பொதுவாக முதலீடு என்றாலே நம் நினைவுக்கு வருவது வங்கிகளில் டெபாசிட் செய்வது தான். அதே பங்கு சந்தையில்முதலீடு என்றாலே சிலர் தெறித்து ஓடுவர். ஆனால் சரியான ஆலோசனையின் மூலம், சரியான பங்கினை தேர்தெடுத்தால் நிச்சயம் ஒரு நல்ல லாபத்தினை பார்க்க முடியும் என்பதில் சந்தேகமில்லை. அதற்கு சிறந்த உதாரணம் தான் அவந்தி பீட்ஸ்.
ஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்த நிறுவனம், குறிப்பாக விவசாயத்துறையில் முக்கிய பங்கு வகித்து வருகிறது.
அதிலும் குறிப்பாக அவந்தி ஃபீட்ஸ் இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக இறால் வர்த்தகம், அதன் தீவன உற்பத்தி மற்றும் ஏற்றுமதி, அதன் அதி நவீன இறால் மற்றும் மீன் தீவனங்கள், இதன் மூலம் பதப்படுத்தும் தொழிற்சாலைகளுடன் இணைந்து மேம்படுத்தும் முயற்சி என அதன் சேவையை தொடர்ந்து செய்து வருகிறது.
அவந்தி பீட்ஸூக்கு வாடிக்கையாளர்
அவந்தி பீட்ஸ் லிமிடெட் நிறுவனம் உயர்தர தீவனத்தை வழங்குவதில் முன்னணியில் இருந்து வருகிறது. மேலும் சிறந்த தொழில்நுட்ப ஆதரவையும் விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது. இது தவிர உலகளாவிய இறால் வாடிக்கையாளர்களின் தரத்தை பூர்த்தி செய்கிறது. மேலும் இந்த அவந்தி பீட்ஸூக்கு அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் விசுவாசமான வாடிக்கையாளர்களின் நீண்ட பட்டியலே உள்ளது எனலாம்.
ரூ.3 கோடி லாபம்
இந்த நிலையில் இந்த பங்கின் விலை கடந்த அக்டோபர் 22, 2009ல் 1.47 ரூபாயாக இருந்த நிலையில், நடப்பு ஆண்டு அக்டோபரில் 450 ரூபாயை தொட்டுள்ளது. இது கிட்டதட்ட 30,553 சதவிகித வருவாய் ஆகும். கடந்த 2009ம் ஆண்டில் ஒரு முதலீட்டாளர் 1 லட்சம் ரூபாய் இந்த பங்கில் முதலீடு செய்து இருந்தால், இதன் இன்றைய லாபம் 3 கோடி ரூபாய்க்கு மேல், சுமார் 68,000 பங்குகள் அவர் வாங்கியிருக்கிறார் என்று வைத்து கொள்வோம். அதன் இன்றைய விலையில் சுமார் 448 ரூபாய் ஒரு பங்கிற்கு லாபம் கிடைத்திருக்கும் என்பதே உண்மை.
இரண்டாவது காலாண்டில் லாபம் எவ்வளவு?
இறால் ஏற்றுமதியாளரான இந்த நிறுவனம், கடந்த செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், இறால் மற்றும் மீன் தீவனங்களின் ஏற்றுமதி காரணமாக வருவாய் அதிகரித்துள்ளது என்றும், நிகரலாபமானது 155 சதவிகிதம் அதிகரித்து 118.69 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என்றும், இது முந்தைய காலாண்டில் வெறும் 46.39 கோடி ரூபாயாக இருந்தது. இதையடுத்து இந்த நிறுவன பங்கின் விலையானது ஒரே நாளில் 10.35% ஏற்றம் கண்டு 450 ரூபாய்க்கு மேல் வர்த்தகமாகி வருகிறது.
பலே விற்பனை
இதே இந்த நிறுவனம் காலாண்டு அடிப்படையில் கணக்கிடும் போது, நிகரலாபம் 27.69 சதவிகிதம் அதிகரித்து, 92.95 கோடி ரூபாயாக உள்ளது. இதன் முதல் காலாண்டில் 41.66 கோடி ரூபாயாக இருந்துள்ளது. இதே விற்பனையானது 41.66 சதவிகிதம் அதிகரித்து 1,085.28 கோடி ரூபாய்க்கு அதிகரித்துள்ளது. இதே கடந்த ஆண்டி இதே காலாண்டில் வெறும் 46.39 கோடி ரூபாய்க்கு மட்டுமே விற்பனை செய்திருந்ததாகவும் அறிக்கைகள் கூறுகின்றன.
காலாண்டு விற்பனை சரிவு
கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது இதன் விற்பனை சற்று அதிகரித்திருந்தாலும், கடந்த முதல் காலாண்டோடு ஒப்பிடும்போது, 2.36 சதவிகிதம் விற்பனை குறைந்து 1,115.52 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. எனினும் கடந்த ஆறு வர்த்தக நாட்களில் மட்டும் இதன் பங்கு 26.32 சதவிகிதம் லாபம் கொடுத்துள்ளது. மேலும் கடந்த ஆண்டு இந்த பங்கு 21.86 சதவிகிதம் ஏற்றம் கண்டும், இதே முந்தைய ஆண்டில் 17.49 சதவிகிதம் மட்டுமே ஏற்றம் கண்டுள்ளதும் கவனிக்கதக்கது.
ஏற்றுமதி குறைவு
எப்படி எனினும் இந்த நிறுவனம் கடந்த 2018ம் ஆண்டின் இரண்டாவது பாதியில் ஏற்றுமதி சரிந்துள்ள நிலையில், கடந்த மார்ச், 27, 2018ல் 721 ரூபாயாக இருந்த இதன் பங்கின் விலையானது, நடப்பு ஆண்டில் மார்ச் 27ல், 408 ரூபாயாக சரிந்துள்ளது. எனினும் இந்த பங்கின் விலையானது நீண்ட கால போக்கில், நல்ல லாபத்தை கொடுத்துள்ளது என்றே கூறலாம்.