டெல்லி : தனியாரை சேர்ந்த தொலைத் தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ, வோடபோன் ஐடியா, பார்தி ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்கள், தங்களது நெட்வொர்க் நிறுவனத்தின் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றைகளுக்கான பாக்கித் தொகையாக 4,500 கோடி ரூபாயை தொலைத் தொடர்பு துறைக்கு செலுத்தியுள்ளன.
இந்த நிறுவனங்களில் சில கடுமையான நிதிச் சிக்கலில் இருந்தாலும், இந்த தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தங்களது நெட்வொர்க் சேவைக்காக அரசிடம் வாங்கிய ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றைகளுக்கான பாக்கித் தொகையைச் செலுத்துவதற்கு அக்டோபர் 21ம் தேதி கடைசித் தேதியாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அதை செலுத்தியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
.இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் கடைசி தேதி அக்டோபர் 21 என்றாலும் இதற்கு முன்னபாகவே இந்த தனியார் நிறுவனங்கள் பாக்கித் தொகையை செலுத்தி விட்டன என்பது தான்.
இதில் முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது பங்குக்காக 1,133 கோடி ரூபாயும், இதே வோடபோன் ஐடியா 2,421 கோடி ரூபாயும் செலுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதே பார்தி ஏர்டெல் நிறுவனம் தனது பாக்கி தொகையாக 977 கோடி ரூபாயும் செலுத்தி உள்ளது.
தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் நெட்வொர்க் நிறுவனங்கள் தாங்கள் வாங்கிய ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றைகளுக்கான பாக்கித் தொகையைச் செலுத்துவதில் நெருக்கடியைச் சந்திக்காமல் இருக்க, சென்ற மார்ச் மாதத்தில் வருடாந்திர தவணை எண்ணிக்கையை 10லிருந்து 16 ஆக உயர்த்தி அறிவித்தது மத்திய அரசு.
இருப்பினும் தொலைத் தொடர்பு துறையில் நிலவி வரும் கடுமையான நிதி நெருக்கடியால், இன்னும் கூடுதல் சலுகைகள் வழங்க வேண்டும் என்று வோடஃபோன் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி, தொலைத் தொடர்பு செயலாளர் அன்ஷு பிரகாஷைச் சந்தித்து முறையிட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் கட்டணக் விகித குறைப்பு, அழைப்பு இணைப்புக்கான கட்டணங்கள் அதிகமாக விதிக்கப்படுவது உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது என்றும், ஜியோவால் நிலவி வரும் போட்டியால் போட்டி போட்டுக் கொண்டு கொடுக்கும் சலுகைகளாலும் நிறுவனங்கள் அதிகளவு கடன்களை சந்தித்துள்ளதாகவும், இத மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதிலும் உடனடியாக லைசென்ஸ் பீஸ், ஸ்பெக்ட்ரம் கட்டணங்கள், ஜிஎஸ்டி விகிதம் உள்ளிட்ட சிலவற்றை குறைக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.