இந்தியாவில் கொரோனா பாதிப்பு மிகப்பெரிய அளவில் இருக்கும் காரணத்தால் நாட்டின் பொருளாதாரம் மற்றும் வர்த்தகச் சந்தை மிகப்பெரிய பாதிப்பை எதிர்கொண்டு வரும் நிலையில் ஜூலை மாதம் மட்டும் இந்தியாவில் சுமார் 50 லட்சம் பேர் வேலைவாய்ப்பை இழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது.
ஜூலை மாதம் வேலைவாய்ப்பை இழந்த 50 லட்சம் பேரும் நிலையான சம்பளம் பெரும் ஊழியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது, கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்து ஏப்ரல் - மே காலத்தில் வகைப்படுத்தாத துறையில் இருந்து கூலி தொழிலாளர்கள் அதிகமான அளவில் வேலைவாய்ப்பை இழந்த நிலையில் தற்போது நிலையான சம்பளத்தில் இருக்கும் ஊழியர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜூலை மாத தரவுகளோடு இந்தியாவில் இக்கொரோனா காலத்தில் மொத்தம் 1.89 கோடி பேர் வேலைவாய்ப்பை இழந்துள்ளதாக CMIE அமைப்பு தெரிவித்துள்ளது.
கொரோனா காலம்
CMIE அமைப்பின் தரவுகள் படி ஏப்ரல் மாதத்தில் நிலையான சம்பளத்தில் இருக்கும் 1.77 கோடி பேர் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். மே மாதத்தில் 1 லட்சம் பேரும், ஜூலை மாதத்தில் 50 லட்சம் பேரும் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். ஆனால் ஜூன் மாதத்தில் 39 லட்சம் பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் கிடைத்துள்ளது.
இதனால் இந்தியாவில் மொத்தமாக வேலைவாய்ப்பை இழந்துள்ளவர்களின் எண்ணிக்கை 1.89 கோடியாக உள்ளது.
மிகப்பெரிய பாதிப்பு
கொரோனா தொற்றைத் தடுக்க மார்ச் மாதம் இறுதியில் நாடு முழுவதும் லாக்டவுன் அறிவிக்கப்பட்டது. அன்று முதல் இன்று வரையில் இந்தியாவில் வேலைவாய்ப்புச் சந்தையில் எவ்விதமான முன்னேற்றமும் இல்லை, ஜூன் மாதத்தில் கணிசமான வேலைவாய்ப்புகள் உருவாகினாலும், ஜூலை மாதத்தில் ஜூன் மாதத்தை விடவும் அதிகளவிலான வேலைவாய்ப்புகளை மக்கள் இழந்துள்ளனர்.
நிலையான சம்பள வேலைவாய்ப்புகள்
இந்தியாவின் மொத்த வேலைவாய்ப்புச் சந்தையில் வெறும் 21 சதவீதம் தான் நிலையான வேலைவாய்ப்புகள், ஆனால் இந்த 21 சதவீத வேலைவாய்ப்புகள் நாட்டின் பொருளாதாரம் மற்றும் வர்த்தகச் சந்தை கட்டமைப்பிற்கு மிகவும் முக்கியமானது என CMIE அமைப்பு தெரிவித்துள்ளது.
கேள்விக்குறி
இதுகுறித்து CMIE அமைப்புக் கூறுகையில், இந்தியாவில் சம்பள வேலைவாய்ப்புகள் எளிதாக இழக்கக் கூடியது இல்லை, ஆனால் ஒருமுறை இந்தச் சம்பள வேலைவாய்ப்புகள் இழக்கப்பட்டால் திரும்பப் பெறுவது என்பது சாத்தியமற்ற ஒன்று. தற்போது சம்பள வேலைவாய்ப்புப் பிரிவில் வேலையை இழப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் நாட்டின் பொருளாதாரத்திற்கு இது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என எச்சரித்துள்ளது.
2019-20ஆம் நிதியாண்டின் நிலையை அடையவே இந்தியாவில் இன்னும் 1.9 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும் என CMIE அமைப்பு தெரிவித்துள்ளது.