சியாட்டில், அமெரிக்கா: உலகிலேயே அதிக முறை (24 முறை என்கிற எகனாமிக் டைம்ஸ் பத்திரிகை), உலகின் நம்பர் 1 பணக்காரராக வளம் வந்தவர் யார் எனக் கேட்டால் சின்னக் குழந்தையும் சொல்லும் சூப்பர் ஸ்டார் நம் பில் கேட்ஸ் தான். மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் ஓனரான பில்கேட்ஸ் கடந்த சில வருடங்களாக அமேசான் நிறுவனத்தின் நிறுவனரான ஜெஃப் பிசாஸுக்கு முதல் இடத்தை விட்டுக் கொடுத்து இருந்தார். இப்போது மீண்டும் தன் சிம்மாசனத்தை பாகுபலி கணக்காக தற்காலிகமாக பிடித்து இருக்கிறார்.
சமீபத்தில் தான் அமேசான் நிறுவனத்தின் 2019 ஜூலை - செப்டம்பர் காலாண்டு முடிவுகள் வெளியானது. இந்த காலாண்டு முடிவுகள் அமெரிக்க பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாததால் அமேசான் நிறுவன பங்குகளின் விலை சரியத் தொடங்கின. குறிப்பாக அமேசான் நிறுவனத்தின் நிகர வருமானம் (Net Income) சுமாராக 26 சதவிகித சரிவைச் சந்தித்து இருக்கிறது. இவ்வளவு பெரிய சரிவை அமேசான் நிறுவனம் சந்தித்து இருப்பதால் தான் பங்கு விலையும் அதிரடியாக சரியத் தொடங்கியது. சரிவு என்றால் சாதாரண சரிவு அல்ல, கொஞ்சம் பலமான சரிவு தான்.
அமேசான் நிறுவன பங்குகளின் விலை சுமார் 7 - 9 சதவிகிதம் வரை இறக்கம் கண்டதாகச் சொல்கிறார்கள். நம் அமேசான் நிறுவனர் ஜெஃப் பிசாஸ் கை வசம் வைத்திருந்த அமேசான் நிறுவன பங்குகளின் மதிப்பும் சுமார் 7 பில்லியன் டாலர் சரிந்து விட்டதாம். அவ்வளவு தான் 25 அக்டோபர் 2019 அன்று ஃபோர்ப்ஸ் நிறுவன கணிப்பின் படி 111 பில்லியன் டாலர் சொத்துக்கு சொந்தக்காரராக இருந்த நம் அமேசான் ஓனர் 104 பில்லியன் டாலருக்கு சரிந்து விட்டார். ஆனால் நம் பில் கேட்ஸோ சூப்பர் ஸ்டார் கணக்காக 105 பில்லியன் டாலர் சொத்தில் நிலைத்து நிற்க மீண்டும் தன் முதலிடத்தைப் பிடித்து இருக்கிறார்.
உலகிலேயே முதல் முறையாக 160 பில்லியன் டாலர் சொத்துக்கு அதிபதியாக இருந்தவர் நம் அமேசான் நிறுவனர் ஜெஃப் பிசாஸ் தான் என்பதையும் இங்கு கவனிக்க வேண்டும். அதோடு கடந்த ஏப்ரல் 2019-ல் தான் இவர் விவாகரத்து பெற்று, தன் மனைவிக்கு சொத்துக்களை பிரித்துக் கொடுத்து, தன் மனைவியையும் உலக பணக்கார பெண்கள் பட்டியலில் இடம் பெற வைத்ததையும் இங்கு கவனிக்க வேண்டி இருக்கிறது. இல்லை என்றால் இப்போதும், நம் ஜெஃப் பிசாஸ் தான் உலக பணக்காரர்கள் பட்டியலில் டாப்பில் தான் இருந்து இருப்பார்.