இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் கச்சா எண்ணெய் வர்த்தகத்தை இன்னும் சில மாதங்களில் பல பில்லியன் டாலர் தொகைக்கு வாங்கப்போகும் சவுதி அரேபியா நாட்டின் அரசு கச்சா எண்ணெய் நிறுவனமான சவுதி அராம்கோ நிறுவனத்தின் மதிப்பு வரலாறு காணாத வகையில் வெறும் 2 நாட்களில் சுமார் 320 பில்லியன் டாலர் மதிப்பை இழந்துள்ளது.
கச்சா எண்ணெய் உற்பத்தி அளவை குறைக்க வேண்டும் என முடிவு செய்த சவுதி அரேபியா மற்றும் OPEC நாடுகள், இதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்த நிலையில், வர்த்தகத்தை சீர்குலைக்கும் வகையில் கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரித்து அதன் விலையை குறைத்தது.
இதன் எதிரொலியாக சவுதி அரேபியாவின் அரசு கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுவனமான அராம்கோ பங்குச்சந்தை மதிப்பு கிட்டதட்ட 320 பில்லியன் டாலர் குறைந்துள்ளது.
திங்கட்கிழமை வர்த்தகம்
கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரித்து அதன் விலையை 20 சதவீதம் வரையில் குறைத்து விற்பனை செய்யச் சவுதி அரேபியா முடிவு செய்த நிலையில் இந்நாட்டுப் பங்குச்சந்தை மிகப்பெரிய பாதிப்பைச் சந்தித்தது.
அரேபிய முதலீட்டாளர்கள் சவுதி அரசின் இந்த முடிவைக் கண்டு பயத்தின் காரணமாகப் பங்குகளை விற்பனை செய்து, பங்குச்சந்தையில் இருக்கும் முதலீட்டைக் குறைத்துக்கொண்டனர். இதன் எதிரொலியாகத் திங்கட்கிழமை ஒரு நாள் வர்த்தகத்தில் மட்டும் சுமார் 9.4 சதவீதம் வரையிலான சரிவை எதிர்கொண்டது சவுதி பங்குச்சந்தை.
சவுதி அராம்கோ
இதன் வாயிலாக அந்நாட்டின் அரசு கச்சா எண்ணெய் நிறுவனமும், எதிர்கால ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பார்ட்னருமான சவுதி அராம்கோ-வின் பங்கு மதிப்பு ஒரு நாள் வர்த்தகத்தின் அதிகப்படியான 10 சதவீத சரிவைச் சந்தித்து 2வது நாளாகச் சரிவை எதிர்கொண்டது.
320 பில்லியன் டாலர்
கடந்த இரண்டு நாட்களில் மட்டும் சவுதி அராம்கோ நிறுவனத்தின் சந்தை மதிப்பு சுமார் 320 பில்லியன் டாலர் குறைந்து முதலீட்டாளர்களின் நம்பிக்கையை இழந்துள்ளது. இதன் மூலம் 2 டிரில்லியன் டாலருக்கு மதிப்பிடப்பட்ட சவுதி அராம்கோ தற்போது வெறும் 1.4 டிரில்லியன் டாலருக்கு மதிப்பிடப்படுகிறது.
மற்ற பங்குச்சந்தை
சவுதி அரேபியப் பங்குச்சந்தை 9.4 சதவீதம் வரையில் சரிந்த நிலையில், குவைத் ப்ரீமியர் குறியீடு 10.3 சதவீதம் சரிந்து 2வது நாளாக வர்த்தகத் தடையைச் சந்தித்தது. துபாய் பங்குச்சந்தை 9 சதவீதம் வரையில் சரிந்தது. ஆனால் துபாய் பங்குச்சந்தையின் முக்கியமான பங்குகள் அனைத்தும் 10 சதவீத சரிவிற்குப் பின் வர்த்தகம் செய்யத் தடை விதிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து அபுதாபி 8.2 சதவீதம், கத்தார் 9.3 சதவீதம், ஓமன் 4.6 சதவீதம், பஹ்ரைன் 4.0 சதவீதம் என மிகப்பெரிய சரிவைச் சந்தித்தது.
முக்கிய வருவாய் தளம்
வளைகுடா நாடுகளில் இருக்கும் 6 பெரும் நாட்கள் தனது மொத்த ஆண்டு வருவாயில் 70 முதல் 80 சதவீதத்தைக் கச்சா எண்ணெய் உற்பத்தி, கச்சா எண்ணெய் விற்பனை வாயிலாக மட்டுமே பெற்று வருகிறது. இந்த நிலையில் தான் கச்சா எண்ணெய் உற்பத்தி மற்றும் விலை குறைப்பு குறித்த அறிவிப்பு வெளியான நிலையில் அனைத்து முக்கிய நாடுகளின் பங்குச்சந்தையும் சரிந்தது.
அம்பானி பார்ட்னர்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் அஸ்திவாரமான பெட்ரோல் மற்றும் பெட்ரோ கெமிக்கல் வர்த்தகப் பிரிவின் சுமார் 20 சதவீத பங்குகளைச் சவதி அராம்கோ நிறுவனத்திற்கு விற்பனை செய்ய முகேஷ் அம்பானி ஒப்புக்கொண்டு உள்ளார்.
முகேஷ் அம்பானி தான் இருக்கும் துறையிலும், நிறுவனத்திலும் தான் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் முதல் முறையாக அன்னிய நிறுவனத்திற்கு வழி விட்டுள்ளார் வரலாற்றை மாறினார்.
75 பில்லியன் டாலர்
சவுதி அராம்கோ முதலீடும் செய்யும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பெட்ரோல் மற்றும் பெட்ரோ கெமிக்கல் வர்த்தகத்தின் மதிப்பு 75 பில்லியன் டாலர். இந்நிலையில் அராம்கோ வாங்கும் 20 சதவீத பங்குகளின் மதிப்பு 15 பில்லியன் டாலர்.
டைம் பாம்
முகேஷ் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நாட்டின் மிகப்பெரிய நிறுவனமாக இருந்தாலும், இந்நிறுவனம் 2.88 லட்சம் கோடி ரூபாய் கடன் என்கிற மிகப்பெரிய டைம் பாம் மீது தான் அமர்ந்துள்ளது. இது எப்போதும் வேண்டுமானாலும் வெடிக்கும்.
கடன் பிரச்சனை
இந்தப் பிரச்சனையைத் தீர்க்க வேண்டும் என்பதற்காகத் தான் ரிலையன்ஸ் 2019ஆம் ஆண்டுத் துவக்கம் முதல் தனது நிறுவன சொத்துக்களை விற்பனை செய்வதும், அடமானம் வைப்பும், பெரும் நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதுமாய்ப் பல வேலைகளைச் செய்து வருகிறது. இதற்கு ஈடாகப் புதிய வர்த்தகத்தின் வளர்ச்சிக்காகவும் அதிகளவில் முதலீடு செய்தும் வருகிறார் முகேஷ். இதன் ஒரு பகுதி தான் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ரிலையன்ஸ் ரீடைல்-இன் அதிரடி வர்த்தகம்.