2020ஆம் ஆண்டில் கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் ஏற்பட்ட வர்த்தகம் மற்றும் பொருளாதாரப் பாதிப்பில் இருந்து இன்னும் மீள முடியாமல் வேலைவாய்ப்பு சந்தை பெரிய அளவிலான பாதிப்பை எதிர்கொண்டு வருகிறது.
இந்நிலையில் 2020ஆம் ஆண்டில் உலக நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றும் மற்றும் அதற்காக அறிவிக்கப்பட்ட லாக்டவுன் ஆகியவற்றின் வாயிலாகச் சுமார் சுமார் 22.5 கோடி மக்கள் தங்களது வேலைவாய்ப்பை இழந்துள்ளதாகச் சர்வதேச தொழிலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுமட்டும் அல்லாமல் இந்தப் பாதிப்பில் இருந்து 2021ஆம் ஆண்டிலும் முழுமையாக வெளி வர முடியாது என்றும் இந்த அமைப்பு தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.
முன்னணி பொருளாதார நாடுகள்
இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், சீனா, ஜப்பான் என உலகின் முன்னணி பொருளாதார நாடுகளில் கொரோனா தொற்று மற்றும் வர்த்தகப் பாதிப்பின் காரணமாகப் பொருளாதாரம் அதிகளவில் பாதித்தும் பெரும்பாலான நாடுகள் பொருளாதார மந்தநிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளது.
ஊழியர்கள் பணிநீக்கம்
இதன் வாயிலாகப் பல நிறுவனங்கள் போதிய வர்த்தகப் பெற முடியாத காரணத்தால் அதிகளவிலான ஊழியர்களைப் பணியில் இருந்து நீக்கியது. இந்த நிலையில் இந்தியாவில் மட்டும் அல்லாமல் உலகின் அனைத்து நாடுகளிலும் நடந்தது. இதன் வாயிலாக 2020ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 22.5 கோடி பேர் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர்.
கொரோனா தொற்று
கொரோனா தொற்று 2வது அலை பல நாடுகளில் மோசமடைந்து வரும், இதேநிலையில் கொரோனா தடுப்பு மருந்தும் அதிகளவில் மக்களுக்குச் செலுத்தப்பட்டு வருகிறது. இதனால் தொற்று குறைந்து வர்த்தகம் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனாலும் 2021 முடிவிலும் பழைய நிலையை அடைய 9 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியாமல் தவிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும் எனவும் தொழிலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது.
2009 நிதியியல் நெருக்கடி
2020ல் ஏற்பட்ட வேலைவாய்ப்பு இழப்பு, 2009ஆம் ஆண்டில் ஏற்பட்ட நிதியியல் நெருக்கடியில் ஏற்பட்டதை விடவும் கிட்டதட்ட 4 மடங்கு அதிகமாக உள்ளது. ஆனால் 2009ல் வேலைவாய்ப்பு சந்தை குறுகிய காலகட்டத்திற்குள் மீண்டுவிட்ட நிலையில் 2020ல் பாதிப்புகள் தொடரும் காரணத்தால் பழைய நிலையை அடைய முடியவில்லை.
2021லும் தொடரும்
இதுமட்டும் அல்லாமல் உலக நாடுகளில் வேலை செய்யப்படும் நேரத்தின் அளவு டிசம்பர் காலாண்டிலும் 4.6 சதவீதம் குறைவாகவே உள்ளது. இது கிட்டதட்ட 13 கோடி மக்களின் முழு நேர வேலை நேரமாகும். இதனால் 2021லும் உலக நாடுகளில் வேலைவாய்ப்பு சந்தை தொடர்ந்து பாதிப்பு அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.