இந்தியாவில் 2020ஆம் ஆண்டு ஏற்பட்ட கொரோனா தொற்று மற்றும் அதன் வாயிலாக அறிவிக்கப்பட்ட லாக்டவுன் மூலம் பல கோடி மக்களுக்குத் தங்களது வேலைவாய்ப்பையும், வருமானத்தையும் வர்த்தகத்தையும் இழந்துள்ளனர்.
இதன் மூலம் சுமார் 3.2 கோடி இந்திய மக்கள் மிடில் கிளாஸ் பொருளாதார நிலையில் இருந்து வெளியேறியுள்ளனர். இந்திய மக்களின் பல ஆண்டு முயற்சிகள், உழைப்பு ஆகியவற்றின் மூலம் ஏற்பட்ட பொருளாதார முன்னேற்றம் சில மாதங்களில் காற்றில் கரைந்துள்ளது.
மிடில் கிளாஸ் மக்கள்
இந்தியாவில் மிடில் கிளாஸ் மக்கள் என்றால் நாளுக்கு 10 டாலர் முதல் 20 டாலர் வரையில் சம்பாதிக்கும் மக்கள் தான் இப்பரிவில் வகைப்படுத்தப்படுகிறது. வறுமை நிலையில் இருந்து படிப்படியாகக் கடின உழைப்பு மூலம் இப்பிரிவுக்கு வரும் மக்கள் தான் நாட்டின் முதுகெலும்பாகப் பார்க்கப்படுகிறது.
இந்தியப் பொருளாதாரம்
இந்நிலையில் கொரோனா தொற்று இப்பிரிவு மக்களை மிகப்பெரிய அளவில் பாதித்துள்ளது என்பது இந்தியப் பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய இழப்பு என்று தான் சொல்ல வேண்டும்.
3.2 கோடி மக்கள்
கொரோனாவுக்கு முன்பு இப்பிரிவில் சுமார் 9.9 கோடி மக்கள் இருந்த நிலையில் தற்போது இப்பிரிவு எண்ணிக்கை 6.6 கோடியாகக் குறைந்துள்ளது. இதன் மூலம் சுமார் 3.2 கோடி மக்கள் மிடில் கிளாஸ் மக்கள் பிரிவில் இருந்து வெளியேறியுள்ளனர்.
8 வருட உழைப்பு
2011 முதல் 2019 வரையிலான காலத்தில் மட்டும் சுமார் 5.7 கோடி மக்கள் பொருளாதாரத்தில் மேம்பட்டு மிடில் கிளாஸ் பிரிவுக்குள் வந்துள்ளனர். கிட்டதட்ட 8 வருட உழைப்பு, போராட்டத்தைக் கொரோனா சூறையாடியுள்ளது.
2 டாலர் வருமானம்
இதேவேளையில் தினமும் 2 டாலருக்கும் குறைவாகச் சம்பாதிக்கும் மக்களின் எண்ணிக்கை 7.5 கோடியாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது நாட்டின் நிலையை மேலும் மோசமடையச் செய்யும் என்றால் மிகையில்லை.