டெல்லி: கடந்த ஒரு வருட காலமாக ஆட்டோமொபைல் துறையின் விற்பனை சரிந்து கொண்டே இருக்கிறது. அதற்கு காரணமாக மக்கள் கையில் பணம் இல்லை என்று சொன்னார்கள்.
அதோடு, மக்கள் துணிந்து கடன் வாங்கி கார்களை வாங்கவும் தயாராக இல்லை எனச் சொல்லிக் கொண்டிருந்தோம். மேலே சொன்ன காரணங்களால் ஒவ்வொரு மாதமும் ஆட்டோமொபைல் விற்பனை தரை தட்டிக் கொண்டிருந்ததை நம்மால் அப்பட்டமாக பார்க்க முடிந்தது.
அதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, இந்த பொருளாதார கணிப்புகள் எல்லாம் உடைத்து எறியும் விதத்தில் மெர்சிடஸ் பென்ஸ் கார்களின் விற்பனை விவரங்கள் நம்மை அதிர்ச்சிக்கு உள்ளாக்குகின்றன. அப்படி என்ன அதிர்ச்சி செய்தி..?
ஒரே நாளில்
கடந்த அக்டோபர் 25, 2019 அன்று தந்தேராஸ் பண்டிகை காலத்தில், ஒரே நாளில், 600 மெர்சிடஸ் பென்ஸ் கார்களை விற்பனை செய்து இருக்கிறார்களாம். இதை இந்தியாவில் இயங்கிக் கொண்டிருக்கும் மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனமே மகிழ்ச்சியாகச் சொல்லி இருக்கிறார்கள். விற்பனை ஆன மொத்த 600 கார்களில் ஜி எல் இ ரக மெர்சிடஸ் பென்ஸ் ரக கார்கள் அதிகம் விற்பனை ஆகி இருக்கின்றன.
இலக்கு
இந்த ஜி எல் இ ரக கார்களை விற்பனை செய்ய மெர்சிடல் பென்ஸ் நிறுவனம் ஒரு விற்பனை இலக்குத் திட்டத்தை வைத்து இருக்கிறார்களாம். திட்டமிட்ட இலக்குகளில் 3 மாதங்களில் விற்பனை செய்ய வேண்டிய கார்களை இந்த பண்டிகை காலங்களிலேயே விற்று முடித்துவிட்டார்களாம். அதாவது, மெர்சிடல் பென்ஸ் நிறுவனம், தன்னுடைய விற்பனை இலக்குகளில் 3 மாதம் முன்னோக்கி இருக்கிறது.
எந்த மாநிலத்தில்
இந்த தந்தேராஸ் பண்டிகை காலத்தில் விற்பனையான 600 மெர்சிடஸ் பென்ஸ், கார்களில் சுமார் 50 சதவிகித கார்கள் நம் தலை நகரான டெல்லி மற்றும் என் சி ஆர் பகுதிகளிலேயே விற்கப்பட்டு இருக்கின்றனவாம். மீதமுள்ள 50 சதவிகித கார்கள் தான் பஞ்சாப், பணக்கார மாநிலமான மும்பை, மேற்கு வங்கம், குஜராத் போன்ற மாநிலங்களில் விற்பனை ஆகி இருப்பதாகச் சொல்கிறது மெர்சிடஸ் பென்ஸ் இந்தியா நிறுவனம்.
நம்பிக்கை
இந்த பண்டிகை கால விற்பனை அதிகரித்து இருப்பதால், ஆட்டோமொபைல் துறை மீது நுகர்வோர்கள் நம்பிக்கை அதிகரிப்பதாகவே பார்க்க முடிவதாகச் சொல்கிறது மெர்சிடஸ் பென்ஸ். அதோடு கடந்த தசரா மற்றும் நவராத்திரி பண்டிகை காலங்களில் மும்பை மற்றும் குஜராத் மாநிலங்களில் மட்டும் சுமார் 200 கார்களை பென்ஸ் நிறுவனம் டெலிவரி செய்து இருப்பதாகவும் சொல்கிறது.
பணம்
நடுத்தர மக்கள் மற்றும் ஏழை மக்களிடம் பணம் இல்லை என்பதால் சாதாரண ரக கார்களித் தயாரிக்கும் மாருதி சூசுகி, டாடா மோட்டார்ஸ், ஹியூண்டாய், ஹோண்டா, டொயோட்டொ போன்ற நிறுவனங்களின் விற்பனை சரிந்து கொண்டிருக்கிறது. ஆனால் பணக்காரர்கள் இன்னும் பணக்காரர்களாகத் தான் இருக்கிறார்கள். அவர்கள் கையில் தாராளமாகவே பணம் புழங்கிக் கொண்டிருக்கிறது என்பதற்கு இந்த பென்ஸ் கார் விற்பனை ஒரு வலுவான சாட்சியாக நிற்கிறது.