சாவ் பாலோ, பிரேசில்: கூடிய விரைவில், சீனா மற்றும் இந்தியாவில் இருந்து உலகின் மிகப் பெரிய நாடுகளில் ஒன்றான பிரேசிலுக்கு சுற்றுலா பயணிகளாகவோ அல்லது வணிக ரீதியிலான வேலைகளுக்காகவோ பிரேசில் நாட்டுக்குச் செல்பவர்கள், பிரேசில் நாட்டிடம் இருந்து விசா பெற வேண்டும் என்கிற அவசியம் இருக்காது எனச் சொல்லி இருக்கிறது பிரேசில் அரசு.
இந்த அறிவிப்பை தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பிரேசில் நாட்டின் ஜனாதிபதி ஜெய்ர் பால்சனாரோ நேற்று (அக்டோபர் 24, 2019 வியாழக்கிழமை) தெரிவித்தார். கூடிய விரைவில் இந்த விசா ரத்து தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்புகள், பிரேசில் அரசிடம் இருந்து வெளி ஆகும் என எதிர்பார்க்கலாம்.
தீவிர வலது சாரி போக்கைக் கடைபிடிக்கும் அரசியல்வாதியான ஜெய்ர் பால்சனாரோ இந்த ஆண்டின் தொடக்கத்தில் பிரேசில் நாட்டின் அதிபராக ஆட்சிக்கு வந்த பின், பல வளர்ந்த நாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் வியாபார ரீதியிலான பயணங்களை மேற்கொள்பவர்களுக்கான விசா தேவைகளை குறைப்பதற்கான கொள்கையை உருவாக்கினார்
இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே, அமெரிக்கா, கனடா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற வளர்ந்த நாடுகளில் இருந்து, பிரேசில் நாட்டுக்கு சுற்றுலாப் பயணிகளாகவோ அல்லது வணிக ரீதியிலான பயணத்தை மேற்கொள்பவர்களுக்கோ பிரேசில் அரசிடம் இருந்து விசா வாங்க வேண்டிய அவசியம் இல்லை என அறிவித்தது பிரேசில் அரசு. ஆனால் இதுவரை எந்த ஒரு வளர்ந்த நாடுகளும், பிரேசில் நாட்டில் இருந்து வரும் வியாபாரிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் விசா இல்லாமல் தங்கள் நாடுகளுக்கு வந்து போகலாம் என தங்கள் குடியுரிமைச் சட்டங்களை மாற்றிக் கொள்ளவில்லை என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டி இருக்கிறது.
இப்போது தான் பிரேசில் நாட்டின் அதிபர் வளரும் பொருளாதார சக்திகளான சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகளையும் கவனிக்கத் தொடங்கி இருக்கிறார். சமீபத்தில் அதிகாரபூர்வமாக சீனாவுக்குச் சென்ற பிரேசில் அதிபர் ஜெய்ர் பால்சனாரோ, இந்தியா மற்றும் சீனாவில் இருந்து சுற்றுலாவுக்காகவும், வியாபார ரீதியாகவும் பயணம் மேற்கொள்பவர்கள், இனி பிரேசில் அரசிடம் இருந்து விசா பெற வேண்டிய தேவை இருக்காது எனச் சொல்லி இருக்கிறார். எப்படியோ நல்லது நடந்தால் சரி.