ஈரான் போர் காரணமாக இந்தியாவில் மார்ச் மாதம் முழுவதுமே கடுமையான எல்பிஜி தட்டுப்பாடு ஏற்பட்டது. முதல் கட்டமாக சிலிண்டர் விற்பனை நிறுவனங்கள் வணிக பயன்பாட்டு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்தி வைத்திருந்தன. இதனால் உணவகங்கள் , டீக்கடைகளுக்கு சிலிண்டர் கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்பட்டது. வீட்டு உபயோக பயன்பாட்டு சிலிண்டரை பொறுத்தவரை பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை மத்திய அரசு நடைமுறைக்கு கொண்டு வந்தது.
எல்பிஜி சிலிண்டர்கள் கள்ளச் சந்தையில் விற்பனை செய்யப்படுவதை தடுக்கவும் பொது மக்களுக்கு முறையாக விநியோகம் செய்யப்படுவதை உறுதி செய்யவும் மத்திய அரசு சில விதிகளை நடைமுறைக்கு கொண்டு வந்திருக்கிறது. அது என்னென்ன என்பதை வாடிக்கையாளர்கள் தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது. கேஸ் சிலிண்டர் விநியோகம் செய்யக்கூடிய ஹெச்பி கேஸ், இண்டேன் மற்றும் பாரத் கேஸ் நிறுவனங்கள் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு சிலிண்டர் விநியோகம் தொடர்பான மாற்றங்களை தொடர்ச்சியாக அறிவித்த வண்ணம் இருக்கின்றன.

டெலிவரி ஓடிபி: சிலிண்டர் முன்பதிவு செய்யும்போது delivery authentication code எனப்படும் டெலிவர் அங்கீகாரக் குறியீடு பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஓடிபியாக வரும். சிலிண்டர் டெலிவரி செய்யப்படும் சமயத்தில் அந்த ஓடிபி-ஐ பகிர்ந்தால் மட்டுமே உங்கள் கைக்கு சிலிண்டர் வரும். இது முறையான வாடிக்கையாளருக்கு தான் சிலிண்டர் சென்று சேர்கிறது என்பதை உறுதிப்படுத்துவதற்காக கொண்டுவரப்பட்ட ஒரு நடைமுறை. எனவே சிலிண்டர் முன்பதிவு செய்யும்போது உங்கள் மொபைல் எண்ணுக்கு வரக்கூடிய எஸ்எம்எஸ்ஐ சேமித்து வைத்துக் கொள்வது நல்லது. சிலிண்டர் விநியோகத்தின் போது மட்டுமே இந்த ஓடிபி தரப்பட வேண்டும். தொலைபேசி, வாட்ஸ் அப் வாயிலாக யாரிடமும் பகிர கூடாது.
இரட்டை இணைப்பு: அடுத்ததாக ஜூலை ஒன்றாம் தேதியில் இருந்து வீடுகளில் பிஎன்ஜி இணைப்பு வைத்திருப்பவர்களுக்கு எல்பிஜி இணைப்பும் வைத்திருந்தால் எல்பிஜி இணைப்பு துண்டிக்கப்பட இருக்கிறது. எனவே பிஎன்ஜி வைத்திருப்பவர்கள் தாங்களாகவே எல்பிஜி கனெக்சனை ஒப்படைத்து விட வேண்டும். மேலும் பிஎன்ஜி இணைப்புக்கு சாத்தியம் இருக்கும் குடும்பங்கள் அதற்கு வேண்டுமென அரசு கூறி இருக்கிறது. இரட்டை இணைப்பு வைத்திருப்பது கண்டறியப்பட்டால் அபராதம் விதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. பிஎன்ஜி இணைப்பு வைத்திருப்பவர்கள் சிலிண்டர் புக் செய்தால் அதனை பிளாக் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.
மானியம்: அடுத்ததாக ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு எல்பிஜி சிலிண்டர் மானியம் இனி கிடைக்காது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. வருமான வரி கணக்கு தாக்கல் விவரங்களை ஆய்வு செய்து ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் இருந்தும் எல்பிஜி சிலிண்டருக்கான மானியத்தை பெறுவோருக்கு அது ரத்து செய்யப்படும் என அரசு கூறி இருக்கிறது. இது தொடர்பாக சிலிண்டர் விநியோக நிறுவனங்களே வாடிக்கையாளர்களுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பி வருகின்றன.
சிலிண்டர் புக்கிங் இடைவெளி: எல்பிஜி தட்டுப்பாட்டை அடுத்து சிலிண்டர் புக்கிங் இடைவெளி என்பது நகரங்களுக்கு 25 நாட்களாகவும் கிராமங்களுக்கு 45 நாட்களாகவும் மாற்றப்பட்டுள்ளது. எல்பிஜி சப்ளை சீராகும் வரை இந்த கால இடைவெளி நீடிக்கும்.


Click it and Unblock the Notifications

