மும்பை : ஒரு புறம் நிலவி வரும் பொருளாதார மந்தம், பணவீக்கம், வேலையிழப்பு, வேலையின்மை இவற்றால் பொதுவாகவே அனைத்து துறைகளும் மந்தமாகவே காணப்படுகிறது.
அதிலும் வங்கிகள் கொடுத்த கடனை வசூலிக்க என்ன தான் நடவடிக்கை எடுத்தாலும், நிலவி வரும் மந்த நிலையால் அவற்றை கட்ட முடியாமல் தவித்து வரும் மக்கள் ஒரு புறம், எனினும் இதை வசூலிக்க முடியாமல் தவித்து வரும் வங்கிகள் மறுபுறம்.
இந்த நிலையில் தற்போது தனியாரை சேர்ந்த ஆர்பிஎல் வங்கியானது, கடந்த செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில் 73 சதவிகிதம் நிகரலாபம் சரிந்துள்ளது.
இதற்கு முக்கிய காரணம் வாராக்கடன் அதிகரிப்பே என்றும் கூறப்படுகிறது. இது நடப்பு நிதியாண்டில் இரண்டாவது காலாண்டில் வெறும் 54 கோடி ரூபாயாக மட்டுமே இருந்தது. இதுவே இதற்கு முந்தைய ஆண்டில் 205 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதே வாராக்கடன் விகிதமானது கடந்த இரண்டாவது காலாண்டில் 2.6 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இதே ஜூன் காலாண்டில் 1.38 சதவிகிதமாகவும், இதே முந்தைய ஆண்டில் இதே காலாண்டில் 1.4 சதவிகிதமாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், மொத்தம் 1,800 கோடி ரூபாய் மிக அழுத்தத்திற்கு உள்ளான வாராக்கடனாக இருப்பதாகவும். அதிலும் குறிப்பாக இந்த தொகையானது 4 குழுமத்திலிருந்து வர வேண்டிய பாக்கி என்றும், இந்த 1,800 கோடி ரூபாயில் 800 கோடி ரூபாய் வாராக்கடனாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த வங்கி தெரிவித்துள்ளது.
அதிலும் கடந்த காலாண்டில் மட்டும் ஆர்பிஎல் 1,377 கோடி ரூபாய் வாராக்கடனைக் கண்டுள்ளதாகவும், இதே ஜூன் காலாண்டுடன் ஒப்பிடும்போது சுமார் 6 முறை அதிகரித்துள்ளது என்றும் கூறப்படுகிறது. இது ஜூன் காலாண்டில் 225 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
எப்படி இருப்பினும் இந்த வாராக்கடன்களை, நடப்பு நிதியாண்டில் நாங்கள் வசூல் செய்து விடுவோம் என்று இந்த வங்கியின் தலைமை செயல் அதிகாரி விஸ்வாவீர் அஹூஜா கூறியுள்ளார்.
இந்த நிலையில் இந்த பங்கின் விலையானது தற்போது 12 சதவிகிதம் வீழ்ச்சி கண்டு, 35 ரூபாய் சரிந்து 251 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது.