டிவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ் கைப்பற்றுவதற்கு முன்பே பல தரப்பட்ட மாற்றங்கள் அடுத்தடுத்து நடந்து வருகிறது. டிவிட்டர் தளத்தில் இருக்கும் போலி கணக்குகள் மற்றும் பாட்-கள் குறித்து முழுமையான விபரம் தெரியும் வரையில் 44 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் ஒரு இன்ச் கூட நகராது என எலான் மஸ்க் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
இதே பிரச்சனையை வாய்ப்பாகப் பயன்படுத்தி டிவிட்டர் நிறுவனத்தின் விலையைக் குறைக்கப் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
இதற்கிடையில் டிவிட்டர் நிறுவனத்தில் 3 உயர் அதிகாரிகள் வெளியேறியது அனைவரின் கவனத்தையும் டிவிட்டர் பக்கம் திருப்பியுள்ளது.
டிவிட்டர் நிறுவனம்
டிவிட்டர் நிறுவனத்தின் இரு உயர் அதிகாரிகள் கடந்த வாரம் வெளியேறிய நிலையில் டிவிட்டர் சிஇஓ பராக் அகர்வால் நிர்வாகத்திலும், செயல்பாட்டிலும் பல முக்கியமான மாற்றங்களைச் செய்ய உள்ளதாக அறிவித்து அடுத்தடுத்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
3 உயர் அதிகாரிகள்
பராக் அகர்வால்-ன் நிர்வாக மாற்றத்தைத் தொடர்ந்து டிவிட்டர் ப்ராடெக்ட் மேனேஜ்மென்ட் பிரிவு துணை தலைவர் இலியா பிரவுன், ட்விட்டர் சர்வீஸ் பிரிவில் துணை தலைவர் கத்ரீனா லேன், டேட்டா சயின்ஸ் பிரிவின் தலைவர் மேக்ஸ் ஷ்மைசர் ஆகியோர் தனது பதவிகளை ராஜினாமா செய்து நிறுவனத்தை விட்டு வெளியேறியுள்ளனர்.
எலான் மஸ்க்
டிவிட்டர் நிறுவனம் எலான் மஸ்க்-கிற்கு விற்பனை செய்யப்படும் நிலையில் டிவிட்டர் நிர்வாகம் கடந்த வாரம் பட்ஜெட் அதாவது செலவுகளைக் குறைப்பு மற்றும் புதிய ஊழியர்களைப் பணியில் சேர்ப்பதையும் தற்காலிகமாக நிறுத்தியது. ஆனால் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டது
டிவிட்டர் பங்குகள்
எலான் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தை வாங்குவதாக அறிவித்த நாளில் 38.59 டாலராக இருந்த டிவிட்டர் பங்குகள் 51.70 டாலர் வரையில் உயர்ந்தது. ஆனால் எலான் மஸ்க் இந்த 44 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தைப் போலி கணக்குகள் அளவீட்டை காரணம் காட்டி நிறுத்தி வைத்த பின்பு டிவிட்டர் பங்குகள் சுமார் 37.39 டாலர் வரையில் சரிந்தது.
டிவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்க வேண்டுமா..? வேண்டாமா..? உங்க கருத்து என்ன..? மறக்காம கமெண்ட் பண்ணுங்க...