இந்தியாவில் 5 மாநில தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் பெரிய அளவிலான மாற்றங்கள் இல்லாமல் தொடர்ந்து மக்களுக்குச் சாதகமான சூழ்நிலையில் இருந்து வருகிறது. இதேவேளையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பெரிய அளவிலான மாற்றங்களை எதிர்கொண்ட வேளையிலும் இந்தியாவில் 2 முறை விலை குறைக்கப்பட்டது.
இந்தச் சூழ்நிலையில் தற்போது 5 மாநிலத்தின் தேர்தல் முடிவுகள் வெளியாகி யார் ஆட்சி அமைக்கப்போகிறார்கள் என்பது தெரியவந்துள்ள சூழ்நிலையில் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயருமா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
18 நாட்கள் மாற்றமில்லை
இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த 18 நாட்களாக எவ்விதமான மாற்றமும் இல்லாமல், இன்றும் பழைய விலையிலேயே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 92.43 ரூபாயும், டீசல் விலை 85.75 ரூபாய் அளவிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
எரிபொருள் தேவை
இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் நாடு முழுவதும் மாநில அரசுகள் தொடர்ந்து பல்வேறு ஊரடங்கு அறிவிப்புகளை அறிவித்துள்ளது. குறிப்பாகப் பெரு நகரங்களில் வார இறுதி நாட்கள் லாக்டவுன், இரவு நேர லாக்டவுன் ஆகியவை பெட்ரோல் மற்றும் டீசல் தேவையைப் பெரிய அளவில் குறைத்துள்ளது என்றால் மிகையில்லை.
கச்சா எண்ணெய் விலை
இந்நிலையில் 18 நாட்களாகப் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எவ்விதமான மாற்றமும் ஏற்படாத இந்தக் காலகட்டத்தில் WTI கச்சா எண்ணெய் விலை 60.18 டாலரில் இருந்து 63.09 டாலர் வரையில் உயர்ந்துள்ளது. இதேபோல் பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 63.67 டாலரில் இருந்து அதிகப்படியாக 68 டாலர் வரையில் உயர்ந்துள்ளது.
விலை உயர்வு
இந்த விலை மாற்றம் இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் விலையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என அனைவருக்கும் தெரிந்திருக்கும் சூழ்நிலையில் இந்த விலை வித்தியாசத்தை எப்படி மத்திய அரசு சரிக்கட்டப் போகிறது. மத்திய மாநில அரசுகளுக்குப் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை மூலம் அதிகப்படியான வரி வருவாய் உள்ளது.
5 மாநில தேர்தல் முடிவுகள்
5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியான இந்தச் சூழ்நிலையில் மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் எப்போது பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்த போகிறது என்பது தான் சாமானிய மக்களின் முக்கியக் கேள்வியாக உள்ளது.
பெட்ரோல், டீசல் விலை
இந்தக் கேள்விக்குப் பதில் நாளையில் இருந்து கூடப் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படலாம், ஆனால் நாட்டின் பொருளாதார நிலை மற்றும் பரவி வரும் கொரோனா நிலையில் கருத்தில் கொண்டு சாமானிய மக்களை நேரடியாகப் பாதிக்கும் இந்தப் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வின் முடிவை ஒத்திவைக்கவும் அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது.
மத்திய மாநில அரசு வரி
டெல்லியில் இன்று ஒரு லீட்டர் பெட்ரோல் விலை 90.40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், இதில் மத்திய அரசுக்கு கலால் வரியாக மட்டும் 32.98 ரூபாயும், மாநில அரசுக்கு வாட் வரியாக 19.55 ரூபாயும் செல்கிறது.