கொரோனா தொற்று மூலம் முதலீட்டு சந்தை அதிகளவிலான தடுமாற்றங்களை எதிர்கொண்டு வரும் நிலையில், முதலீட்டாளர்கள் மிகவும் பாதுகாப்பான முதலீட்டுத் தளத்தைத் தேடி வரும் நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளனர். குறிப்பாக ஆபத்துக் காரணிகள் மிகவும் குறைவாகவும், நிலையான லாபத்தை அளிக்கக்கூடிய முதலீட்டைத் தேடி வருகின்றனர்.
நம் ஊரில் ஒரு பழமொழி உள்ளது, காசுக்கு ஏற்ற பணியாரம். இதேபோலத் தான் ரிஸ்க் குறைவாக இருக்கும் முதலீட்டுத் திட்டத்தில் லாபத்தின் அளவும் குறைவாக இருக்கும், இதேவேளையில் ரிஸ்க் அதிகமாக இருக்கும் முதலீட்டில் நீங்கள் செய்த முதலீட்டைக் கூட இழக்க நேரிடும் என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
இந்தச் சூழ்நிலையில் பலருக்கும் பயன்படும் நிச்சயம் லாபம் தரும் ரிஸ்க் இல்லா 5 முதலீடுகளைப் பற்றித் தான் பார்க்க போகிறோம்..!
பழசாக இருந்தாலும் எப்போதும் டாப்
வங்கி வைப்பு நிதி என்பது எப்போதும் லாபகரமானது மட்டும் அல்லாமல் நிலையான லாபத்தை அளிக்கும் ஒரு பாதுகாப்பான முதலீடாக உள்ளது. தற்போது ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 4 சதவீதமாக வைத்துள்ள நிலையில் இந்தியாவின் முன்னணி வங்கிகளில் 1 கோடி ரூபாய்க்குக் குறைவான வைப்பு நிதிக்கு 3 முதல் 5 வருட கால வைப்பு நிதி திட்டத்திற்கு 5.30 சதவீதம் முதல் 6.60 சதவீத வருமானத்தை அளிக்கிறது.
குறுகிய காலப் பத்திர முதலீடு
வங்கி வைப்பு நிதியில் ஆர்வம் இல்லாதவர்கள் கடன் சந்தையில் மிகவும் பிரபலமாக இருக்கும் குறுகிய காலப் பத்திர முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்யலாம். இது வைப்பு நிதியை விடவும் அதிக லாபத்தை அளிக்கும்.
நீண்ட காலப் பத்திர முதலீட்டைத் தேர்வு செய்யும் போது வட்டி விகிதம் மாற்றப்படும் போது லாபம் அளவீடுகள் குறையும், எனவே குறுகிய காலப் பத்திர முதலீடு உங்கள் பணத்தைப் பாதுகாக்க சிறந்த தேர்வாக இருக்கும்.
வங்கி சேமிப்பு கணக்கு
அட போங்கடா எதுலயும் முதலீடு செய்யப் பிடிக்கவில்லை என்றால் உங்கள் பணத்தில் இந்தக் குறிப்பிட்ட வங்கிகளின் சேமிப்புக் கணக்கில் வைத்திருங்கள். வங்கிக் கணக்கில் பணம் வைத்திருந்தால் என்ன லாபம் என்று தானே கேட்குறீங்க..
சில வங்கிகள் வாடிக்கையாளர்களின் சேமிப்புக் கணக்கில் இருக்கும் பணத்திற்கு அதிகப்படியான வட்டி வருமானத்தை அளிக்கிறது.
உதாரணமாக எஸ்பிஐ வங்கியில் - 2.7% PA, பந்தன் வங்கியில் 3 முதல் 7.15% PA, ஆர்பிஎல் வங்கியில் 4.75 முதல் 6.50 % PA, உஜ்வான் ஸ்மால் பைனான்ஸ் வங்கியில் 4 - 7% PA, ஏயு ஸ்மால் பைனான்ஸ் வங்கியில் 3.5 முதல்7% PA
லிக்விட் பண்ட் திட்டம்
பங்குச்சந்தையில் அதிகளவிலான தடுமாற்றம் இருக்கும் தற்போதைய சூழ்நிலையில், பங்குகளில் முதலீடு செய்வது ஆபத்து என நினைக்கும் பட்சத்தில், அதேவேளையில் பங்குச்சந்தையில் மாற்று வழியில் பாதுகாப்பான முறையில் முதலீடு செய்ய ஒரு வழி உள்ளது.
அதிக வட்டி தரும் வைப்பு நிதி அல்லது சிறப்பான லிக்விட் பண்ட் திட்டத்தில் minimum income plan (MIP) கீழ் முதலீடு செய்து, இதில் வரும் வருமானத்தை மெல்ல மெல்ல டாப் ரேட்டெட் மியூச்சுவல் பண்டுகளில் முதலீடு செய்ய முடியும். இத்தகைய முதலீட்டில் உங்கள் முதலீட்டைப் பாதுகாப்பது மட்டும் அல்லாமல் அதிகளவிலான லாபத்தைப் பெற முடியும்.
நேரடி பங்கு முதலீடு
இதே லிக்விட் பண்ட் திட்டத்தைப் பயன்படுத்தி எப்போது பங்குச்சந்தையில் வீழ்ச்சி அடைகிறதோ, அல்லது நீங்கள் விரும்பும் நிறுவனத்தின் பங்குகள் சரிகிறதோ அப்போது லிக்விட் பண்ட் திட்டத்தில் முதலீடு செய்த தொகையை வித்ட்ரா செய்து பங்குச்சந்தையில் முதலீடு செய்யலாம்.