இந்தியாவின் முன்னணி வங்கிகளில் ஒன்றான ஐசிஐசிஐ வங்கி இன்று வெளியிட்டுள்ள காலாண்டு அறிக்கையில், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 36 சதவீதம் அதிக லாபத்தைப் பதிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. கடந்த நிதியாண்டின் ஜூன் காலாண்டில் 1,908 கோடி ரூபாய் அளவிலான லாபத்தை அடைந்திருந்த நிலையில், தற்போது 2,599 கோடி ரூபாய் அளவிலான லாபத்தை அடைந்தது.
ஆனாலும் இன்றைய வர்த்தகத்தில் 6 சதவீதம் வரையில் சரிந்து முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது.
இந்நிலையில் ஐசிஐசிஐ வங்கி வைத்திருக்கும் ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் நிறுவனப் பங்கு இருப்பில் 4.2 சதவீத பங்குகளை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. இது முதலீட்டாளர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது என்றால் மிகையில்லை.
ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ்
ஐசிஐசிஐ வங்கி வைத்திருக்கும் ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் பங்கு இருப்பில் 4.2 சதவீத பங்குகளை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளதாக அறிவித்தன் எதிரொலியாக ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் நிறுவனப் பங்குகள் இன்றைய வர்த்தகத்தில் 9.44 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.
மொத்த மதிப்பு
இன்றைய பங்கு மதிப்பில் ஐசிஐசிஐ வங்கி விற்பனை செய்யும் 4.2 சதவீத பங்குகளின் மொத்த மதிப்பு 726 கோடி ரூபாய்.
இந்த ஆண்டில் ஐசிஐசிஐ விற்பனை செய்யும் 3வது பங்கு விற்பனையாகும். இதற்கு முன் ஐசிஐசிஐ லாம்பார்ட் நிறுவனத்தில் 3.6 சதவீத பங்குகளை விற்பனை செய்ததன் மூலம் 2,250 கோடி ரூபாயும், ஐசிஐசிஐ ப்ரொடென்சியல் லைப் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் 1.5 சதவீத பங்குகளை விற்பனை செய்ததன் மூலம் 840 கோடி ரூபாயும் நிதி திரட்டியுள்ளது.
விதிகள்
பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபி-யின் விதிமுறைகள் படி ஐசிஐசிஐ வங்கி தனது பங்கு இருப்பை 75 சதவீதத்திற்குக் கீழ் குறைக்க வேண்டும் என்பதற்காகத் தற்போது 4.2 சதவீத பங்குகளை விற்பனை செய்கிறது ஐசிஐசிஐ வங்
ரூ.20 லட்சம் கோடி வராக்கடன்
வங்கிகள் தற்போது ஆகஸ்ட் 31ஆம் தேதி வரையில் கடன் சலுகை கொடுத்துள்ளது, இந்தியாவில் தற்போது மொத்தம் 12 லட்சம் கோடி ரூபாய் அளவிலான வராக் கடன் இருக்கும் நிலையில், சலுகை முடிந்த பின்பு 5ல் ஒரு 1 பங்கு கடனை செலுத்த முடியாமல் போனாலும் இந்திய வங்கிகளின் வராக் கடன் 20 லட்சம் கோடி ரூபாய் அளவில் உயரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
இது தற்போதைய அளவை விடவும் கிட்டதட்ட 2 மடங்கு அதிகமாகும்.
பிரச்சனை
இந்த வராக்கடன் பிரச்சனையைச் சமாளிக்க வங்கிகள் கையில் இருக்கும் ஓரே வழி, ஏற்கனவே கடன் கொடுத்தவர்களுக்கு மறு கடன் கொடுத்து அவர்களின் வர்த்தகத்தை மீட்டு எடுப்பதே ஆகும்.
ஆனால் இதுவும் கணிசமான அளவு வராக்கடனைக் குறைக்க மட்டுமே பயன்படும் என்பது வங்கித்துறை வல்லுனர்களின் கணிப்பு.
15,000 கோடி ரூபாய்
இந்த வராக்கடன் பிரச்சனையைச் சமாளிக்க ஐசிஐசிஐ வங்கி பங்கு விற்பனை மூலம் 15,000 கோடி ரூபாய் நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது. இதைச் சாத்தியப்படுத்தவே தற்போது ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ்-ன் 4.2% பங்குகள் விற்பனை செய்கிறது ஐசிஐசிஐ வங்கி.