இந்தியாவில் கொரோனா தொற்றின் 2வது அலை பெரிய அளவில் மக்களைப் பாதித்து வரும் நிலையில் தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்தும் இதே வேளையில் நாட்டின் வர்த்தகத்தைச் சந்தையைப் பாதிக்காத வகையில் இந்தியாவின் வர்த்தகத் தலைநகரான மும்பை இருக்கும் மகாராஷ்டிரா, டெல்லி, பஞ்சாப், சட்டீஸ்கர் மாநிலத்தின் ராய்பூர் ஆகிய பகுதிகளில் லாக்டவுன் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.
இந்நிலையில் மீண்டும் கடன் சலுகை அளிக்கப்படுமா என்ற கேள்வி சாமானிய மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதற்கு ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் பதிலை அளித்துள்ளார்.
சொந்த ஊருக்குச் செல்லும் மக்கள்
4 மாநிலங்கள் அறிவித்துள்ள லாக்டவுன் அறிவிப்புகளாக இந்த மாநிலத்தில் பணியாற்றும் வெளி மாநில ஊழியர்கள் குடும்பம் குடும்பமாக மீண்டும் சொந்த ஊருக்கு செல்ல துவங்கியுள்ளது. மேலும் வட இந்திய மாநிலங்களுக்குச் செல்லும் ரயில்களில் டிக்கெட் பதிவுகள் தற்போது முழுமையாகத் தீர்ந்துள்ளது.
சாமானிய மக்களின் கேள்வி
இந்நிலையில் பல கோடி சாமானிய மக்களுக்குத் தற்போது இருக்கும் முக்கியமான கேள்வி, கடந்த லாக்டவுன் போலவே இந்த முறையும் லாக்டவுன் அறிவிக்கப்படுமா என்பது தான். இதற்கு ரிசர்வ் வங்கி முக்கியமான பதிலை அளித்துள்ளது.
வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் பாதிப்பு
இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரிக்கும் காரணத்தால் லாக்டவுன் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது, இதனால் நாட்டின் வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை என்றாலும் கணிசமாகப் பாதிக்கப்படும், ஆனால் இந்த 2வது சரிவில் இருந்து மீண்டு வருவது இந்தியாவிற்குப் பெரும் சவாலாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
ஆர்பிஐ நாணய கொள்கை கூட்டம்
இந்நிலையில் ஏப்ரல் 7ஆம் தேதி முடிவடைந்த நாணய கொள்கை கூட்டத்தில் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தைக் கணிசமாகக் குறைக்கும் என எதிர்பார்ப்பு இருந்த வேளையில் ரெப்போ விகிதம் பழைய அளவீடான 4 சதவீதத்தை அப்படியே வைத்துள்ளது. இதனால் வட்டி விகிதத்தில் எவ்விதமான மாற்றமும் இல்லை, மேலும் கடந்த வாரம் நாட்டின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வீட்டுக்கடனுக்கான வட்டியை உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.
ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ்
இந்நிலையில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ்-யிடம் இந்தியாவில் கொரோனாவின் 2வது அலையின் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் 4 மாநிலங்கள் லாக்டவுன் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. இந்த நிலையில் மீண்டும் வங்கிகள் கடனுக்கான சலுகை அளிக்கப்படுமா என்ற கேள்வி கேட்கப்பட்டது.
ரிசர்வ் வங்கி பதில்
இதற்குப் பதில் அளித்துள்ள சக்திகாந்த தாஸ், தற்போதைய சூழ்நிலையில் மீண்டும் கடன் சலுகை அளிக்க வாய்ப்பு இல்லை. ஆனால் ரிசர்வ் வங்கி, வர்த்தக வங்கிகளின் நிதி நிலை மற்றும் asset quality-ஐ தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இதனால் தேவையான தருணத்தில் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
லாக்டவுனுக்குத் தயார்
மேலும் தற்போது சூழ்நிலையில் எதையும் முழுமையாகச் சொல்ல முடியாது. ஆனால் அரசும், கட்டுப்பாட்டு அமைப்புகளும், தனியார் நிறுவனங்களும் லாக்டவுன் கட்டுப்பாடுகளை எப்படிச் சமாளிக்க வேண்டும் என்பதில் தயாராக உள்ளது என்பதைத் தன்னால் உறுதி அளிக்க முடியும். மேலும் ரிசர்வ் வங்கி தேவையான நேரத்தில் கட்டாயம் நடவடிக்கை எடுக்கும் எனத் தெரிவித்துள்ளார் சக்திகாந்த தாஸ்.