வருமான வரி தாக்கல் செய்ய ஜூலை 31 ஆம் தேதி கடைசி தேதி என்றும் அதற்குள் வருமான வரி தாக்கல் செய்து அபராதம் மற்றும் நடவடிக்கைகளில் இருந்து பாதுகாத்து கொள்ளுங்கள் என்றும் வருமான வரித்துறை கேட்டுக்கொண்டிருக்கிறது.
இதுவரை வருமான வரி செலுத்தாதவர்களுக்கு எஸ்எம்எஸ், இமெயில் ஆகியவற்றின் மூலம் ஞாபகப்படுத்தப்பட்டும் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் வருமான வரி தாக்கல் செய்ய கடைசி தேதி நீடிக்க வாய்ப்பு இருந்தாலும் ஜூலை 31-ஆம் தேதிக்குள் கட்டிவிட அறிவுறுத்தப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட தேதிக்குள் வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ஏற்படும் ஐந்து பிரச்சனைகள் குறித்து தற்போது பார்ப்போம்.
ரூ.10,000 அபராதம்
நீங்கள் ஒவ்வொரு ஆண்டும் வருமானவரி தாக்கல் செய்பவராக இருந்தால், நீங்கள் ஜூலை 31ஆம் தேதிக்குள் வருமான வரிக் கணக்கை (ITR) தாக்கல் செய்ய வேண்டும். 2021-22ஆம் மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யுமாறு வரி செலுத்துவோருக்கு வருமான வரித்துறை நினைவூட்டுகிறது. கடைசி நிமிட அவசரத்தை தவிர்க்க, ஜூலை 31 ஆம் தேதிக்கு முன்னதாக வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்வது நல்லது. இந்த காலக்கெடுவை நீங்கள் தவறவிட்டாலும் நீங்கள் உங்கள் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யலாம். ஆனால் ரூ.10,000 அபராதம் செலுத்த வேண்டும். இது தவிர, வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வதில் ஏற்படும் தாமதம், வட்டி ஆகியவை செலுத்த வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்துகிறது.
நீங்கள் சரியான நேரத்தில் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யாவிட்டால் நடக்கும் ஐந்து விஷயங்கள் இதோ:
1) அபராதம்
உரிய தேதிக்குள் வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்யாவிட்டால் மூன்றடுக்கு கட்டண முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட தேதிக்கு அப்பால், டிசம்பர் 31க்கு முன் ரிட்டன் தாக்கல் செய்யப்பட்டால், கட்டணம் ரூ.5,000 ஆக அபராதம் என்றும், அதற்கும் மேல் என்றால் ரூ.10,000 அபராதம் செலுத்த வேண்டிய நிலை இருக்கும். இருப்பினும், வரி செலுத்துவோர் மொத்த வருமானம் ₹ 5,00,000க்கு மிகாமல் இருந்தால், செலுத்த வேண்டிய அபராத கட்டணம் ரூ.1,000 என்பது குறிப்பிடத்தக்கது.
2) திருத்துவதற்கான நேரம் குறையும்
நீங்கள் வருமான வரி தாக்கல் செய்யும்போது ஏதாவது தவறு செய்தால் அதை திருத்துவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாக இருக்கும். தற்போதைய விதிகளின்படி, திருத்தம் செய்ய உங்களுக்கு மார்ச் 2023 வரை அவகாசம் உள்ளது. நீங்கள் தாமதமாக தாக்கல் செய்து அதில் ஏதேனும் தவறு இருந்தால் அதை திருத்துவதற்கான நேரம் கிடைக்காமல் போகும் அல்லது மிகவும் குறுகிய காலம் மட்டுமே திருத்துவதற்கு கிடைக்கும்.
3) வட்டி கிடைக்காது
தாமதமாக வருமான வரித் தாக்கல் செய்தவர்களுக்கு ரீஃபண்ட் தொகைக்கு கிடைக்க வேண்டிய வட்டித் தொகை கிடைக்காது. அதேபோல் வருமான வரிக் கணக்கை உரிய தேதிக்குள் தாக்கல் செய்யாதபோது, ஐடிஆர் தாக்கல் செய்யும் தேதி வரை மாதத்திற்கு 1 சதவீதம் அல்லது மாதத்தின் ஒரு பகுதி வட்டி விதிக்கப்படும்.
4) நஷ்டம் அனுமதிக்கப்பட மாட்டாது
வருமான வரிக் கணக்கை உரிய தேதிக்குள் தாக்கல் செய்யவில்லை என்றால், வரி செலுத்துவோர் வியாபாரம் மூலம் பெறும் எந்த நஷ்டத்தையும் முன்னெடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்.
5) வருமானத்தை திரும்ப பெறுவதில் தாமதம்
ரிட்டன் தாக்கல் செய்யப்பட்டு அதன் சரிபார்ப்பு முறையாக முடிந்ததும், வருமான வரித் துறையின் பெங்களூரில் உள்ள மத்திய செயலாக்க மையம் வருமான வரிக் கணக்கை செயல்படுத்துகிறது. அதன் பிறகுதான் வரி செலுத்துபவரின் வரி பொறுப்பு அல்லது பணத்தைத் திரும்பப் பெறுவது தீர்மானிக்கப்படுகிறது. இவ்வாறு, வரி செலுத்துவோர் பணத்தைத் திரும்பக் கோரும் பட்சத்தில், வருமான வரிக் கணக்கை தாமதமாக தாக்கல் செய்வதால், வரி திரும்ப பெறுவதில் தாமதம் ஏற்படும்.