தமிழ்நாட்டின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி சந்தை வழக்கத்தைக் காட்டிலும் வேகமான வளர்ச்சிப் பாதையில் உள்ளது, குறிப்பாகக் கடந்த 6-7 வருடத்தில் தமிழ்நாட்டில் சென்னை தாண்டிய வளர்ச்சி திட்டம் முதலீட்டுச் சந்தைக்கு ஏதுவாக அமைந்துள்ளது.
இதேவேளையில் தமிழ்நாடு அரசு ஏற்றுமதிக்கும், நாடு முழுவதும் சரக்கு போக்குவரத்திற்கும் ஏதுவாக சாலை மற்றும் துறைமுக மேம்பாட்டைச் செய்து வரும் காரணத்தால் மாநிலத்தின் அனைத்து பகுதிகளும் உற்பத்திக்கான ஏதுவான பகுதியாக மாறியுள்ளது.

இதை உணர்ந்த வெளிநாட்டு நிறுவனங்கள் நாட்டின் பிற மாநிலங்களைக் காட்டிலும் தமிழ்நாட்டில் மிகுந்த ஆர்வத்துடன் முதலீடு செய்து வரும் வேளையில் தைவான் நாட்டை சேர்ந்த 3 நிறுவனங்கள் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியில் முதலீடு செய்யத் தயாராகியுள்ளது.
இதற்காக 2 நாள் ஆய்வுப் பணிக்காக வான் ஹாய் லைன்ஸ், டெல்டா எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஷெங் லாங்க பயோ டெக் நிறுவனங்களின் அதிகாரிகள் இவ்விரு மாவட்டத்தில் இருக்கும் தொழிற்துறை கட்டமைப்பு, லாஜிஸ்டிக்ஸ், ஏற்றுமதி வசதிகளை ஆய்வு செய்து முதலீடு செய்ய 2 நாள் சுற்றுப்பயணமாக வந்துள்ளனர்.
இவர்களுடன் இப்பகுதி தொழிலதிபர்களும் கலந்துகொண்டு தூத்துக்குடி வாஉசி துறைமுகத்தைத் திங்கட்கிழமை பார்வையிட்டனர். இதில் துறைமுகத்தில் எப்படி கண்டெய்னர் கையாளப்படுகிறது, சேமிப்பு கிடங்குகளின் அளவு, ஏற்றுமதி - இறக்குமதிக்கான கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றை ஆய்வு செய்துள்ளனர்.
இன்று அதாவது செவ்வாய்க்கிழமை திருநெல்வேலியில் இருக்கும் கங்கைகொண்டான் சிப்காட் பகுதியை ஆய்வு செய்ய உள்ளனர். இதுமட்டுமா இந்த 8 பேர் கொண்ட தைவான் குழு இவ்விரு மாவட்டத்தில் உள்ள முன்னணி மற்றும் பெரிய நிறுவனங்களான டிபி சோலார், வின்பாஸ்ட் ஆகியவற்றின் தொழிற்சாலையையும், அதன் உற்பத்தித் திறன், ஊழியர்களின் திறன் ஆகியவற்றையும் தெரிந்துகொள்ள அதன் தொழிற்சாலைக்கு செல்ல உள்ளனர்.
இதில் வான் ஹாய் லைன்ஸ் நிறுவனம் என்பது ஒரு ஷிப்பிங் நிறுவனமாகும், டெல்டா எலக்ட்ரானிக்ஸ் என்பது உலகின் முன்னணி எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தயாரிப்பு தொழிற்சாலையாகும், இது பெங்களூரில் இயங்கினாலும் ஓசூரில் மாபெரும் தொழிற்சாலைகளை வைத்துள்ளது. கடைசியாக ஷெங் லாங் பயோ டெக் என்பது அக்வாகல்சர் துறையில் இருக்கும் முன்னணி நிறுவனமாகும்.
வான் ஹாய் லைன்ஸ் மற்றும் ஷெங் லாங் பயோ டெக் நிறுவனத்திற்கு தூத்துக்குடி மிகவும் சரியான தேர்வாக இருக்கும், துறைமுக மற்றும் கடல் சார்ந்த நகரம் என்பதால். டெல்டா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திற்கு திருநெல்வேலி சரியானதாக இருக்கும் காரணம் திருநெல்வேலி சிப்காட்-ல் தற்போது EV, சோலார், டெக், ஐடி சேவை என உயர் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் துறை நிறுவனங்கள் அதிகமாக இருக்கும் காரணத்தாலும், அதிகளவிலான ஊழியர்கள் கிடைக்கும் தன்மை இருக்கப்பதாலும் திருநெல்வேல் மிகவும் சரியான தேர்வாக இருக்கும்.
மேலும் இந்த 8 பேர் கொண்ட குழு முதல் நிலை ஆய்வுக்காக மட்டுமே வந்துள்ளது, முதலீட்டு அறிவிப்போ அல்லது திட்டம் விவாதமோ இந்த பயணத்தில் நடக்காது எனவும் தகவல் கிடைத்துள்ளது.


Click it and Unblock the Notifications