அப்பாடா கொரோனா ஒழிந்தது என்று ஆறுதல் அடைவதற்கு முன்பே, மீண்டும் புதிய வகை கொரோனாவான ஓமிக்ரான் சர்வதேச நாடுகளை பதம் பார்க்க தொடங்கியுள்ளது.
இது முதல் கட்ட கொரோனாவினை விட பல மடங்கு வேகத்தில் பரவும் தன்மை கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் இது எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்துமோ என்ற அச்சத்தில் உலக நாடுகள் உள்ளன.
தற்போது தான் பொருளாதாரம் வளர்ச்சி பாதைக்கு திரும்பிக் கொண்டுள்ள நிலையில், புதிய வைரஸின் தாக்கம் எந்த மாதிரியான தாக்கத்தினை ஏற்படுத்துமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது. அதிலும் கடந்த சில மாதங்களாகவே பங்கு சந்தைகள் தொடர்ந்து உச்சம் கண்டு வந்த நிலையில், அன்னிய முதலீட்டு விகிதங்களும் அதிகரிக்க தொடங்கியுள்ளன. இதற்கிடையில் இனி பொருளாதார வளர்ச்சி விகிதம் எப்படியிருக்கும்?
பணவீக்கம் குறித்த அச்சம்
சர்வதேச அளவில் கமாடிட்டி பொருட்களின் விலை விகிதமானது அதிகரித்துள்ள நிலையில், பணவீக்க விகிதமானது உச்சத்தில் உள்ளது. தேவையானது மீண்டு வந்து கொண்டுள்ள நிலையில், சப்ளை போதுமானதாக இல்லை எனலாம். எனினும் தற்போது சீனாவில் வளர்ச்சி காணத் தொடங்கியுள்ள நிலையில் மெட்டல்ஸ் விலை சற்று குறைந்துள்ளது ஆறுதல் தரும் விஷயமாக உள்ளது.
நுகர்வோர் தேவை
கொரோனாவின் காரணமாக பொருளாதாரம் வீழ்ச்சி கண்ட நிலையில், கடந்த ஆண்டு வேலை இழப்புகள் அதிகரித்துள்ளது. நடப்பு ஆண்டில் கொரோனாவின் தாக்கம் குறையத் தொடங்கியிருந்தாலும், ஒட்டுமொத்த வளர்ச்சியில் சற்றே தாக்கம் இருக்கலாம் என்ற கவலையும் உள்ளது. எனினும் அமைப்புசாரா துறையில் இன்னும் சற்று அழுத்தம் இருக்கலாம். இதனால் தேவையானது வீழ்ச்சி காணுமோ என்ற அச்சமும் உள்ளது.
எனினும் இந்தியாவில் இரண்டாம் கட்ட அலையானது பெருமளவு குறைந்துள்ள நிலையில், தற்போது மூன்றாவது அலைக்கான எந்த அறிகுறியும் இல்லை. இது சற்றே ஆறுதல் தரும் விஷயமாக உள்ளது. இதனால் தேவையும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வட்டி விகிதம்
சர்வதேச அளவில் பணவீக்க விகிதமானது உச்சம் தொட்டு வரும் நிலையில், வட்டி விகிதமானது அதிகரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த நடவடிக்கைகளிலும் சில வங்கிகள் இறங்கியுள்ளன. ஆக வரும் ஆண்டில் இதுவும் பொருளாதார வளர்ச்சியில் எதிரொலிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரசின் நடவடிக்கை
நடப்பு நிதியாண்டில் பெரும் நிதி பற்றாக்குறையானது நிலவி வரும் நிலையில், நிதி சம்பந்தமான கொள்கைகளை அடுத்த சில ஆண்டுகளுக்கு அரசு தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவும் பொருளாதாரத்திற்கு சாதகமாக அமையலாம். குறிப்பாக உள்கட்டமைப்பு துறைகளை மேம்படுத்துவதற்காக நிதி திரட்டலை, சில பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்று, அதன் மூலம் கிடைக்கும் நிதியை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. குறிப்பாக அடுத்த 12 - 18 மாதங்களில் பெரும் நிதி திரட்டப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதலீடுகள் வரத்து
தற்போது பொருளாதாரம் மீண்டும் வந்து கொண்டுள்ள நிலையில், அடுத்து வரும் காலாண்டுகளில் வளர்ச்சி விகிதமானது சாதகமாக அமையலாம். குறிப்பாக அடுத்த 2 ஆண்டுகளுக்கு வளர்ச்சி விகிதமானது வளர்ச்சி காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பும் வளர்ச்சி பாதைக்கு திரும்பலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.