சர்வதேச மொபைல் சந்தையில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐஓஎஸ்-க்கும், கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு-க்கும் காலம் காலமாகப் போட்டி இருக்கிறது. குறிப்பாகத் தரம், சேவை ஆகியவற்றைத் தாண்டி அதிக வாடிக்கையாளர்களை வைத்துள்ளது யார் என்ற போட்டி கடந்த சில ஆண்டுகளில் கடுமையாகியுள்ளது.
இந்தச் சூழ்நிலையில், 2020ஆம் நிதியாண்டின் முதல் இரு காலாண்டுகளில் மட்டும் சுமார் 26 சதவீத ஆப்பிள் ஐஓஎஸ் வாடிக்கையாளர்கள் ஐபோன் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு ஆண்ட்ராய்டு-க்கு மாறியுள்ளனர்.
இந்தச் செய்தி தற்போது டெலிகாம் மற்றும் ஸ்மார்ட்போன் சந்தையில் மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுவது மட்டும் அல்லாமல் முக்கிய விவாத பொருளாகவும் மாறியுள்ளது.
ஆண்ட்ராய்டு சென்ட்ரல் வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில் 2019ஆம் ஆண்டின் 3வது காலாண்டிலிருந்து 19 சதவீதம், 26 சதவீதம், 26 சதவீதம், 12 சதவீதம் என ஒவ்வொரு காலாண்டுக்கும் ஐபோன் வாடிக்கையாளர்கள் இத்தளத்தில் இருந்து வெளியேறியுள்ளனர்.
இந்த மாற்றத்திற்கு மிக முக்கியமான காரணம் ஐபோன் விலை ஒவ்வொரு வருடமும் கடுமையாக அதிகரித்து வருவது தான். சேவை தரத்தில் பெரிய அளவிலான மாற்றங்கள் இல்லாத நிலையில் வெறும் கேமரா, நிறங்கள், ஸ்க்ரீன் வடிவம் ஆகியவற்றில் மட்டும் சில மாற்றங்கள் செய்து விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது ஆப்பிள்.
இதேபோல் கொரோனா தொற்று மற்றும் அதன் மூலம் மக்கள் மத்தியில் பொருளாதார ரீதியாக ஏற்பட்டு உள்ள மாற்றங்கள் ஆகியவை ஐபோனில் இருந்து விலகி ஆண்ட்ராய்டு-க்குள் நுழையவும் முக்கியக் காரணமாக உள்ளது. இதேபோல் ஐபோன் 12 வெளியாகக் காலதாமதம் ஆனதும் முக்கியக் காரணமாக உள்ளது.
மக்களாகிய நீங்கள் சொல்லுங்க எது பெஸ்ட்..? ஆண்ட்ராய்டு Vs ஆப்பிள் ஐஓஎஸ்