2019 - 20 நிதி ஆண்டுக்கான L&T (Larsen & Toubro) நிறுவனத்தின் ஜூலை முதல் செப்டம்பர் 2019 காலாண்டுக்கு 1,983 கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்டி இருக்கிறது. இது சந்தையில் பல்வேறு அனலிஸ்டுகள் சொல்லி இருந்த கணிப்பை விட அதிகம் என்பது தான் இங்கு செய்தியே. கடந்த 2018 - 19 நிதி ஆண்டின் இதே இரண்டாம் காலாண்டில் ஈட்டிய நிகர லாபமாக 1,753 கோடியை விட 13 சதவிகிதம் அதிகம்.
L&T நிறுவனத்தில் நிகர லாபம் தவிர கவனிக்க வேண்டிய இன்னொரு முக்கியமான விஷயம் அதன் ஆர்டர்கள். 2019 ஜூலை - செப்டம்பர் காலாண்டில் மட்டும் 48,000 கோடி ரூபாய்க்கு ஆர்டர்களைப் பிடித்து இருக்கிறார்களாம். இது 2018 - 19 இரண்டாம் காலாண்டை விட 20 சதவிகிதம் அதிகம் என மிண்ட் பத்திரிகை சொல்லி இருக்கிறது.

இந்த ஆர்டர்களில் உள்நாட்டு ஆர்டர்கள், வெளிநாட்டு ஆர்டர்கள் என இரண்டாகப் பிரிக்கலாம். அப்படிப் பிரித்தால், வெளி நாட்டு ஆர்டர்கள் தான் 35 % அதிகரித்து இருக்கிறதாம். உள்நாட்டு ஆர்டர்கள் 2 சதவிகிதம் குறைந்து இருக்கிறதாம். உள்நாட்டு ஆர்டர்கள் குறைந்ததற்கு இந்தியாவில் நிலவும் மந்த நிலையையும் ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது.
எந்த துறை சார்ந்த வேலைகள் அதிகம் கிடைத்து இருக்கிறது, எந்த துறை சார்ந்த வேலைகள் குறைவாக கிடைத்து இருக்கிறது எனப் பார்த்தால்... இன்ஃப்ராஸ்ட்ரக்சர்களில் 33 % ஆர்டர்கள் குறைந்து இருக்கிறதாம். இந்த சரிவை தொழிற்சாலை சார்ந்த நீர் மேலாண்மை வேலைகள், மலிவு விலை வீடுகள் திட்டம் மற்றும் மின்சார பகிர்மானம் போன்ற துறைகளில் இருந்து கிடைத்த ஆர்டர்கள் தான் L&T நிறுவனத்தின் ஆர்டர் புத்தகத்தைக் காப்பாற்றி இருக்கிறதாம்.
ஒட்டு மொத்தமாக தற்போது L&T நிறுவனத்தின் கை வசம் சுமார் 5.2 லட்சம் கோடி ரூபாய்க்கான ஆர்டர்கள் இருக்கின்றனவாம். L&T நிர்வாகமும் இந்திய பொருளாதார மந்த நிலையால் கொஞ்சம் ஆர்டர்கள் கிடைப்பதில் சுணக்கம் ஏற்பட்டு இருப்பதாகச் சொல்லி இருக்கிறார்கள். இத்தனை வலுவான கம்பெனியில் என்ன பிரச்னை..? Working capital என்று சொல்லப்படும் பணப்புழக்கப் பிரச்சனை. நிறுவனத்தின் கையில் முன்பை விட குறைந்த அளவிலான பணமே இருப்பதாகச் சொல்கிறது மிண்ட் பத்திரிகை. அதற்கு L&T நிறுவன முதன்மை நிதி அதிகாரி "இது பொருளாதார மந்த நிலையால் ஏற்படும் சுணக்கம்" என பதில் கொடுத்து இருக்கிறார்.


Click it and Unblock the Notifications