வழக்கமாக வீடு , நிலம் போன்ற சொத்துக்களை வாங்கும்போது அதற்கான பத்திரங்களை சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். அதாவது உரிமையாளரிடமிருந்து அதனை பெற்று நம்முடைய பெயரில் பதிவு செய்வது கட்டாயம். அப்போது தான் அந்த சொத்து சட்ட ரீதியாக நம் பெயருக்கு மாறும்.
சார்பதிவாளர் அலுவலகம் சென்று ஒரு பத்திரத்தை பதிவு செய்வது என்பது அத்தனை எளிதான காரியம் கிடையாது. அனைத்து ஆவணங்களும் சரியாக இருக்க வேண்டும் , முன்னதாகவே டோக்கன் பெற வேண்டும் குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் நிலத்தை விற்பனை செய்பவர் , நிலத்தை வாங்குபவர் , சாட்சியம் என அனைவரின் ஐடி கார்டுகளையும் பெற்று ஆய்வு நடத்திய பிறகு தான் அந்த பத்திர பதிவு என்பதே நடக்கும். பத்திரப்பதிவு என்றாலே அந்த நாள் முழுவதுமே சார் பதிவாளர் அலுவலகத்திலேயே கழிக்க வேண்டி இருக்கும்.

ஆனால் அதில் தான் தமிழ்நாடு அரசு ஒரு புதிய மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறது. சொத்து , பத்திர பதிவுக்காக சார்பதிவாளர் அலுவலகத்தில் நாள் முழுக்க காத்திருக்க வேண்டும் என்ற நிலை இனி இருக்காது. சார்பதிவாளர் அலுவலகங்களில் கூட்டத்தை கட்டுப்படுத்தவும், பத்திர பதிவை எளிமைப்படுத்தும் வகையிலும் பத்திர பதிவு அலுவலகங்களில் ஸ்டார் 3.0 சாப்ட்வேரின் முதல் பகுதியை அண்மையில் தமிழ்நாடு அரசு அறிமுகம் செய்தது.
இந்த புதிய சாப்ட்வேர் பயன்பாட்டுக்கு வந்ததை அடுத்து பொதுமக்கள் எங்கிருந்தாலும் எப்போது வேண்டுமானாலும் பத்திரங்களை பதிவு செய்வதற்கான வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது. சார்பதிவாளர் அலுவலகத்திற்கு மக்கள் வரவேண்டிய தேவையே இல்லை. வீட்டில் இருந்தபடியே தங்களுக்கான பத்திரப்பதிவை முடிக்க ஏதுவாக வசதிகள் கொண்டுவரப்பட்டுள்ளன.
புதிதாக அறிவிக்கப்பட்ட அடுக்குமாடி திட்டங்களில் வீடு வாங்குவோர் அதற்கான பத்திரங்களை பதிவு செய்வதற்கு சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வர வேண்டாம் இந்த திட்டத்தை செயல்படுத்தும் கட்டுமான நிறுவனத்தின் அலுவலகத்தில் இருந்தபடியே பத்திரங்களை பதிவு செய்ய முடியும்.
யாரிடம் இருந்து யார் எந்த சொத்தை வாங்குகிறார்கள், சொத்து அமைந்துள்ள இடத்தின் விவரம் போன்ற தகவல்கள் இருந்தால் போதும் மக்களே பத்திரத்தை ஆன்லைனில் தயாரிக்க வழிகாட்டுதல் வழங்கப்படுகிறது. எனவே பத்திரப்பதிவுக்காக ஆவண எழுத்தர்களை நாடவேண்டிய தேவையும் இனி கிடையாது. உங்களிடம் இருக்கக்கூடிய ஆவணங்கள் அனைத்தும் சரியாக இருக்கிறது, உங்களுடைய அடையாள ஆவணம் ,சொத்தை விற்பனை செய்பவருடைய அடையாள ஆவணம் அனைத்தும் சரியாக இருக்கிறது எனும் போது வீட்டில் இருந்தபடியே இந்த வேலையை முடித்துக் கொள்ள முடியும்.
அது மட்டுமில்லாமல் வில்லங்க சான்றிதழ் மற்றும் நகல் பத்திரங்களை ஆன்லைனில் கட்டணம் செலுத்தி சில நிமிடங்களிலேயே பெற்றுக் கொள்ளும் வசதியும் கொண்டுவரப்பட்டிருக்கிறது. இதன் மூலம் பொதுமக்கள் பத்திரப்பதிவுக்காக நேரத்தை வீண் செய்ய தேவையில்லை அதே போல மக்களின் அலைச்சலும் குறைக்கப்பட்டு இருக்கிறது.


Click it and Unblock the Notifications

