இந்தியாவில் நாளுக்கு நாள் சாலைகளில் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாகி கொண்டே வருகிறது என்பதும் அதன் காரணமாக போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டு வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.
இந்தியாவில் நடுத்தர வர்க்கத்தினரின் வீடுகளில் கூட இருசக்கர வாகனங்களை பார்க்க முடிகிறது. வசதியானவர்களின் வீட்டில் கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் இரண்டுமே இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது
இந்த நிலையில் மத்திய அரசு நேற்று நாடாளுமன்றத்தில் இந்தியாவில் மொத்தம் எத்தனை வாகனங்கள் இயங்கி வருகின்றன, அதில் எவ்வளவு எலக்ட்ரிக் வாகனங்கள் என்பது குறித்த தகவலை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் வாகனங்களின் எண்ணிக்கை
இந்தியாவில் 21 கோடிக்கும் அதிகமான இருசக்கர வாகனங்களும், 7 கோடிக்கும் அதிகமான நான்கு சக்கர வாகனங்களும் அதற்கு மேற்பட்ட வகை வாகனங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது
அமைச்சர் நிதின் கட்கரி
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3ஆம் தேதி நிலவரப்படி இந்தியாவில் மொத்த வாகனங்களில் 5,44,643 மின்சார இரு சக்கர வாகனங்கள் என்றும், 54,252 மின்சார நான்கு சக்கர வாகனங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
எரிபொருள்
மேற்கண்ட வாகன எண்ணிக்கையில் 2,95,245 இரு சக்கர வாகனங்கள் மற்றும் 18,47,539 நான்கு சக்கர மற்றும் அதற்கு மேற்பட்ட வகை வாகனங்கள் சிஎன்ஜி, எத்தனால், எரிபொருள் செல் ஹைட்ரஜன், எல்என்ஜி, எல்பிஜி, சோலார், மெத்தனால் போன்ற எரிபொருள் வகைகளை கொண்டது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம்
மேலும் தேசிய நெடுஞ்சாலைகளின் மேம்பாடு மற்றும் பராமரிப்பிற்கு சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் (MoRTH) முதன்மையான பொறுப்பாகும் என்றும், தேசிய நெடுஞ்சாலைகள் பொதுவாக போக்குவரத்துக்கு தகுதியான வகையில் பராமரிக்கப்பட்டு வருவதாகவும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இன்னொரு கேள்விக்கு பதிலளித்தார்.
சாலைகள் சேதம்
கனமழை, வெள்ளம், நிலச்சரிவு, புயல் போன்ற இயற்கை பேரிடர் நேரிடும்போது சில இடங்களில் தேசிய நெடுஞ்சாலைகளில் சில சேதங்கள் ஏற்படுகின்றன. ஆனால் அதன் சீரமைப்பு பணிகள் உடனடியாக மேற்கொள்ளப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்ப போக்குவரத்து துறை அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது என்றும் தெரிவித்தார்.
மறுசீரமைப்பு மற்றும் புனரமைப்பு
எக்ஸ்பிரஸ்வேகளை புதிதாக உருவாக்குதல், ஏற்கனவே உள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் திறனை மேம்படுத்துதல், தற்போதுள்ள நடைபாதைகளின் மறுசீரமைப்பு மற்றும் புனரமைப்பு, ஏற்கனவே உள்ள பாலங்கள் மற்றும் கட்டமைப்புகளை புனரமைத்தல் மற்றும் ஏற்கனவே உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் சாலை மேல்பாலங்கள் (RoBs) கட்டுதல் போன்ற திட்டங்களை போக்குவரத்து தேவையை கருத்தில் கொண்டு MoRTH செய்து வருகிறது என்றும் அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.
வாகன நிறுவனங்கள்
பொதுமக்கள் வாகனங்களை அதிகளவில் பயன்படுத்துவதால் வாகன உற்பத்தி மற்றும் விற்பனை அதிகரிப்பதாகவும், இதனால் நாட்டின் பொருளாதாரம் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications