தமிழ் நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் வாயிலாக 171.24 கோடி ரூபாய் மதிப்பிலான 5 புதிய தொழில் பேட்டைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்த தொழில் பேட்டைகள் எங்கெங்கு உருவாக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் எவ்வளவு பேர் பயனடைவார்கள்? இது எப்போது முதல் செயல்பாட்டுக்கு வரும்? வாருங்கள் பார்க்கலாம்.
எங்கெங்கு?
தமிழ் நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் வாயிலாக 171.24 கோடி ரூபாய் மதிப்பிலான தொழில் பேட்டைகள், சேலம், நாமக்கல், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, புதுகோட்டையில் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த 5 தொழில் பேட்டைகளையும் இன்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.
வேலை வாய்ப்பு?
மேற்கண்ட இந்த 5 தொழில் பேட்டை மூலமாக 7200 பேர் நேரடியாகவும், 15,000 பேர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பினை பெறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு
தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் வாயிலாக செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் வட்டம், ஆலத்தூர் கிராமத்தில் 67.96 ஏக்கர் பரப்பளவில் 115.07 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 2000 நபர்கள் நேரடியாகவும், 4000 நபர்கள் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பினை பெறும் வகையில் பகுதி-IIல் , 192 தொழில் மனைகளுடன் புதிய தொழிற்பேட்டை உருவாக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், பெரியகோளப்பாடி கிராமத்தில் 57.181 ஏக்கர் பரப்பளவில் 11.82 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1800 பேர் நேரடியாகவும், 4000 பேருக்கு மறைமுகமாகவும் வேலை வாய்ப்பினை பெறும் வகையில் 171 தொழில்மனைகளுடன் புதிய தொழிற்பேட்டை உருவாக்கப்பட்டுள்ளது.
சேலம்
சேலம் மாவட்டம், சேலம் தெற்கு வட்டம், பெரிய சீரகப்பாடி கிராமத்தில் 56.81 ஏக்கர் பரப்பளவில் 22.22 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1,000 பேர் நேரடியாகவும், 2,000 பேர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பினை பெறும் வகையில், 79 தொழில்மனைகளுடன் புதிய தொழிற்பேட்டை உருவாக்கப்பட்டுள்ளது.
நாமக்கல்
நாமக்கல் மாவட்டம் ராசம்பாளையம் கிராமத்தில் 36.80 ஏக்கர் பரப்பளவில் 9.72 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1,200 பேர் நேரடியாகவும், 2,500 நபர்கள் மறைமுகமாகவும், வேலைவாய்ப்பினை பெறும் வகையில் 107 தொழில்மனைகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை வட்டம், ஆலங்குடி கிராமத்தில் 36.47 ஏக்கர் பரப்பளவில் 12.41 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1,200 பேர் நேரடியாகவும், 2,500 பேர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பினை பெறும் வகையில் 105 தொழில்மனைகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது.