கொரோனாவின் தாக்கம் நாட்டின் பொருளாதாரத்தை மட்டும் அல்லாமல் மக்களின் வாழ்வாதாரத்தைப் பதம் பார்த்துள்ளது என்றால் மிகையில்லை.
கொரோனா முதல் அலையில் அறிவிக்கப்பட்ட நாடு முழுவதுமான லாக்டவுன் மற்றும் அதன் மூலம் ஏற்பட்ட வர்த்தகப் பாதிப்பு மற்றும் வேலைவாய்ப்புகள் மூலம் பல கோடி மக்கள் தங்கள் வருமானத்தையும் இழந்து தவித்து வருகின்றனர்.
இந்தச் சூழ்நிலையில் CMIE அமைப்பின் அறிக்கை மோடி அரசுக்கும், சாமானிய மக்களுக்கும் அதிர்ச்சி அளிக்கும் தகவல் அறிவித்துள்ளது.
23 கோடி மக்கள்
கொரோனா தொற்று இந்திய பொருளாதாரத்தில் ஏற்படுத்திய தாக்கத்தின் வாயிலாகச் சுமார் 23 கோடி மக்கள் வறுமைக்கோட்டிற்குக் கீழ் தள்ளப்பட்டு உள்ளதாக CMIE-CPHS தரவுகள் கொண்ட ஸ்டேட் ஆப் தி வொர்க் 2021 அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
20 சதவீத ஏழைக் குடும்பங்கள்
இதேபோல் 2020ல் லாக்டவுன் அறிவிக்கப்பட்ட ஏப்ரல் முதல் மே மாதம் காலகட்டத்தில் மாத சம்பளக்காரர்களை விடவும் அதிகளவில் கூலித் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். இதன் வாயிலாக இக்காலகட்டத்தில் சுமார் 20 சதவீத ஏழைக் குடும்பங்களின் வருமானம் மொத்தமாக மாயமானது.
1.5 கோடி மக்கள் வேலை இழப்பு
இதுமட்டும் அல்லாமல் 2020 டிசம்பர் மாதம் வரையில் இந்தியாவில் சுமார் 1.5 கோடி மக்கள் தங்களது வேலையை இழந்துள்ளனர். இதுமட்டும் அல்லாமல் 2020ல் 50 சதவீத ஊழியர்கள் பலதரப்பட்ட வேலைக்குக் குறைவான வருமானத்திற்குச் சென்றுள்ளது நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் சுமையாக மாறியுள்ளது என ஸ்டேட் ஆப் தி வொர்க் 2021 அறிக்கை கூறுகிறது.
ரேஷன் பொருட்கள் கிடைப்பதில் பிரச்சனை
இதேவேளையில் சுமார் 30 சதவீத மக்களுக்கு Pradhan Mantri Gareeb Kalyan Yojana திட்டத்தின் அறிவிக்கப்பட்ட ரேஷன் பொருட்கள் கிடைக்கவில்லை. இந்தப் பிரச்சனை பல மாநிலங்களில் இருக்கும் காரணத்தால் மத்திய அரசு உடனடியாக ஆய்வு செய்து பொருளாதாரத்திலும் வருமானத்திலும் அதிகப் பாதிப்புகளை எதிர்கொண்டு வரும் மக்களுக்கு முழுமையான உதவிகள் கிடைக்க வேண்டும் எனவும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
பொது விநியோக திட்டம்
ஜன் தன் யோஜனா திட்டத்தை விடவும் பொது விநியோக திட்டம் மக்கள் மத்தியில் பெரிய அளவில் சென்றடைந்துள்ளது. இந்தச் சூழ்நிலையில் Pradhan Mantri Gareeb Kalyan Yojana திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட சலுகைகள் 2021 இறுதி வரையில் நீடிக்கப்பட வேண்டும் என இந்த அறிக்கையைத் தயாரித்த அசிம் பிரேம்ஜி பல்கலைகழத்தின் எக்னாமிக்ஸ் பேராசிரியர் அமித் பசோல் தெரிவித்துள்ளார்.
மாதம் 5000 ரூபாய்
மேலும் பொருளாதாரத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவும் வகையிலும், அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும் குறைந்தது 3 மாதங்களுக்கு மாதம் 5000 ரூபாய் அளிக்க வேண்டும் என இந்த அறிக்கை பரிந்துரை செய்துள்ளது.
MGNREGA திட்டம் விரிவாக்கம்
அதேபோல் MGNREGA திட்டத்தின் வாயிலாகப் பணிக்காலத்தை 150 நாளாகவும், சம்பளம் அளவீட்டை மாநிலத்தின் குறைந்தபட்ச சம்பள அளவீட்டிற்கு இணையாக உயர்த்த வேண்டும் எனவும் இந்த அறிக்கையில் மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்ய வேண்டும்.
மத்திய அரசின் மிகமுக்கிய பணி
23 கோடி மக்கள், 20 சதவீத ஏழைக் குடும்பங்கள் என்பது நாட்டின் மிகப்பெரிய மக்கள் தொகை பிரிவாக உள்ளது, இப்பிரிவு மக்களின் பொருளாதார நிலை, வேலைவாய்ப்பு அளவீடுகளை மேம்படுத்துவது மோடி தலைமையிலான மத்திய அரசின் மிகமுக்கிய பணியாக உள்ளது.
8 லட்சம் கோடி ரூபாய்
இப்பிரிவு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மத்திய அரசு குறைந்தது 8 லட்சம் கோடி ரூபாய் அளவிலான தொகையைச் செலவு செய்ய வேண்டிய கட்டாயத்திலும் மோடி அரசு உள்ளது என இந்த அறிக்கையில் எக்னாமிக்ஸ் பேராசிரியர் அமித் தெரிவித்துள்ளார்.