இது காலாண்டு முடிவுகள் காலம். இந்திய பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டு இருக்கும் நிறுவனங்களின் நிதி நிலைகள் தற்போது ஒவ்வொன்றாக வெளியாகிக் கொண்டு இருக்கின்றன. கடந்த வெள்ளிக்கிழமை காலை 457 ரூபாய்க்கு வர்த்தகமாகத் தொடங்கி, மாலை 469 ரூபாய்க்கு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. இந்த பங்கு விலை ஏற்றாத்துக்கு, முக்கிய காரணமாக ஐசிஐசிஐ பேங்க் நிறுவனத்தின் பங்குகளை வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் விற்றது தான் என்கிறார்கள். கடந்த காலாண்டை விட இந்த காலாண்டில் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் 2.6 சதவிகிதம் ஐசிஐசிஐ பங்குகளை விற்று வெளியேறி இருக்கிறார்களாம்.
இப்படி வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் இந்த பங்கை விற்று வெளியேறி இருப்பதால், இந்திய இண்டெக்ஸ்களில் ஐசிஐசிஐ வங்கிக்கு இருக்கும் வெயிட்டேஜ் அதிகரிக்கும் எனச் சொல்கிறார்கள் தரகு நிறுவனங்கள். இதனால் தான் பங்கு விலை கட கடவென நேற்று அதிகரித்து இருக்கிறது. அதோடு ஐசிஐசிஐ வங்கியின் பங்கு விலையும் தன் வாழ்நாள் உச்சத்தில் வியாபாரமாகிக் கொண்டு இருக்கிறது என்கிறார்கள் அனலிஸ்டுகள்.
இந்தியாவில் 3 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பைத் தொட்ட நிறுவனங்கள் பட்டியலை எடுத்தால் அனேகமாக 10 நிறுவனங்கள் வரலாம். கடந்த வெள்ளிக்கிழமை வர்த்தகம் நிறைவு அடைந்த போது, இந்தியாவில் 8 நிறுவனங்கள் மட்டுமே 3 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பை விட அதிகமான சந்தை மதிப்பைக் கொண்டிருக்கிறது. இதில் எட்டாவது இடத்தில் நிற்கிறது ஐசிஐசிஐ வங்கி.
எனவே ஐசிஐசிஐ வங்கியின் காலாண்டு முடிவுகளைப் பார்க்க, இந்திய பங்குச் சந்தைகளில் முதலலீடு செய்யும் முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்கள், ஆவலோடு காத்திருந்தார்கள். ஆனால், இன்று வெளியான ஐசிஐசிஐ பேங்கின் காலாண்டு முடிவுகள் மோசமாகவே இருந்தது.
செப்டம்பர் 2018 காலாண்டில் 909 கோடி ரூபாயாக இருந்த நிகர லாபம், இந்த 2019 செப்டம்பர் காலாண்டில் 655 கோடி ரூபாயாக சரிந்து இருக்கிறது. ஐசிஐசிஐ வங்கியின் நிகர வாராக் கடன் இந்த செப்டம்பர் 2019 காலாண்டில் 1.6 சதவிகிதமாக குறைந்து இருக்கிறது. இதற்கு முன் கடந்த ஜூன் 2019 காலாண்டில் 1.7 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. எதிர்பாராத விதமாக 3,712 கோடி ரூபாய் வரி செலுத்தியதால் தான் இந்த நிகர லாப சரிவு எனச் சொல்கிறது ஐசிஐசிஐ வங்கி தரப்பு. இந்த காரணங்களை முதலீட்டாளர்கள் ஏற்றுக் கொண்டார்களா அல்லது புறக்கணிக்கிறார்களா என அடுத்த வர்த்தக நாளில் தெரிந்து விடும்.