2020ஆம் ஆண்டில் கொரோனாவால் ஏற்பட்ட வர்த்தகச் சரிவில் இருந்து மீண்டு வர ஐபிஓ பெரிய அளவில் உதவிய நிலையில், 2021ல் சுமார் 30 நிறுவனங்கள் ஐபிஓ மூலம் மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிட முடிவு செய்து தயாராக உள்ளது.
இதன் மூலம் 2021ஆம் ஆண்டில் ஐபிஓ வாயிலாக மட்டும் மும்பை பங்குச்சந்தை சுமார் 30,000 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய நிறுவனங்கள்
2021ஆம் ஆண்டில் கல்யாண் ஜூவல்லர்ஸ், இண்டிகோ பெயின்ட்ஸ், பஜாஜ் எனர்ஜி, ஸ்டோவ் கிராப்ட், ஷாம்ஹி ஹோட்டல், Apeejay Surrendra பார்க் ஹோட்டல்ஸ், நுரேகா, பெக்டார்ஸ் புட்ஸ், உணவு டெவரி ஸ்டார்ட்அப் நிறுவனமான சோமேட்டோ போன்ற பல ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் ஐபிஓ வெளியிட ஆர்வமாக உள்ளது.
அரசு நிறுவனங்கள்
இதேபோல் அரசு நிறுவனங்கள் பிரிவில் அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் எல்ஐசி நிறுவனம் 2021ல் ஐபிஓ வெளியிட முடிவு செய்துள்ளது. இதோடு இந்தியன் ரயில்வே பைனான்ஸ் கார்ப்ரேஷன், ரயில்டெல், NCDE ஆகிய நிறுவனங்களும் ஐபிஓ வெளியிட ஆர்வமாக உள்ளது.
2020 ஐபிஓ
2020ஆம் ஆண்டுப் பங்குச்சந்தையில் ஏற்பட்ட அதிகளவிலான மாற்றங்களின் எதிரொலியாக முதலீட்டாளர்கள் எப்போதும் இல்லாத வகையில் ஐபிஓ மீது அதிகளவிலான ஆர்வம் செலுத்தியுள்ளனர். இதன் வாயிலாக மும்பை பங்குச்சந்தையில் இந்த ஆண்டு ஐபிஓ மூலம் பட்டியலிட்ட நிறுவனங்கள் சுமார் 25,000 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை திரட்டியுள்ளது.
25,000 கோடி ரூபாய்
இந்த வருடம் 12 நிறுவனங்கள் initial public offerings மூலம் இதுவரை 25,000 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டைத் திரட்டியுள்ளது. இது 2019ஆம் ஆண்டில் பட்டியலிடப்பட்ட 16 நிறுவனங்கள் மூலம் திரட்டப்பட்ட 12,362 கோடி ரூபாய் முதலீட்டை விடவும் அதிகமாகும்.
இதைத்தொடர்ந்து 2018 சுமார் 24 நிறுவனங்கள் புதிதாகச் சந்தையில் பட்டியலிட்டதன் மூலம் சுமார் 30,959 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை இந்திய நிறுவனங்கள் திரட்டியுள்ளது.
ரோசாரி பயோடெக் முதல் பர்கர் கிங் வரை
2020ஆம் ஆண்டில் ரோசாரி பயோடெக், ஹோப்பியஸ்ட் மைண்ட்ஸ் டெக்னாலஜிஸ், ரூட் மொபைல், கெம்கான் ஸ்பெஷாலிட்டி கெமிக்கல்ஸ், ஏஞ்சல் புரோக்கிங், ஈக்விடாஸ் ஸ்மால் பைனான்ஸ் பேங்க், லிகித்தா இன்பராஸ்டக்சர், மாசாகான் டாக் ஷிப்பில்டர்ஸ், பர்கர் கிங் ஆகிய நிறுவனங்கள் ஐபிஓ மூலம் பெரிய அளவிலான முதலீட்டைத் திரட்டியுள்ளது.