பு
ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அபிஜித் பானர்ஜி கொடுத்த பேட்டியில், "தற்போது நிதி அமைச்சராக இருக்கும் நிர்மலா சீதாராமன் என் நண்பர் தான். நான் ஜே என் யூ பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த போது தான், அவரும் இங்கு படித்தார். எங்கள் இருவருக்கும் இரு வேறு அரசியல் கருத்துக்கள் இருந்தன. நான் நோபல் வாங்கிய உடன் தன் ட்விட்டர் பக்கத்தில் எனக்கு வாழ்த்து சொல்லி இருந்தார்" என தன் நட்பை வெளிப்படுத்தி இருக்கிறார் அபிஜித்.
கல்வியாளன்
அதோடு "நான் பாஜக, காங்கிரஸ் என இரண்டு தரப்பையும் விமர்சிக்கிறேன், விமர்சித்து இருக்கிறேன். இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போதும், நான் பல விமர்சனங்களை முன் வைத்திருக்கிறேன். என் பழைய கட்டுரைகளையும் விமர்சனங்களையும் எடுத்துப் பாருங்கள். அரசின் நடவடிக்கைகளை விமர்சிப்பது ஒரு கல்வியாளனின் கடமை " எனச் சொல்லி பாஜகவுக்கு எதிரான பிம்பத்தையும் உடைத்து தன்னை ஒரு கல்வியாளனாக நிறுவி இருக்கிறார்.
மோடி தரப்பு
அதே போல, இப்போது நரேந்திர மோடியையும் நேரில் சந்தித்துப் பேசி அதை உறுதி செய்து இருக்கிறார். இந்த சந்திப்பைக் குறித்து இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். இனி மோடி மொழியில்... "பொருளாதாரப் பிரிவில் நோபல் பரிசு வாங்கிய அபிஜித் பானர்ஜி உடனான சந்திப்பு நன்றாக இருந்தது. அபிஜித் பானர்ஜிக்கு மனிதர்களின் மேம்பாட்டில் இருக்கும் ஆர்வத்தை கண் கூடாகப் பார்க்க முடிகிறது." எனப் புகழ்ந்து இருக்கிறார்.
வாழ்த்துக்கள்
அதோடு "பல்வேறு விஷயங்களைப் பற்றி, எங்கள் இருவருக்கும் ஆரோக்கியமான, நீண்ட நேர உரையாடல் நடந்தது. அபிஜித் பேனர்ஜியின் இந்த பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு வென்ற சாதனையால் இந்தியா பெருமை அடைகிறது. அபிஜித் பானர்ஜி தன் வாழ்கையில் மேற்கொண்டு செய்ய இருக்கும் அனைத்து விஷயங்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்" என வாழ்த்தி இருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.